என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

சொன்னதை செய்து காட்டிய ரிஷப் பண்ட்: ஐதராபாத்தை வீழ்த்தியது லக்னோ
- முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 190 ரன்களை எடுத்துள்ளது.
- அடுத்து ஆடிய லக்னோ 193 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
ஐதராபாத்:
ஐபிஎல் 2025 தொடரின் 7-வது லீக் போட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் 28 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்தார். அனிகெட் வர்மா 36 ரன்னும், நிதிஷ் ரெட்டி 32 ரன்னும், கிளாசன் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
லக்னோ அணி சார்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டும், ஆவேஷ் கான், திக்வேஷ் ராதி, பிரின்ஸ் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்கிரம் ஒரு ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
மிட்செல் மார்ஷ் உடன் நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியது. குறிப்பாக, நிகோலஸ் பூரன் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தார். அவர் 26 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரிகள் உள்பட 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். ரிஷப் பண்ட் 15 ரன்னில் வெளியேறினார். கடைசியில் இறங்கிய அப்துல் சமத் அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டாஸ் வென்று சொன்னபடி ரிஷப் பண்ட் செய்து வெற்றி பெற்றுவிட்டார்.