என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேவூர் முத்துக்குமார சுவாமி கோவில் திருவிழா
- உயிருடன் நவகண்டம் கொடுத்து சித்தர் முத்துக்குமாரசாமி ஜீவசமாதி அடைந்தார்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அனுப்பர்பாளையம் :
சேவூரில் உயிருடன் நவகண்டம் கொடுத்து சித்தர் முத்துக்குமாரசாமி ஜீவசமாதி அடைந்தார். இவருக்கு ஆண்டுதோறும் ஜீவசமாதி அடைந்த நாளான புனர்பூச நட்சத்திரத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கடந்த 3-ந் தேதி செவ்வாய்கிழமை காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
இதை தொடர்ந்து தினசரி சேவூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அமைந்துள்ள முத்துக்குமாரசாமிக்கும், முசாபரி தோட்டத்தில் அமைந்துள்ள அவரது ஜீவசமாதியிலும் காலை,மாலை வேலைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக திருக்கோவிலில், பொங்கல் வைத்து மாவிளக்குகளை பெண்கள்எடுத்து வந்தனர்.
அதை தொடர்ந்து சாமிக்கு பால் , தயிர், தேன், பஞ்சாமிர்தம் , இளநீர் உட்பட திரவிய அபிஷேகங்கள் நடைபெற்று மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
ஜீவசமாதியில் பக்தர்கள் அலகு குத்தி, ராஜவீதி, கோபி சாலை, வடக்கு வீதி, வழியாக திருவீதி உலா வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். திருவீதி உலாவில், தாமரைக்குளம் தங்கராஜ் குழுவினர் பத்ரகாளியம்மன், கருப்பராயன் வேடமணிந்து ஆடி வந்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.