search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஸ்கேன் சென்டர் நடத்தி கருவின் பாலினத்தை கூறிய செவிலியர் டிஸ்மிஸ்- சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
    X

    ஸ்கேன் சென்டர் நடத்தி கருவின் பாலினத்தை கூறிய செவிலியர் டிஸ்மிஸ்- சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

    • வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர்.
    • மருத்துவமனைகளில் விதிமுறையை மீறி 100-க்கும் மேற்பட்டோருக்கு கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் வீராணம் கோழிப்பண்ணை பஸ் நிறுத்தம் அருகே பசுபதி ஸ்கேன் சென்டர் செயல்பட்டு வந்தது. இந்த ஸ்கேன் சென்டரில் கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கருவில் உள்ள குழந்தைகளை பரிசோதனை செய்து பாலினம் குறித்து விதிகளை மீறி தெரிவித்து வருவதாக புகார்கள் வந்தது.

    இதையடுத்து கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கடந்த 26-ந்தேதி அந்த ஸ்கேன் சென்டரில் ஆய்வு செய்தனர். அப்போது ஆச்சங்குட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பெண் டாக்டர் முத்தமிழ், தெடாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கலைமணி ஆகிய 2 பேரும் இந்த கிளீனிக்கை நடத்தி வந்ததை உறுதி செய்தனர்.

    மேலும் பல ஆண்டுகளாக ரகசியமாக பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா? என்று கண்டறிந்து ஸ்கேன் செய்ததும் அதற்கு கட்டணமாக ரூ.15 ஆயிரம் வரை இடைத்தரர்கள் மூலம் பெற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த ஸ்கேன் பரிசோதனை மையத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் ஸ்கேன் பரிசோதனை கருவிகளை பறிமுதல் செய்த மருத்துவ குழுவினர் அந்த ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர்.

    இது தொடர்பாக பெண் டாக்டர் முத்தமிழ், தெடாவூரை சேர்ந்த செவிலியர் கலைமணி, சேலத்தை சேர்ந்த செவிலியர் அம்பிகா , ஆத்தூர் பகுதியை சேர்ந்த வனிதா, வசந்தி, மங்கை, ராணி, கலை செல்வி, மகேஸ்வரி ஆகிய 9 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மேலும் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், பசுபதி ஸ்கேன் சென்டரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதனை கலைக்க சேலத்தில் உள்ள 3 தனியார் ஆஸ்பத்தி ரிகளுக்கு அனுப்பியதும் சுகாதாரத்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்ட இணை இயக்குனர் நந்தினி தலைமையில் விதிமுறையை மீறி செயல்பட்ட சேலம் டவுன் மேட்டுத்தெருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி, பொன்னம்மாப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி, பெரிய புதூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி என 3 ஆஸ்பத்திரிகளிலும் புகுந்து அதிரடியாக சோதனை செய்தனர்.

    அப்போது அந்த மருத்துவமனைகளில் விதிமுறையை மீறி 100-க்கும் மேற்பட்டோருக்கு கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 ஆஸ்பத்திரிகளும் மூடப்பட்டது. இது தொடர்பான மருத்துவ அறிக்கையை சேலம் மாவட்ட சுகாதார அலுவலர்கள் தமிழ்நாடு அரசு மருத்து இயக்குனருக்கு அனுப்பினர். இதில் பாலினம் கண்டறிந்து கூறிய ஸ்கேன் சென்டரை நடத்திய தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கலைமணியை டிஸ்மிஸ் செய்து மருத்துவ பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். மேலும் மற்றவர்கள் மீதும் விரைவில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×