search icon
என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • பள்ளியில் இருந்து மாணவ- மாணவிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
    • குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மறைந்துள்ளது.

    திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று இன்றுமாலை திடீரென நுழைந்தது. இதை பார்த்ததும் மாணவ- மாணவிகள் அச்சம் அடைந்தனர். உடனே பள்ளி நிர்வாகம் மாணவிகளை உடனடியாக பள்ளியில் இருந்து பத்திரமாக வெளியேற்றினர்.

    அதற்குள் அந்த சிறுத்தை அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அப்போது ஒரு நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த சிறுத்தை மரங்கள் அடர்ந்த பகுதியில் புகுந்து மறைந்துள்ளது. சிறுத்தை மறைந்துள்ள பகுதியில் இரண்டு கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதில் ஐந்து பேர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ராஜேஷ்குமாரை பிடித்து விசாரணை செய்ததில், 3 நாட்களுக்கு முன்பு பாம்பை கொன்று அதனை சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது.
    • வன விலங்கை கொன்றது, அதனை சமைத்து வீடியே எடுத்தது ஆகிய காரணத்திற்காக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், பெருமாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 30). இவர், 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்து கொன்று, பின்னர் அதன் தோலை உரித்து உடலை தண்ணீரில் அலசுவதும், அதன் பிறகு பாம்பை துண்டு, துண்டாக வெட்டி சமையலுக்கு தயார் செய்வதையும் அத்துடன் இதை சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதன் இறைச்சி மிகவும் சத்துமிக்கது என்றும் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவின்பேரில், திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன் மற்றும் வனத்துறையினர் பெருமாப்பட்டு கிராமத்துக்கு சென்று, ராஜேஷ்குமாரை பிடித்து விசாரணை செய்ததில், 3 நாட்களுக்கு முன்பு பாம்பை கொன்று அதனை சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது. அதை தொடர்ந்து வன விலங்கை கொன்றது, அதனை சமைத்து வீடியே எடுத்தது ஆகிய காரணத்திற்காக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வனவிலங்குகளை துன்புறுத்துதல், கொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். ராஜேஷ்குமார் சாரைப்பாம்பை கொன்று, அதன் இறைச்சியை சமைத்து சாப்பிட்டுள்ளார். மேலும் அதனை வீடியோவாகவும் எடுத்து உள்ளார். இது கடுமையான குற்றமாகும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

    • வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களில் மழை பெய்தது.
    • தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    ஆலங்காயம்:

    தமிழக-ஆந்திர எல்லை பகுதியில் உள்ள குப்பம், மல்லானூர், பெரும்பள்ளம், தேவராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழக பகுதிகளான புல்லூர், திம்மாம்பேட்டை, நாராயணபுரம், ஜவ்வாது ராமசமுத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    கடந்த 3 நாட்களாக திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருவதால், பாலாற்றில் மீண்டும் நீர்வரத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆந்திர அரசு கட்டிய புல்லூர் தடுப்பணை அதன் கொள்ளளவு வரை நிரம்பி தற்போது தமிழக பாலாற்றில் தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்த நீர் ஆவாரங்குப்பம், திம்மாம்பேட்டை, ராம நாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி பாலாற்றின் வழியாக வாணியம்பாடி நோக்கி வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களில் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    • அதிகாரிகள் பள்ளத்தில் இருந்த மண் மாதிரிகளை எடுத்து காவலூர் பகுதியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
    • எரிக்கல் விழுந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே அச்சமங்கலம் சொட்டை கவுண்டர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது நிலத்தில் கடந்த வாரம் வெடி விபத்து ஏற்பட்டது போன்ற பயங்கர சத்தம் கேட்டது.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது நிலத்தில் 5 அடி ஆழம், 2 அடி அகலத்தில் பள்ளம் ஏற்பட்டிருந்தது. அந்த பள்ளத்தில் நெருப்பு மற்றும் சாம்பல் போல் மண் காணப்பட்டது.

