என் மலர்
தமிழ்நாடு

அண்ணாமலை,செந்தில் பாலாஜி
வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் மேட் இன் இந்தியாவா?- அண்ணாமலைக்கு அமைச்சர் கேள்வி

- வருமானம், சொத்து விவரங்களையும் பொது வெளியில் வெளியிடவுள்ளதாக அண்ணாமலை தகவல்.
- தி.மு.க தலைவர்கள் வெளியிட தயாரா? என அண்ணாமலை கேள்வி.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் கடிகாரம் வெளிநாட்டு நிறுவனத்தை சேர்ந்தது என்றும், ரஃபேல் விமான பாகத்தில் இருந்து செய்யப்பட்டது எனவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
இது குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: தி.மு.க-வினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன். நான் பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்றதற்கு முன்பு, மே மாதம் 2021-ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுக்கால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் என என்னுடைய ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்.
ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம், எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நமது பிரதமர் மோடி அவர்களை போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்.
அன்றைய தினம் நான் பத்திரிகையாளர்களைச் சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விவரங்களையும் பொது வெளியில் வெளியிடவுள்ளேன். நான் அறிவித்ததைவிட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டு பிடித்தால், எனது சொத்துகள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார். இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் தி.மு.க-வினர் மற்றும் தி.மு.க தலைவர்கள் தமிழக சகோதர சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை என்ற கேள்வியை தவிர்த்து விடலாம் என புத்திசாலித்தனமாக மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா? வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரஃபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான்.
பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் மேட் இன் இந்தியா வா? சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து பல்பு வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.