என் மலர்
தமிழ்நாடு
தெற்கு ரெயில்வேயில் புதிய கால அட்டவணை நாளை முதல் அமல்
- கடந்த மே 2-ந்தேதி முதல் சென்னை கடற்கரை-வேலூர் கன்டோன்மெண்ட் மெமு விரைவு ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு.
- ரெயில்வேயின் புதிய கால அட்டவணை தொடர்பான அறிவிப்பில், 14 ரெயில்களின் எண்கள் மாற்றம் மட்டுமே புதியதாக இடம் பெற்றுள்ளது.
சென்னை:
ரெயில்வேயில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் விரைவு மற்றும் பயணிகள் ரெயில்களுக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்படும். இந்த நிலையில் 2024-ம் ஆண்டுக்கான ரெயில்வே புதிய கால அட்டவணை சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு, நாளை ஜனவரி 1-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தெற்கு ரெயில்வே புதிய கால அட்டவணை நாளை (ஜனவரி 1-ந்தேதி) முதல் அமலாக உள்ளது. இதில் புதிய ரெயில்கள், ரெயில்களின் சேவை நீட்டிப்பு, வேகம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம் பெற்று உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
ஆகஸ்டு 31-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையேயான சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரெயில் (20627-20628), மார்ச் 12-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை சென்ட்ரல்- மைசூரு இடையே ஓடும் மைசூர் வந்தே பாரத் ரெயில் (20663-20664) உள்பட 8 புதிய ரெயில்களின் அறிமுகம் இடம் பெற்றுள்ளன.
கடந்த மே 2-ந்தேதி முதல் சென்னை கடற்கரை-வேலூர் கன்டோன்மெண்ட் மெமு விரைவு ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு. ஜூலை 12-ந்தேதி முதல் சென்னை சென்ட்ரல் சத்யா சாய் பிரசாந்தி நிலையம்- சென்னை சென்ட்ரல் இடையேயான வாராந்திர விரைவு ரெயில் (12691-12692) ஷிவி மொக்கா டவுன் வரை நீட்டிப்பு உள்பட 19 ரெயில்கள் செல்லும் வழித்தடங்களில் நகரங்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன.
சென்னை சென்ட்ரல்-மைசூரு விரைவு ரெயிலின் எண் (12609) மாற்றப்பட்டு புதிய எண் (16551) வழங்கப்பட்டுள்ளது. மைசூரு-சென்னை சென்ட்ரல் விரைவு ரெயிலின் எண் (12610) மாற்றப்பட்டு புதிய எண் (16552) வழங்கப்பட்டு உள்ளது. இது தவிர 14 ரெயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. 45 ரெயில்களுக்கு சோதனை அடிப்படையில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
கன்னியாகுமரி-நிஜாமுதீன் இடையேயான வாரம் இருமுறை ஓடும் விரைவு ரெயில் (12641) உள்பட 56 அதிவிரைவு ரெயில்களின் வேகம் 10 முதல் 85 கி.மீ. வரை அதிகரித்து இயக்கப்பட உள்ளது. இதுபோல 46 மெயில், விரைவு ரெயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரெயில்வேயின் புதிய கால அட்டவணை தொடர்பான அறிவிப்பில், 14 ரெயில்களின் எண்கள் மாற்றம் மட்டுமே புதியதாக இடம் பெற்றுள்ளது. மற்றபடி பெரும்பாலானவை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு, அமல்படுத்தப்பட்டவையாக உள்ளன. இது பயணிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.