என் மலர்
இந்தியா

இந்தி திணிப்பு: மு.க.ஸ்டாலின் பதிவை பகிர்ந்து ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பிய மத்திய அமைச்சர்

- இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கிவிட்டிருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
- சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன.
இந்தி திணிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவு இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
அவரது பதிவில், "மற்ற மாநிலங்களைச் சேர்ந்த என் அன்பான சகோதரிகளே, சகோதரர்களே,
இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கிவிட்டிருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? போஜ்புரி, மைதிலி, அவதி, பிரஜ், பண்டேலி, கர்வாலி, குமாவோனி, மகாஹி, மார்வாரி, மால்வி, சத்திஸ்கர், சந்தாலி, அங்கிகா, ஹோ, காரியா, கோர்தா, கூர்மாலி, குருக், முண்டாரி மற்றும் இன்னும் பல இப்போது உயிர்வாழ்வதற்காக மூச்சுத் திணறுகின்றன.
ஒற்றைக்கல் (monolithic) இந்தி அடையாளத்திற்கான அழுத்தம் பண்டைய தாய்மொழிகளைக் கொல்கிறது. உ.பி. மற்றும் பீகார் ஒருபோதும் வெறும் "இந்தி இதயப்பகுதிகள்" அல்ல. அவற்றின் உண்மையான மொழிகள் இப்போது கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்கள்.
இது எங்கே முடிகிறது என்பது நமக்குத் தெரியும் என்பதால் தமிழ்நாடு எதிர்க்கிறது. தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது! சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை பகிர்ந்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது பதிவில், "சமூகத்தைப் பிரிக்கும் இத்தகைய மேலோட்டமான முயற்சிகளால் மோசமான நிர்வாகம் ஒருபோதும் மறைக்கப்படாது.
இந்தி பேசும் தொகுதியின் எம்பி என்ற முறையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதை ஏற்றுக்கொள்கிறாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Poor governance will never be hidden by such shallow attempts to divide society. It will be interesting to know what the Leader of the Opposition, @RahulGandhi Ji, has to say on this subject. Does he, as MP of a Hindi-speaking seat, agree? https://t.co/Oj2tQseTno
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) February 27, 2025