search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழனியில் பெரியார் சிலை இருப்பதால் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க முடியாது- ஐகோர்ட்
    X

    பழனியில் பெரியார் சிலை இருப்பதால் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க முடியாது- ஐகோர்ட்

    • பல அரசியல் கட்சியினர் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தியுள்ளனர்.
    • பல இடங்களில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என வழக்கு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார்.

    மதுரை:

    பழனியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி திவான் மைதீன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் வரும் ஞாயிற்றுக்கிழமை 16-ந்தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் பழனி மின்வாரிய அலுவலக சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி பழனி காவல் நிலையத்தில் விண்ணப்பித்திருந்தோம்.

    தைப்பூசத்தை காரணம் காட்டி எங்களுக்கு அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே காவல் நிலையத்தின் உத்தரவை ரத்து செய்து வரும் 16-ந்தேதி மாலை அதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி தனபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளோம், அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் பல அரசியல் கட்சியினர் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தியுள்ளனர். எங்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல என வாதிட்டார்.

    அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நிதி ஆஜராகி மனுதாரர் அனுமதி கேட்கும் இடம் அருகில் பெரியார் சிலை அமைந்துள்ளது. இவர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தற்போது பெரியாரை பற்றி அவதூறான கருத்துக்களை பேசி வருகிறார். இதனால் பல இடங்களில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என வழக்கு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார்.

    எனவே இந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்றும், தற்போது தைப்பூச விழா நடைபெறுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்றும், ஆகையால் இவர்கள் மாற்று இடமாக ஆயக்குடி பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்குவோம் என தெரிவித்தார்.

    நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இதனை ஏற்க மறுத்தார். இதனை தொடர்ந்து நீதிபதி தற்போது தைப்பூச நிகழ்வு என்பது அங்கே நடைபெற்று வருகிறது. மேலும் பொதுக்கூட்டம் நடத்தும் இடம் அருகே 50 அடி தூரத்தில் பெரியார் சிலை இருப்பதால் அந்தப் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது.

    வேறு இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனக் கூறிய நீதிபதி, மனுதாரர் தரப்பில் தகவல் கேட்டு தெரிவிக்க கூறி வழக்கு விசாரணை சிறிது நேரம் ஒத்தி வைத்தார்.

    Next Story
    ×