search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.10 அடியாக உயர்வு
    X

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.10 அடியாக உயர்வு

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோல் பில்லூர் அணை நீர்மட்டமும் உயர்ந்து வந்தது. நேற்று முன் தினம் மாலை பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.

    இதையடுத்து அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி விதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை அது 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8 அடி உயர்ந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.10 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரத்து 449 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் அணையில் இருந்து 1005 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து நீர்வரத்து இதே அளவில் இருந்தால் இன்னும் சில தினங்களில் அணை 100 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை தொட்டதும் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் வெளியேற்றப்படும்.

    இதேபோல் மாவட்டத்தின் பிரதான அணையான வரட்டுப்பள்ளம் அணையின் மொத்த கொள்ளளவு 33. 50 அடி ஆகும். தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் வரட்டுபள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இன்று காலை நிலவரப்படி வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 33.37 அடியாக உள்ளது. இதேபோல் 41.75 அடியாக இருக்கும் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.79 அடியாகவும், 30.84 அடியாக இருக்கும் பெரும் பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 18.90 அடியாக உள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×