என் மலர்
உள்ளூர் செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை: பயிர்கள் மீண்டும் மூழ்கும் அபாயம்

- பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தன.
தஞ்சாவூர்:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பதற்கு முன்னர் கனமழை கொட்டியது. அதன்பிறகு ஒரு வாரமாக மழை இன்றி காணப்பட்டது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. இரவிலும் இதே நிலை நீடித்தது. ஆனால் இன்று அதிகாலையில் இருந்து கனமழையாக மாறி கொட்டியது. நள்ளிரவு 1 மணி முதல் காலை 7 மணி வரை கனமழையாக வெளுத்து வாங்கியது.
தஞ்சையில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
இதேபோல் வல்லம், பூதலூர், ஒரத்தநாடு, நெய்வாசல்தென்பாதி, கும்பகோணம், திருவிடைமருதூர், கீழணை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
தொடர்ந்து பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தன. மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 73.60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஒரே நாளில் 795.80 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது.
ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால் மாவட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கி பாதிப்படைந்திருந்தன.
அதன் பின்னர் மழை ஓய்ந்ததால் வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை பெய்து வருவதால் பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தற்பொழுது வரை 24 மணி நேரத்தை கடந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக திருவாரூர், கமலாபுரம், வடபாதிமங்கலம், மாங்குடி, நன்னிலம், குடவாசல், கூத்தாநல்லூர், கொரடாச்சேரி திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழையின் காரணமாக விக்கிரபாண்டியம். புழுதிகுடி. கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பா நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, பொறையாறு, திருக்கடையூர், செம்பனார்கோவில், சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்ய தொடங்கியது.
நேற்று இரவு விடிய,விடிய பரவலாக மழை பெய்த நிலையில் அதிகாலை முதல் தொடர்ந்து கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
கடலோர பகுதி பழையாறு, பூம்புகார், திருமுல்லைவாசல், தொடுவாய் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் உத்தரவுப்படி பழையாறு துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க செல்லும் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தங்களது படகுகளை மீன் பிடித்துறை முகம் அருகே பக்கிங்காம் கால்வாய் கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதேபோல் திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி பகுதி மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 10,000 க்கு மேற்பட்ட மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, சாட்டியக்குடி, திருக்குவளை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், காமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நாகை நகராட்சிக்குட்பட்ட வடக்கு பால் பண்ணை சேரி வாட்டர் டேங்க் சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் வீடுகளுக்குள் மழை நீர் புகும் அபாயம் இருப்பதுடன், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
மின்வளத்துறையினர் எச்சரிக்கை காரணமாக வேதாரண்யம் தாலுகாவில் 5 ஆயிரம் மீனவர்கள் 2-ம் நாளாகமீன்பிடிக்க செல்லாமல் ஆயிரத்துக்கு மேற்பட்ட பைபர்படகுகளை பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் வேதாரண்யம் தாலுகாவில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இடைவிடாது பெய்து வரும் கனமழையால் தஞ்சை பெரியகோவில், சிவகங்கைபூங்கா, மனோரா, வேளாங்கண்ணி கடற்கரை, தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை, முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று வழக்கத்தை விட குறைந்தளவே சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டதால் அவைகள் வெறிச்சோடின.