search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    மராட்டிய சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. 13 மூத்த தலைவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைப்பு
    X

    மராட்டிய சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. 13 மூத்த தலைவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைப்பு

    • மராட்டியத்தில் கடும் போட்டி ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.
    • 8 மண்டலமாக பிரிக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

    மும்பை:

    மராட்டிய மாநிலத்தில் சட்டசபையின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைய இருக்கிறது. இதையொட்டி வருகிற நவம்பர் மாதம் அங்கு சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    மராட்டியத்தில் தற்போது பா.ஜ.க. ஆதரவுடன் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடந்து வருகிறது. பா.ஜ.க. சேர்ந்த பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக உள்ளார்.


    வருகிற சட்டசபை தேர்தலிலும் ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனா கட்சியுடன் தேர்தலை சந்திக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

    கடந்த தேர்தலில் ஒன்றிணைந்த சிவசேனா கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தது. ஆனால் இம்முறை சிவசேனா 2-ஆக பிரிந்து கிடக்கிறது.


    ஏக்நாத் ஷிண்டே பிரிவு பா.ஜ.க. கூட்டணியிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா பிரிவு காங்கிரஸ் கூட்டணியிலும் உள்ளது. இதனால் இம்முறை மராட்டியத்தில் கடும் போட்டி ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.

    இதையடுத்து இம்முறை ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. புது வியூகம் அமைத்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

    தேர்தலை சந்திக்க மத்திய மந்திரிகள் அஸ்வினி வைஷ்ணவ், பூபேந்திர யாதவ் உள்பட 13 மூத்த தலைவர்களிடம் பா.ஜ.க. பொறுப்புகளை ஒப்படைத்துள்ளது.

    8 மண்டலமாக பிரிக்கப்பட்டு இவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 6 மந்திரிகள் மற்றும் 7 மூத்த தலைவர்கள் ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக வெற்றி பெறுவது குறித்து கள ஆய்வு மேற்கொள்வார்கள் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கோவா மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளர் சதீஷ்தோந்த் கொங்கன் மண்டல பகுதியையும், குஜராத் மாநில பொதுச்செயலாளர் ரத்னாகர் வடக்கு மராட்டியம் பகுதிகளிலும், தெலுங்கானா பா.ஜ.க. பொதுச்செயலாளர் சந்திரசேகர் கட்சி பிரசாரத்தையும் கவனிப்பார்கள்.

    மத்திய பிரதேச மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளர் ஹிதானந்த் சர்மா மேற்கு விதர்பா பகுதிகளையும், ஆந்திர பிரதேச பா.ஜ.க. பொதுச்செயலாளர் மதுக்கர் மராத்வாடா மண்டல பகுதிகளையும் கவனிப்பார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×