    மேலும் பள்ளத்தில் இருந்து அனல் பறக்கும் வெப்பம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வானில் இருந்து ஏதேனும் மர்ம பொருள் விழுந்ததா? என்று அச்சம் அடைந்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர் தர்ப்பகராஜ், தாசில்தார் அனந்தகிருஷ்ணன் மற்றும் வருவாய் துறையினர் அந்த இடத்துக்கு வந்து பள்ளத்தை பார்வையிட்டனர்.

    அதிகாரிகள் பள்ளத்தில் இருந்த மண் மாதிரிகளை எடுத்து காவலூர் பகுதியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே வேலூர் மாவட்ட அறிவியல் மைய அறிவியல் அலுவலர் (பொறுப்பு) ரவிக்குமார் தலைமையிலான குழுவினர் அந்த இடத்துக்கு சென்றனர். பள்ளத்தில் இருந்து எரிந்த சாம்பல் மற்றும் மண் மாதிரிகளை சேகரித்தனர்.

    வானில் இருந்து எரிகல் விழுந்ததால் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம்.

    இங்கு விழுந்த எரிகல் அளவு ஒரு மீட்டர் வரை இருக்கும். இங்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சென்னை நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை முதல் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் எரிகல் விழுந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

    அவர்கள் அந்த இடத்தை புகைப்படம் எடுத்தும், எரிகல் விழுந்த இடம் அருகே செல்பி எடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதைப்பார்த்து பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வரத்தொடங்கி உள்ளனர்.

    இதனால் எரிக்கல் விழுந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    • ரெயில் நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அறுந்து விழுந்த கிடந்த உயர் மின்னழுத்த ஒயரை சரி செய்தனர்.
    • ரெயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    ஜோலார்பேட்டை:

    கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு பெங்களூரில் இருந்து இரவு 8.18 மணிக்கு கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டது.

    நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் திருப்பத்தூர் ரெயில் நிலையம் அருகே சென்றபோது, புதுப்பேட்டை ரெயில்வே மேம்பாலம் என்ற இடத்தில் ரெயில் என்ஜினுக்கு செல்லும் உயர் மின்னழுத்த மின் சப்ளை வரததாதல் ரெயில் நடுவழியில் நின்றது.

    இதனால் சந்தேகம் அடைந்த ரெயில் என்ஜின் டிரைவர் இறங்கி தண்டவாளப் பாதையில் சென்று பார்த்த போது உயர் மின்னழுத்த ஒயர் அறுந்து துண்டாகி தண்டவாளத்தில் விழுந்து கிடந்தது.


    இது குறித்து ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக திருப்பத்தூர் ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.

    திருப்பத்தூர் ரெயில் நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அறுந்து விழுந்த கிடந்த உயர் மின்னழுத்த ஒயரை சரி செய்தனர்.

    இதனை தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் காலதாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.

    இதனால் சேலம் மார்க்கத்தில் செல்லும் ரெயில்களான சென்னை-ஆலப்புழா செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ், சென்னை-மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ், சென்னை-கோவை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், கொச்சிவேலி-கொரக்பூர் செல்லும் கொரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளிட்ட 7 ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் கால தாமதமாக இயக்கப்பட்டது. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    • தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோன் மற்றும் மர பர்னிச்சர் தயாரிக்கு கிடங்கில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    தீ விபத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்பும் ஏற்படவில்லை. அப்பகுதி முழுவதும் கரும்புகையாக சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

    தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • பட்டமங்கலத்தில் அஷ்டசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் அஷ்டசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. வியாழக்கிழமை அன்று குருபகவானுக்கு உகந்த நாளாக இருப்பதால் இந்த கோவிலில் வாரந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள், கொண்டைக்கடலை மாலை அணிவித்து விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். மேலும் இங்கு ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழாவும் சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி கடந்த மாதம் 27-ந் தேதி சிறப்பு ஹோமத்துடன் தொடங்கியது. குருப்பெயர்ச்சி விழாவையொட்டி குருபகவான், மேஷ ராசியில் இருந்து சுக்ரன் ராசியான ரிஷப ராசிக்கு நேற்று மாலை 5.11 மணிக்கு மாறினார்.

    முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வெள்ளி அங்கியில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. மூலவர் முன்பு உள்ள பகுதியில் உற்சவர் கார்த்திகை பெண்களுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

    பின்னர் நேற்று மாலை குருபகவான் ரிஷப ராசிக்கு மாறும்போது, மூலவர் மற்றும் உற்சவருக்கும் கோவில் மேல் பகுதியில் உள்ள கோபுரங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகனம் முழுவதும் தீ வேகமாக பரவியது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் எரிந்துகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது நீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரை சேர்ந்த விஷ்ணுவர்தன் கல்லூரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது அவர் ஓட்டி வந்த பைக்கில் திடீரென தீப்பற்றியது.

    இருசக்கர வாகனத்தில் இருந்து விஷ்ணுவர்தன் உடனடியாக இறங்கினார். கடும் வெயில் காரணமாக பைக் முழுவதும் தீ வேகமாக பரவியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் எரிந்துகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது நீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    திருப்பத்தூரில் கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருமண மண்டபம் பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
    • வீட்டில் இருந்த பணம் மற்றும் ஆவணங்களை வருமானவரி துறையினர் எடுத்துச் சென்றனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ். இவருடைய உறவினர் நவீன் குமார் (வயது 42).

    இவர் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி எதிரே உள்ள காந்திபேட்டை திருநாத முதலியார் தெருவில் வசித்து வருகிறார்.

    திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் டிஜிட்டல் ஸ்டுடியோ பேனர் கடை வைத்துள்ளார். மேலும் திருமண மண்டபம் பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

    நேற்று இரவு வருமானவரி துறை அதிகாரிகள் நவீன் குமார் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்தனர். அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரித்தனர்.

    மேலும் நவீன் குமார் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.40 லட்சம் வரை பணம் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த பணம் மற்றும் ஆவணங்களை வருமானவரி துறையினர் எடுத்துச் சென்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட பணம் யாருடையது என்பது குறித்து வருமான வரி துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் திருப்பத்தூர் சுற்றுலா மாளிகையில் 10-க்கும் மேற்பட்ட வருமானவரி துறையினர் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மருத்துவ குழுவினர் பசுமை நகருக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
    • கைது செய்யப்பட்ட 2 பேரையும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பசுமை நகரில் சட்ட விரோதமாக கருவில் இருப்பது ஆணா?, பெண்ணா? என கண்டறிந்து பணம் பறிப்பதாக, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணைய இயக்குனர் கண்ணகிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் மருத்துவ குழுவினர் பசுமை நகருக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது திருப்பத்தூர் அடுத்த ராச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் ஐயப்பன் (வயது 29) மற்றும் அவருடைய மனைவி கங்காகவுரி (27) ஆகிய 2 பேரும் வாடகை வீட்டில், சட்டவிரோதமாக கருவில் இருப்பது ஆணா?, பெண்ணா? என பரிசோதித்து பணம் பறித்து வந்ததும் தெரிய வந்தது.

    பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 2 பேரையும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது
    • தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

    தேர்தலை ஒட்டி, அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை முடித்து, வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    இந்நிலையில், ஆம்பூர் அருகேயுள்ள கரும்பூரில் அனைத்து கட்சியினருக்கும் சாதகமாக கட்சியின் சின்னங்களை ஒரே கட்டிடத்தில் வரையப்பட்டுள்ள நிகழ்வு, அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

    • தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் செட்டியப்பனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி ஜோலார்பேட்டை தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெயசித்ரா தலைமையிலான அதிகாரிகள் செட்டியப்பனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம், அணைக்கட்டை சேர்ந்த விஜயன் (வயது 41), முட்டை வியாபாரி என்பதும், இவர் உரிய ஆவணம் இன்றி ரூ.2,01,900 நாமக்கல்லுக்கு எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து பறக்கும் படை அதிகாரிகள், பணத்தை பறிமுதல் செய்து, நாட்டறம்பள்ளி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜராஜனிடம் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்முறையாக பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×