என் மலர்
இந்தியா

இந்தி திணிப்பு: பவன் கல்யாணுக்கு பிரகாஷ்ராஜ் பதிலடி

- சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை?
- தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்?
ஜனசேனா கட்சியின் 12-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஐதராபாத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய ஜனசேனா கட்சி தலைவரான பவன் கல்யாண், "இந்தியாவிற்கு இரண்டு மொழிகள் மட்டுமல்ல, தமிழ் உள்பட பல மொழிகள் தேவை. நமது தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கு மட்டுமல்லாமல், அதன் மக்களிடையே அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் நாம் மொழியியல் பன்முகத் தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பல மொழிகள் இருப்பது நம் நாட்டிற்கு நல்லது. இதே கொள்கை தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்த வேண்டும். சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை? நிதி ஆதாயத்திற்காக தங்கள் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய அனுமதிக்கும் அதே வேளையில், தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்?
அவர்கள் பாலிவுட்டிலிருந்து பணம் விரும்புகிறார்கள், ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள். இது என்ன வகையான தர்க்கம்?" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பவன் கல்யாணின் கருத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதில் கொடுத்துள்ளார்.
அவரது பதிவில், "இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள்' என்பது அந்த மொழி மீதான வெறுப்பல்ல, 'எங்கள் தாய்மொழியையும், நம் தாயையும் பெருமையுடன் பாதுகாப்போம்' என்பதாகும். இதை யாராவது பவன் கல்யாணிடம் சொல்லுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.