என் மலர்
தமிழ்நாடு

சேலம் கிச்சிப்பாளையத்தில் போதை மாத்திரை விற்ற 13 பேர் கைது

- தனிப்படையினர் தீவிரமாக போதை கும்பலை கண்டுபிடித்து கைது செய்து வருகிறார்கள்.
- தப்பி ஓடிய 2 பேரை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மாநகரில் கடந்த சில மாதங்களாக போதை மாத்திரைகள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் அதனை கல்லூரி மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாங்கி பயன்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்தது.
இதைத் தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவின் குமார் அபினவ் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த தனிப்படையினர் தீவிரமாக போதை கும்பலை கண்டுபிடித்து கைது செய்து வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக சேலம் கிச்சிபாளையம் கஸ்தூரிபாய் தெரு மற்றும் குறிஞ்சி நகர் ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் தனிப்படையினர் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த பகுதியில் போதை ஊசி மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்த கும்பலை சேர்ந்த சுதர்சன் (25), தினேஷ்குமார் (24), கிஷோர் (22), சரவணன் (51), பிரகதீஸ்வரன் (50), அக்பர் (56) உட்பட 13 பேர் போலீசாரிடம் சிக்கினர்.
மேலும் அதில் தொடர்புடைய இரண்டு பேர் தப்பி ஓடி விட்டனர். இதை அடுத்து 13 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 800 போதை மாத்திரைகள் 50 சிரஞ்ச், 2 மோட்டார் சைக்கிள், 11,000 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஊசிகளையும் கைப்பற்றினர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.