என் மலர்
இந்தியா

தேவேந்திர பட்னாவிஸ்
மகாராஷ்டிர வாகனங்கள் மீது தாக்குதல் - கர்நாடக முதல் மந்திரியுடன் தொலைபேசியில் பேசிய பட்னாவிஸ்
- மகாராஷ்டிர வாகனங்கள் மீது கர்நாடகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.
- மகாராஷ்டிர துணை முதல்வர் பட்னாவிஸ், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் அதிருப்தி தெரிவித்தார்.
மும்பை:
கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் இடையே எல்லை பிரச்சினை மீண்டும் பூதாகரமாகி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் ஹிரேபாக்வாடி சுங்கச்சாவடி அருகில் கர்நாடக அமைப்பினர் மகாராஷ்டிரா மாநில வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி இரு மாநிலங்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக அரசைக் கண்டித்து மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன.
இந்நிலையில், கர்நாடகாவில் மகாராஷ்டிர வாகனங்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு துணை முதல் மந்திரி பட்னாவிஸ், கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை போனில் தொடர்பு கொண்டு அதிருப்தி தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக துணை முதல்மந்திரிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், தேவேந்திர பட்னாவிஸ், கர்நாடக முதல் - மந்திரி பசவராஜ் பொம்மையை போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் ஹிரேபாக்வாடி தொடர்பாக பசவராஜ் பொம்மையிடம் அதிருப்தியை தெரிவித்தார். அதற்கு கர்நாடக முதல் மந்திரி சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகத்துக்கு வரும் வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதாகவும் பட்னாவிசிடம் உறுதி அளித்தார் என தெரிவித்தனர்.