search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மார்ச் 14-ந்தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர் அப்பாவு தகவல்
    X

    மார்ச் 14-ந்தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர் அப்பாவு தகவல்

    • பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
    • மார்ச் 15-ந்தேதி வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் அடுத்த மாதம் மார்ச் 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 3 முழு பட்ஜெட்டுகளை (நிதி நிலை அறிக்கை) தாக்கல் செய்து உள்ளது.

    இதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தயாரித்து இறுதி செய்யும் பணியில் அரசு மும்முரம் காட்டி வருகிறது.

    கடந்த டிசம்பர் மாதம் முதல் இதற்கான பணிகள் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து என்னென்ன துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும். எந்தெந்த திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பது பற்றி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    அதைத் தொடர்ந்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஒவ்வொரு துறை அதிகாரிகளுடனும் ஆலோசித்து பட்ஜெட் தயாரித்து வருகிறார்.

    ஏற்கனவே நிதிச்சுமை உள்ள நிலையில் மத்திய அரசிடம் எதிர்பார்த்த நிதி தமிழகத்துக்கு முழுமையாக கிடைக்காத சூழ்நிலையிலும் இந்த ஆண்டுக்கான 'பட்ஜெட்' தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இன்னும் 15 நாட்களில் முழுமை பெறும் என தெரிகிறது.

    இதைத் தொடர்ந்து அடுத்த (மார்ச்) மாதம் 14-ந்தேதி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு தலைமைச் செயலகத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு சட்டசபை பேரவை விதி 26 (1)-ன்கீழ் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டத்தினை சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் வைத்து 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கூட்டி உள்ளேன். அன்றைய தினமே நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி நிலை அறிக்கையினை (பட்ஜெட்) தாக்கல் செய்வார்.

    மேலும் பேரவை விதி 193 (1)-ன்கீழ் 2025-26-ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள், பேரவை விதி 189 (1)-ன் கீழ் 2024-2025-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளையும் மார்ச் மாதம் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 4 ஆண்டுகளாக பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. அதை மேலும் உறுதி செய்ய, பெண்களுக்கான கூடுதல் திட்டங்கள் அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளது.

    2026-ம் ஆண்டில் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே அரசால் தாக்கல் செய்ய முடியும் என்பதால் மக்களைக் கவரும் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில்தான் முழுமையாக வெளியிட முடியும்.

    எனவே இந்த பட்ஜெட்டை பற்றிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×