என் மலர்
உள்ளூர் செய்திகள்
மீன்பிடி பகுதியில் உயர் மின்கோபுரம்- 8 மீனவ கிராம மக்கள் கொசஸ்தலை ஆற்றில் படகுடன் முற்றுகை போராட்டம்
- மின்கோபுரம் அமைய உள்ள மீனவர்களின் மீன்பிடி பகுதியில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
- கொசஸ்தலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுவதால் ஆற்றின் நீரோட்டம் தடைபடும்.
பொன்னேரி:
வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரத்தை வெளியிடத்துக்கு அனுப்ப கொசஸ்தலை ஆற்றில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக மின்கோபுரம் அமைய உள்ள மீனவர்களின் மீன்பிடி பகுதியில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு எண்ணூரை சுற்றி உள்ள மீனவ கிராம மக்கள் ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கொசஸ்தலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுவதால் ஆற்றின் நீரோட்டம் தடைபடும். மீன்பிடி தொழில் பாதிக்கும் என்று தெரிவித்தனர்.
மேலும் கொசஸ்தலை ஆற்றில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எண்ணூர் மீனவ மக்கள் நலச் சங்கத்தினர் இன்று படகுகிளல் சென்று கொசஸ்தலை ஆற்றில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று காலை எண்ணூரை சுற்றி உள்ள 8 மீனவ கிராம மக்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் படகுகளில் கருப்பு கொடியுடன் மின்கோபுரம் அமைய உள்ள இடத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட படகுகளில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து மீனவர்கள் கூறும் போது, 'கொசஸ்தலை ஆற்றில் வடசென்னை அனல்மின் நிலையம் உயர் மின் கோபுரம் அமைத்து வருகிறது.
இதனால் ஆற்றின் நீரோட்டம் தடைபடும். மீன்பிடி பகுதியில் அமைப்பதால் எங்களது வாழ்வா தாரமும் பாதிக்கப்படும். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்' என்றனர்.