search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2026-ம் ஆண்டில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி- டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
    X

    2026-ம் ஆண்டில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி- டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

    • டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி வருகிறது.
    • வருகிற டிசம்பர் மாதம் மதுரையில் புதிய தமிழக கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது.

    திருச்சி:

    புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அனைத்து மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 மாவட்டங்களில் கூட்டம் நடைபெற்று உள்ளது. இன்று காலையில் திருச்சியிலும், மாலையில் கரூரிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் 2001-ல் அப்பொழுது முதலமைச்சராக இருந்த கருணாநிதி உள் ஒதுக்கீட்டில் அருந்ததினருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு அறிவித்தார். இதன் மூலம் அருந்ததியினர் சமுதாயத்தினர் மட்டும் பலன் அடைந்தனர். மாறாக தேவேந்திரகுல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடர் பயனடைய முடியவில்லை.

    இந்த பட்டியல் இனத்தில் 71 பிரிவுகளுக்கும் சரிசமமாக 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சியில் வருகிற மே 17-ந் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சியை மாற்றி புதிய ஆட்சியை கொண்டு வர வேண்டும் .இந்த சட்டமன்றத் தேர்தலில் ஒற்றைக் கட்சி ஆட்சியை அகற்றிவிட்டு ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சியை கொண்டுவர வேண்டும். ஒற்றைக் கட்சி ஆட்சி என்று சொல்பவர்கள் 2026-ல் புறக்கணிக்கப்படுவார்கள்.

    மத்திய அரசு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வருவதற்கு முன்பு அந்தந்த மாநிலங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு ஒப்புதல் வாங்கி சட்டத்தை கொண்டு வர வேண்டும். தற்பொழுது மத்திய அரசின் மும்மொழி புதிய கல்விகொள்கையை தி.மு.க. அரசு இந்தியை மத்திய அரசு திணிக்கிறது என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

    இதற்கு மத்திய அரசு சரியான விளக்கத்தை சொல்லவில்லை. தி.மு.க.வில் உள்ள அமைச்சர்கள் நிர்வாகிகள் அனைவரும் தங்களுடைய குழந்தையை மும்மொழி அமல்படுத்தப்பட்ட பள்ளியில் படிக்க வைத்து விட்டு மாநகராட்சியில் படிக்கும் ஏழை மக்களை மும்மொழி கொள்கைகல்வி கற்க கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம். இதுதான் சமூக நீதியா பெரியார் அண்ணா வழியா ? திராவிட மாடலா?

    ஒரு மொழி கொள்கையை பின்பற்றி ஜப்பான் போன்ற நாடுகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது. மொழி வளர்ச்சிக்கு முக்கியமல்ல, மாறாக அறிவு தான் முக்கியம். ஆகவே மும்மொழிக் கொள்கை வேண்டாம் என்றால் தி.மு.க. அரசு தமிழகத்தில் ஒரு மொழி கொள்கையை அமல்படுத்த தயாரா ?

    டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் ஒரு லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது தொடர்பாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதிய தமிழக கட்சி சார்பில் கவர்னரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து வழக்கு தொடர அனுமதி கேட்டோம். அப்பொழுது இந்த விஷயத்தை எந்த அரசியல் கட்சிகளும் கண்டு கொள்ளவில்லை.

    தமிழகத்தில் தற்பொழுது கனிம வள கொள்ளை மற்றும் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது. வருகிற டிசம்பர் மாதம் மதுரையில் புதிய தமிழக கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×