search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரபலங்களுக்கு போலி கவுரவ டாக்டர் பட்டம்- தனியார் அமைப்பு நிர்வாகியை கைது செய்ய நடவடிக்கை
    X

    பிரபலங்களுக்கு போலி கவுரவ டாக்டர் பட்டம்- தனியார் அமைப்பு நிர்வாகியை கைது செய்ய நடவடிக்கை

    • நீதிபதி வள்ளி நாயகத்தின் கடிதத்தை போலியாக தயாரித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பயன்படுத்தி இருப்பதும் அம்பலமானது.
    • அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்கிற அமைப்பின் சார்பில் பிரபலங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா கடந்த 28-ந்தேதி நடைபெற்றது.

    இசை அமைப்பாளர் தேவா, சினிமா டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளரான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி சுதாகர் உள்ளிட்ட 40 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் விருதும் வழங்கப்பட்டது. நடிகர் வடிவேலுவும் இந்த விருது வழங்கும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் விழாவுக்கு செல்லாத நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நேரில் சென்று வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் பங்கேற்று கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் விருதுகளை வழங்கினார். இந்த நிலையில்தான் இந்த பட்டங்கள் அனைத்தும் போலியானது என்கிற அதிர்ச்சி தகவல் வெளியானது.

    இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் அளித்த பேட்டியில் மோசடியான முறையில் விழாவை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். நீதிபதி வள்ளி நாயகத்தின் கடிதத்தை போலியாக தயாரித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பயன்படுத்தி இருப்பதும் அம்பலமானது.

    இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை கே.கே.நகரை சேர்ந்த ஹரிஸ் என்பவர்தான் போலி கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கிய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.

    சர்வதேச ஊழல் தடுப்பு மனித உரிமை ஆணையத்தின் இயக்குனராக உள்ள அவர்தான் வடிவேலுவுக்கு நேரில் சென்று பட்டம் வழங்கி பாராட்டும் தெரிவித்து இருந்தார். இதைதொடர்ந்து ஹரிஸ் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஐ.பி.சி. சட்டப் பிரிவுகள் 406, 420, 426, 468, 469, 471, 488 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    போலி கவுரவ டாக்டர் பட்டம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து ஹரிஸ் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. ஹரிசை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதற்கிடையே மாம்பலம் போலீசில் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் அளித்த புகாரின் பேரிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த புகாரிலும் ஹரிஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஹரிசை கைது செய்த பின்னர் போலி பட்டமளிப்பு விழா விவகாரத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை கண்டுபிடித்து அனைவரையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×