search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த இடியுடன் பெய்த கனமழை
    X

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த இடியுடன் பெய்த கனமழை

    • மலைநம்பி கோவிலுக்கு இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை பக்தர்கள் செல்லவும், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.
    • சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்களில் பாதிப்பு ஏற்பட்டதால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கினர்.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இந்த மாவட்டங்களில் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டு இருந்தது.

    நெல்லை மாவட்டத்தில் மழை எச்சரிக்கை காரணமாக, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில் அதிகாரிகள் குழுவினர் நீர் நிலைகளில் பார்வையிட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதலே மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. தொடர்ந்து நேரம் செல்ல செல்ல மிதமான மழையில் தொடங்கி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது.

    காலை 7 மணி முதல் சுமார் 1 மணி நேரம் பரவலாக மழை பெய்தது. நெல்லை மாநகரில் பேட்டையில் தொடங்கி டவுன், சந்திப்பு, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, புதிய பஸ் நிலையம், பாளை பஸ் நிலையம், பாளை மார்க்கெட், சமாதான புரம், கே.டி.சி. நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    மாநகரை ஒட்டி உள்ள கிருஷ்ணாபுரம், சிவந்திபட்டி, கீழநத்தம், சீவலப்பேரி, தாழையூத்து, கங்கைகொண்டான், மூன்றடைப்பு சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    சாலைகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. காலையிலேயே மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். பாளையில் அதிகபட்சமாக 5 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மாவட்டத்தில் இன்று காலையில் இருந்து சேரன்மகாதேவி, களக்காடு, அம்பை சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்தது. திசையன்விளை, நாங்குநேரி பகுதியில் சாரல் மழை பெய்தது. வானம் மேகமூட்டமாக காட்சியளித்ததோடு, குளிர்ந்த காற்றும் வீசியது. தொடர் நீர்வரத்து அதிகரிப்பால் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், திருக்குறுங்குடி வனச்சரகத்திற்குட்பட்ட மலைநம்பி கோவிலுக்கு இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை பக்தர்கள் செல்லவும், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. குறிப்பாக ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி எஸ்டேட் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. ஊத்தில் 28 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 23 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 18 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை ஒட்டப்பிடாரம், குளத்தூர், கீழதட்டப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக ஒட்டப்பிடாரத்தில் 25 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. தூத்துக்குடி மாநகர பகுதியில் அதிகாலை முதல் பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    முத்தையாபுரம், அண்ணாநகர், பழைய பஸ் நிலையம், முள்ளக்காடு, புதுக்கோட்டை, திரேஸ்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்களில் பாதிப்பு ஏற்பட்டதால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கினர். சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இப்போது தான் உப்பு உற்பத்தி மீண்ட நிலையில், இன்று பெய்த மழையால் உரிமையாளர்கள் மிகவும் சோகம் அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்திலும் இன்று காலை முதலே ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், சிவகிரி, கடையம், குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் அறுவடை பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் மழையால் வயல்களில் சாய்ந்துள்ளது.

    Next Story
    ×