என் மலர்
இந்தியா

பொதுக்குழு தீர்மானத்தில் இல்லாதபோது ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து எப்படி நீக்கினார்கள்?- சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

- பொதுக்குழு விவகாரத்தில் கோர்ட்டிலும், தேர்தல் ஆணையத்திலும் பன்னீர்செல்வம் தவறான தகவல்களை அளித்து வருகிறார்.
- ஜனநாயக அடிப்படையில் பலம் பொருந்திய கட்சியை செயல்படவிடாமல் தடுப்பதை ஏற்க முடியாது.
புதுடெல்லி:
அ.தி.மு.க .பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல் முறையீடு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.
இதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தங்களது வாதங்களை முன்வைத்தனர். தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதாடி வருகிறது.
இந்த நிலையில் இன்று 5-வது நாளாக விசாரணை நடந்தது. அப்போது அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில் வாதிடும்போது, பொதுக்குழு விவகாரத்தில் கோர்ட்டிலும், தேர்தல் ஆணையத்திலும் பன்னீர்செல்வம் தவறான தகவல்களை அளித்து வருகிறார்.
ஜனநாயக அடிப்படையில் பலம் பொருந்திய கட்சியை செயல்படவிடாமல் தடுப்பதை ஏற்க முடியாது. கட்சியில் எந்த ஆதரவும் இல்லாத ஒருவர் பொதுக்குழு கூட்டத்தையும் முடிவையும் எதிர்ப்பது அடிப்படையற்றது என்று தெரிவித்தனர்.
அப்போது நீதிபதிகள் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவது என்பது பொதுக் குழு நிகழ்ச்சி நிரலில் இல்லாதபோது அவரை எப்படி கட்சியில் இருந்து நீக்கினீர்கள்? என்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கேள்வி எழுப்பினர்.
அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி வாதிடும்போது, இரட்டை தலைமையில் முடிவுகள் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் ஒற்றை தலைமை கொண்டு வரப்பட்டது. உரிய முறையில் பொதுக்குழு கூட்டி ஒற்றை தலைமை பற்றி தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்று கூறினார்.
அவைத் தலைவர் தரப்பில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் விசாரணை 2 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.