என் மலர்
தமிழ்நாடு

தி.மு.க.வின் அரசியலுக்காக மாணவர்களை பலியாக்கக் கூடாது- எல்.முருகன்

- நிதியை வழங்க கோரி தமிழக அரசு இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
- இப்போது உள்ள இளைஞர்கள் தி.மு.க.வை பார்த்து அவர்கள் பின்னால் போகக்கூடியவர்கள் அல்ல.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்ஷா அபியான்) கீழ் தமிழக அரசுக்கு நடப்பாண்டில் ஒதுக்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி நிதியை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் தமிழக அரசு இணைய கையெழுத்திட்டால் மட்டுமே நிதி ஒதுக்க முடியும் என தெரிவித்துவிட்டது.
பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இணைந்தால், அது தேசியக் கல்விக் கொள்கையையும், மும்மொழி கொள்கையையும் ஏற்றுக் கொண்டதாகிவிடும் என்பதால், அதில் தமிழக அரசு இணையவில்லை. இருப்பினும் நிதியை வழங்க கோரி தமிழக அரசு இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
மத்திய மந்திரி தர்மேந்திரபிரதான், மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியை தர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
புதிய கல்விக்கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கின்ற கல்வி. தாய்மொழியை ஊக்குவிக்கின்ற கல்வியை எதற்காக எதிர்க்க வேண்டும்.
தி.மு.வி.னர் நடத்தும் பள்ளிகளில் தமிழ் சொல்லிக்கொடுக்கிறார்களா? அரசியலுக்காக போலி வேஷம் போட்டுவிட்டு, புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறது. தி.மு.க.வின் அரசியலுக்காக மாணவர்களை பலியாக்கக்கூடாது.
இது 1965 அல்ல. அவர்கள் மொழியை வைத்து ஆட்சிக்கு வந்த காலம் அல்ல.
இப்போது உள்ள இளைஞர்கள் உலகத்தை பார்த்த இளைஞர்கள். தி.மு.க.வை பார்த்து அவர்கள் பின்னால் போகக்கூடிய இளைஞர்கள் அல்ல.
நாட்டின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்ற இளைஞர்கள் என்று கூறினார்.