search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக மீனவர்கள் கைது- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
    X

    தமிழக மீனவர்கள் கைது- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

    • எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்த சம்பவம் அரங்கேறியது.
    • தமிழக மீனவர்களை கைது செய்ததோடு, ஒரு விசைப்படகையும் சிறைபிடித்து சென்றனர்.

    ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்த சம்பவம் அரங்கேறியது.

    ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்ததோடு, ஒரு விசைப்படகையும் சிறைபிடித்து சென்றனர்.

    இந்நிலையில், மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இன்று (3-2-2025) கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று (3-2-2025) கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 02.02.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் இன்று (3-2-2025) இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 27 நாட்களில், 5 வெவ்வேறு சம்பவங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 63 மீனவர்கள் மற்றும் 5 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதையும், கடந்த 2024 ஆம் ஆண்டில் 36 வெவ்வேறு சம்பவங்களில் 530 மீனவர்கள் மற்றும் 71 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது இலங்கை சிறையிலுள்ள 97 மீனவர்களும், கைப்பற்றப்பட்டுள்ள 216 மீன்பிடிப் படகுகளும் மீட்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதையும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

    இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து இதுபோன்று நடைபெற்று வருவது, இந்தச் சிக்கலான பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது என்றும், மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதும், அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவிக்காமல் இருப்பதும், கடலோரப் பகுதியில் வாழும் மீனவ சமுதாயத்தினருக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக கவலையோடு தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், இவ்வாறான தொடர் கைது நடவடிக்கைகளால் நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்கள் அச்சத்துடன் வாழ்வதுடன், பல்வேறு சிரமங்களையும் எதிர்கொள்வதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, நமது இந்திய மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவதை நிறுத்தவும், இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கவும், உடனடியாக உயர்மட்ட தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×