என் மலர்
தமிழ்நாடு
குமரியில் மழை நீடிப்பு- திற்பரப்பில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
- நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்தது.
- பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.38 அடியாக இருந்தது.
நாகர்கோவில்:
வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து உள்ளது. இருப்பினும் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. இரவும் விட்டு விட்டு மழை பெய்தது. கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. சுசீந்திரம், கொட்டாரம், மயிலாடி, அஞ்சுகிராமம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று அதிகாலையில் கன மழை பெய்தது.
இதைத் தொடர்ந்து வானத்தில் கருமேகங்கள் திரண்டு மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. நாகர்கோவிலிலும் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்தது. புத்தன்அணை, ஆணைக்கிடங்கு, கன்னிமார், நிலப்பாறை பகுதிகளிலும் மழை பெய்தது. நிலப்பாறையில் அதிகபட்சமாக 8.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மலையோரப் பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. தற்பொழுது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தோடு அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.
ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் அங்கு அலைமோதி வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.38 அடியாக இருந்தது. அணைக்கு 803 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 785 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.98 அடியாக உள்ளது. அணைக்கு 120 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பெருஞ்சாணி-1.6, பாலமோர்-2.4, மயிலாடி-6.4, கொட்டாரம்-5.2, நிலப்பாறை-8.4, கன்னிமார்-1.8, பூதப்பாண்டி-1, நாகர்கோவில்-7, ஆணைக்கிடங்கு-3.2, புத்தன்அணை-1.2.