search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொசவபட்டியில் ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்
    X

    கொசவபட்டியில் ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 700 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
    • ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு குவிந்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

    இதையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 700 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

    இதேபோல் மாடுபிடி வீரர்கள் 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. வீரர்கள் உறுதிமொழியுடன் 8.00 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. கோட்டாட்சியர் சக்திவேல் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை.

    அதன்பின் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது. காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின. இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் நத்தம் மூங்கில் பட்டியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 24),மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பழனி ராஜ் (26), மாட்டின் உரிமையாளர்கள் மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த நவீன் (28), தவசிமடையச் சேர்ந்த குணா (21), சிங்கராயன் (23), மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த வெற்றி (42), ஏ.வெள்ளோடு பகுதியை சேர்ந்த ஜெரோம் (35), நத்தம் புங்கம்பாடியை சேர்ந்த ராமர் (55), முனியப்பன் (23) உள்பட 15 பேர் காயமடைந்தனர். இதில் குணா, ராமர், முனியப்பன் ஆகிய 3 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்

    போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் அண்டா, குடம், சைக்கிள், குத்து விளக்கு, வயர் கட்டில், குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×