என் மலர்
தமிழ்நாடு

2024-25 நிதியாண்டில் ஜனவரி வரை ரூ. 1.13 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது: அமைச்சர் மூர்த்தி தகவல்

- 2023-2024 நிதி ஆண்டின் 31.01.2024 வரையிலான வருவாய் ரூ. 1,01,234 கோடி.
- 2024-2025 நிதி ஆண்டின் 31.01.2025 வரையில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ. 1,13,235 கோடி.
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தலைமையில் இன்று சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், வணிகவரித் துறையில் கடந்த 2023-2024 நிதி ஆண்டின் 31.01.2024 வரையிலான வருவாய் ரூ. 1,01,234 கோடி. நிகழும் 2024-2025 நிதி ஆண்டின் 31.01.2025 வரையில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ. 1,13,235 கோடி. கடந்த நிதி ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் 31.01.2025 வரை கூடுதலாக ரூ.12,001 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
மேலும் ஜிஎஸ்டி சட்டம் 2017 பிரிவு 73ன் கீழ் 2017-2018, 2018-2019 (ம) 2019-2020 ஆகிய நிதி ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட வரிவிதிப்பாணைகளில் எழுப்பப்பட்ட கேட்புகளில் நிலுவையிலுள்ள வரித்தொகையை 31.03.2025-க்குள் செலுத்தும் பட்சத்தில் நிலுவையிலுள்ள வட்டி மற்றும் தண்டத்தொகை தள்ளுபடி செய்யப்படுவதற்கான திட்டம் ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுறுத்தலின்படி நடைமுறையில் உள்ளது.
எனவே மேற்கண்ட வருடங்களுக்கு வரி நிலுவை பாக்கி வைத்துள்ள சம்பந்தப்பட்ட வணிகர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி, வரியை செலுத்தி, ஜிஎஸ்டி சட்டம் 2017-ன் பிரிவு 128A-இல் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு வட்டி மற்றும் தண்டத்தொகை செலுத்துவதிலிருந்து தள்ளுபடி பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் தங்களது கோட்ட இணை ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.