என் மலர்
தமிழ்நாடு

ஆளும் கட்சியை விமர்சிக்கலாம்... உருவக்கேலி கூடாது- சி.வி.சண்முகத்திற்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

- வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
- சட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் சி.வி.சண்முகம் கவனமாக பேச வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகளை பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது.
விசாரணையின்போது சி.வி. சண்முகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஆளும் கட்சியை விமர்சிக்க உரிமை உள்ளதாகவும் அதனடிப்படையிலேயே பேசியதாகவும் அரசியல் பழிவாங்கும் வகையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், விமர்சனம் என்ற பெயரில் மோசமான வார்த்தைகளை சி.வி.சண்முகம் பயன்படுத்துவதாகவும் நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும் அதுபோன்ற கருத்துகளை பேசுவதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, சட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் சி.வி.சண்முகம் கவனமாக பேச வேண்டுமென நீதிபதி கூறினார்.
எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஆளும் கட்சியை விமர்சிக்கலாம் என்றாலும் உருவக்கேலி உள்ளிட்டவை கூடாது என நீதிபதி அறிவுறுத்தினார்.