என் மலர்
தமிழ்நாடு

தே.மு.தி.க.-வுக்கு ராஜ்யசபா சீட் - உறுதி அளித்ததா அ.தி.மு.க.?

- அ.தி.மு.க.விற்கு தற்போதைய நிலையில் 2 ராஜ்யசபா சீட் கிடைக்கும். பா.ம.க தலைவர் அன்புமணியின் ராஜ்யசபா பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
- கூட்டணியில் இருந்த போது அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டை அ.தி.மு.க. ஒதுக்கியது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த தே.மு.தி.க.விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மேலும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டதாக தே.மு.தி.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் விரைவில் 6 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன. இதனால் அரசியல் கட்சியினர் இடையே ராஜ்யசபா இடம் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க.விற்கு தற்போதைய நிலையில் 2 ராஜ்யசபா சீட் கிடைக்கும். பா.ம.க தலைவர் அன்புமணியின் ராஜ்யசபா பதவிக்காலம் முடிவடைய உள்ளது. கூட்டணியில் இருந்த போது அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டை அ.தி.மு.க. ஒதுக்கியது. அன்புமணியின் பதவிக்காலம் முடிவடைவதால் அந்த இடத்தை பெற தே.மு.தி.க. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, நேற்று முன்தினம் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறும்போது, அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தபோதே தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் என கையெழுத்தானது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தே.மு.தி.க.வின் ராஜ்யசபா வேட்பாளர் யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்படும். அ.தி.மு.க. உடனான கூட்டணியில் தே.மு.தி.க தொடர்கிறது என்றார்.
இந்த நிலையில், அ.தி.மு.க. சார்பில் இதுவரை தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் குறித்து வாக்குறுதி அளிக்கவில்லை. சீட் குறித்து அப்போது பார்த்துக்கொள்ளலாம் என அ.தி.மு.க. கூறியதாகவே தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் 20-ந்தேதி அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் 5 எம்.பி. தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் எந்த இடத்திலும் ராஜ்யசபா சீட் பற்றி குறிப்பிடப்படவில்லை என கூறப்படுகிறது.
தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் என அ.தி.மு.க. சார்பில் இதுவரை குறிப்பிடப்படவில்லை. தே.மு.தி.க.வினர் மட்டுமே தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் என பேசி வருவதாக அ.தி.மு.க. தரப்பில் கூறப்படுகிறது.
கூட்டணி அமைந்தபோதே ராஜ்யசபா சீட் என ஒப்பந்தத்தில் கையெழுத்தானதாகவும் பாராளுமன்ற தேர்தலின்போதே ராஜ்யசபா சீட் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் தே.மு.தி.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் ஏற்கனவே உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ள நிலையில், ராஜ்யசபா சீட் விவகாரத்தால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.