search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜக செயல்படுகிறது- திருமாவளவன்
    X

    அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜக செயல்படுகிறது- திருமாவளவன்

    • அரசியலை அரசியலாக பார்க்க வேண்டும். தனிநபர் பெயரை உச்சரிப்பது அரசியல் அநாகரிகம் ஆகும்.
    • அநாகரிகம் அரசியலுக்கு என்றும் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

    கடலூர்:

    கடலூரில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    குஜராத்தில் தொங்குபாலம் அறுந்து விழுந்ததில் நூற்றுக்கும் மேற்பட்ட இறந்த குடும்பத்திற்கு இந்திய அரசும் குஜராத் மாநில அரசும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

    இதுபோல் சம்பவம் எதிர் வருங்காலங்களில் நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதோடு நீதி விசாரணை உடனடியாக அமைக்க வேண்டும். கோவையில் நடந்த சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜகவினரும், ஆளுநரும் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.

    தமிழக ஆளுநர் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக தவறான தகவல் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் தனது பதவியான ஆளுநர் என்பதை மறந்து ஆர்.எஸ்.எஸ். தொண்டராக செயல்படுகிறார். அரசியல் பேசுகிறார். ஆன்மீகம் என்ற பெயரில் மதவாதம் பேசுகிறார்.

    திராவிட இயக்கங்களுக்கு எதிராக அவதூறு பரப்புகிறார். கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தவறான கருத்து தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் உரிய விளக்கம் அளித்துள்ளார். அதில் கோவை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க. சார்பில் தெரிவிப்பது திட்டமிட்ட உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புவதாக தெரிகிறது‌.

    மத்திய அரசு பொதுவான எச்சரிக்கை அறிவித்துள்ளனர். கோவையில் நடக்க போகுது என்றோ? முஸ்லிம் நபர் இதில் ஈடுபட உள்ளார் என்றோ? யாரும் சொல்லவில்லை. மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் தமிழக உளவுத்துறை செயல்படவில்லை என அப்பட்டமாக அரசியல் ஆதாயம் தேடுவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.

    ஆனால் முதலமைச்சர் கோவை சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ விசாரிக்க உடனடியாக பரிந்துரை செய்தார்‌. கோவை வெடிப்பு சம்பந்தமாக அவதூறு பரப்பி வரும் பாஜகவை வன்மையாக கண்டிக்கிறோம் .

    கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, மாவட்டத்தின் வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் என்னை குறித்து அவதூறாக பேசி இருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

    அரசியலை அரசியலாக பார்க்க வேண்டும். தனிநபர் பெயரை உச்சரிப்பது அரசியல் அநாகரிகம் ஆகும். அநாகரிகம் அரசியலுக்கு என்றும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும் கடலூர் மாவட்டத்தில் பாஜகவினர் காலூன்ற எண்ணுகிறார்கள். காசு கொடுத்து கூட்டத்தைக் கூட்டி பேசி உள்ளனர்.

    கடலூர் மாவட்டம் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் காலூன்ற முடியாது. வட மாநிலத்தைப் போல் வன்முறையை தூண்டி அதன் மூலம் குளிர் காயிலும் என எண்ணுகிறார்கள்.

    தமிழகம் என்றும் சமூக நீதிக்கான மண்ணாகும். மதவாதம் அரசுக்கு அனுமதி இல்லை என தேர்தல் சமயத்தில் மக்கள் பாடம் கண்டிப்பாக புகட்டுவார்கள். நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மூன்று பிரச்சனைகளை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்பொழுது வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா துணை மேயர் தாமரைச்செல்வன் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×