search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    வாரணாசியில் போட்டியிட விரும்பிய அய்யாக்கண்ணு... நடந்தது என்ன?
    X

    வாரணாசியில் போட்டியிட விரும்பிய அய்யாக்கண்ணு... நடந்தது என்ன?

    • வாரணாசி தொகுதிக்கு வருகிற 1-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • நேற்றோடு வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார். தமிழகத்தில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு, பின்னர் விவசாயிகளை திரட்டி டெல்லியில் போராட்டம் நடத்தினார். அரை நிர்வாண போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை கையில் எடுத்தார். என்றபோதிலும் மத்திய அரசு இவரது தலைமையிலான போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை.

    இருந்தபோதிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில்தான் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட விரும்பினார்.

    வாரணாசி தொகுதிக்கு வருகிற 1-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் நேற்று (மே 14-ந்தேதி) ஆகும்.

    கடைசி நாளில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார். அய்யாக்கண்ணு கடந்த 10-ந்தேதி வாரணாசி செல்லும் ரெயில் பயணம் செய்தார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை ரெயிலில் இருந்து இறக்கிவிட்டதாக தெரிகிறது.

    இதனால் தன்னால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரத்தை நீட்டிக்க வலுயுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அய்யாக்கண்ணு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விக்ரம் நாத் மற்றும் சதீஷ் சந்திரா சர்மா ஆகிய நீதிபதிகள் "இந்த மனு சுயநலத்தை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால், இந்த மனுவை வாபஸ பெற எங்களால் அனுமதிக்க முடியும். நாங்கள் டிஸ்மிஸ் செய்ய நீங்கள் விரும்பினால், எங்களால் டிஸ்மிஸ் செய்ய முடியும்" எனத் தெரிவித்தனர்.

    மேலும், அய்யாக்கண்ணு ஏன் வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிட விரும்புகிறார்? என இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த மனு விளம்பரத்தை பெறுவதற்கானது என பார்க்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அத்துடன் அய்யாக்கண்ணு மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.

    Next Story
    ×