என் மலர்
தமிழ்நாடு

தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கம்- புதிய நடைமுறை இன்று முதல் அமல்

- கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் தற்போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
- கூடுதலாக 104 பேருந்துகள் 816 பயணநடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை :
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டது. இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் தற்போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தபோதும், தாம்பரம் வரை பஸ்கள் இயக்கப்படுவதால் நெரிசலை கட்டுப்படுத்துவது சவாலாக இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல் துறை வழங்கியுள்ள பரிந்துரையின்படி தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் இன்று முதல் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.
எனவே கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலுருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி மா.போ. கழகத்தில் தற்போது 80 வழித்தடங்களில் 589 பேருந்துகள் 3795 பயணநடைகள் இயக்கப்பட்டு வருவதுடன் கூடுதலாக 104 பேருந்துகள் 816 பயணநடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.