search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்துங்கள் - சாம் பிட்ரோடா கருத்துக்கு பாஜக கண்டனம்
    X

    'சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்துங்கள்' - சாம் பிட்ரோடா கருத்துக்கு பாஜக கண்டனம்

    • முதல் நாளிலிருந்தே சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்" என சாம் பிட்ரோடா தெரிவித்தார்.
    • சாம் பிட்ரோடாவின் இந்த கருத்தை அடுத்து காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

    இந்தியா - சீனா இடையே பல காலமாக எல்லைப் பிரச்சனை இருந்துவருகிறது. இதனால் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்யமுடியாமல் இருக்கிறது.

    அதற்குப் பதிலாக எல்.ஏ.சி. எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு அவரவர் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் ரோந்து செல்கின்றன. அவ்வப்போது இந்தியப் பகுதிகளுக்குச் சீனா பெயர் வைப்பதும், தங்களது எல்லையில் குடியேற்றங்களை நிறுவுவதுமாகச் சீனா இருக்கிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, "இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பதை பிரதமர் மோடி மறுக்கிறார். ஆனால், பிரதமரின் கூற்றை ஏற்காத ராணுவம், 4000 சதுர கி.மீ பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கூறுகிறது" என்று தெரிவித்திருந்தார்.

    அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இணைந்து சீனாவின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது

    அதற்கு பதில் அளித்த அவர், "சீனாவிடம் இருந்து நமக்கு என்ன அச்சுறுத்தல் வருகிறது என்று எனக்கு புரியவில்லை. அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். நமது அணுகுமுறை ஆரம்பத்திலிருந்தே மோதலாக உள்ளது. மேலும் இந்த அணுகுமுறை எதிரிகளை உருவாக்குகிறது. ஆனால் இது நாட்டிற்குள் ஆதரவைப் பெறுகிறது. இந்த மனநிலையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். முதல் நாளிலிருந்தே சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

    சாம் பிட்ரோடாவின் இந்த கருத்தை அடுத்து காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

    இது தொடர்பாக பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் துஹின் சின்ஹா, "காங்கிரஸ் 40,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனாவுக்கு விட்டுக்கொடுத்தவர்கள். இன்னும் சீனாவின் அச்சுறுத்தலை அவர்கள் காணவில்லை. சீனா மற்றும் பாகிஸ்தானின் நலன்களை நமது நாட்டின் நலன்களுக்கு மேலாக காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. ராகுல் காந்தியின் ரிமோட் கண்ட்ரோல் ஜார்ஜ் சோரஸ் மற்றும் சீனாவின் கைகளில் உள்ளது" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×