என் மலர்
விளையாட்டு

நாயகன் மீண்டும் வரார்.. ஓய்வு முடிவை திரும்ப பெற்ற சுனில் சேத்ரி

- 2027-ம் ஆண்டு ஆசிய கோப்பைக்கான தகுதி சுற்றின் 3-வது ரவுண்டு ஆட்டம் இந்த மாதம் இறுதியில் நடக்கிறது.
- இதில் இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.
புதுடெல்லி:
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், சர்வதேச போட்டியில் அதிக கோல் (94 கோல்கள்) அடித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருப்பவருமான சுனில் சேத்ரி கடந்த ஆண்டு (2024) ஜூன் மாதம் கொல்கத்தாவில் நடந்த உலகக் கோப்பை தகுதி சுற்றில் குவைத்துக்கு எதிரான ஆட்டத்துடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஆனால் 40 வயதான சுனில் சேத்ரி இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் பெங்களூரு எப்.சி. அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சுனில் சேத்ரி தனது ஓய்வு முடிவில் இருந்து விடுபட்டு மீண்டும் சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார். இதனை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் தனது 'எக்ஸ்' தளத்தின் மூலம் நேற்று உறுதி செய்துள்ளது.
2027-ம் ஆண்டு ஆசிய கோப்பைக்கான தகுதி சுற்றின் 3-வது ரவுண்டு ஆட்டம் இந்த மாதம் இறுதியில் நடக்கிறது. இதில் இந்திய அணி 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. வங்கதேசம், ஹாங்காங், சிங்கப்பூர் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் வருகிற 25-ந் தேதி வங்கதேசத்தை மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் சந்திக்கிறது. இந்த போட்டியின் மூலம் சுனில் சேத்ரி மறுபிரவேசம் செய்கிறார்.