என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் கொள்ளை- போலீசார் விசாரணை

- கீழ் தளத்தின் கதவை உடைக்க கொள்ளையர்கள் முயற்சி செய்துள்ளனர்.
- மாடியில் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு காவலாளி போலீசில் புகார்
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. நேற்று இரவு இந்த வீட்டின் மதில் சுவரை ஏறி குதித்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர், வீட்டின் கீழ் தளத்தின் கதவை உடைக்க கொள்ளையர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் கதவை உடைக்க முடியவில்லை.
இதனால் படிக்கட்டு வழியாக கொள்ளையர்கள் மாடிக்கு சென்றுள்ளனர். அங்கு ஒர் அறையில் இருந்த பீரோவை உடைத்துள்ளனர். அதில் ஒன்றும் கிடைக்கவில்லை என்பதால் அங்கிருந்த டி.வியை மட்டும் எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பி சென்றுவிட்டனர். இன்று காலை காவலாளி வீட்டில் சென்று பார்த்த போது மாடியில் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக தென்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தேனியில் இருந்து மோப்பநாய் லக்கி வரவழைக்கப்பட்டது.
மேலும் கைரேகை நிபுணரும் வந்து கைரேகைகளை பதிவு செய்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரியகுளத்திற்கு வரும் ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டிற்கு சென்று ஓய்வு எடுப்பதுடன்,அங்கு அடிக்கடி கட்சி ஆலோசனை கூட்டங்களும் நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.