என் மலர்
தமிழ்நாடு

நா.த.க.வில் இருந்து விலகினாரா காளியம்மாள்?

- ‘உறவுகள் சங்கமம்’ எனும் நிகழ்வில் சமூக செயற்பட்டாளராக காளியம்மாள் பங்கேற்கிறார்.
- நாம் தமிழர் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணைந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாம் தமிழர் கட்சி பொறுப்பை குறிப்பிடாமல் அழைப்பிதழ்களில் தனது பெயரை குறிப்பிடுமாறு காளியம்மாள் கேட்டுக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த மாதம் 3-ந்தேதி தூத்துக்குடி மணப்பாடில் நடைபெறும் 'உறவுகள் சங்கமம்' எனும் நிகழ்வில் சமூக செயற்பட்டாளராக காளியம்மாள் பங்கேற்கிறார்.
உறவுகள் சங்கமத்தில் பங்குபெறும் அரசியல் பிரபலங்களின் பெயர், கட்சியின் பெயர், பொறுப்புகளுடன் நோட்டீசில் இடம்பெற்று உள்ளது. இந்நிகழ்ச்சியில் காளியம்மாள் தன்னை சமூக செயற்பாட்டாளர் என அடையாளப்படுத்தியுள்ளதால் அவர் நாம் தமிழர் கட்சி பொறுப்புகளில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.
முன்னதாக, நாம் தமிழர் கட்சியில் தனக்கான தனி செல்வாக்கை உருவாக்கும் முயற்சிகளை பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் மேற்கொண்டதாக கூறப்பட்ட நிலையில், சீமான், ஒட்டிக்கொண்டிருக்கும் பிசிறு என்று காளியம்மாளை சீமான் கடுமையாக விமர்சித்த ஆடியோ வெளியானது முதல் அக்கட்சியில் இருந்து விலகி இருந்தார். இருப்பினும் ஒரு சில நிகழ்ச்சிகளில் சீமானுடன் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.