என் மலர்
தமிழ்நாடு

மத்திய மந்திரி அமித்ஷா 31-ந்தேதி கன்னியாகுமரி வருகை

- சி.ஐ.எஸ்.எப். உருவான தினத்தை முன்னிட்டு கடற்கரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கடந்த 7-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- பேரணியை வருகிற 31-ந்தேதி கன்னியாகுமரியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நிறைவு செய்து வைக்கிறார்.
கன்னியாகுமரி:
மத்திய தொழில் பாதுகாப்புப்படையான சி.ஐ.எஸ்.எப். உருவான தினத்தை முன்னிட்டு கடற்கரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கடந்த 7-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 125 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள ராஜா ஆதித்ய சோழன் ஆர்.டி.சி.மையத்தில் இருந்து கடந்த 7-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்த பேரணியை தொடங்கி வைத்தார்.
"சுரக்ஷித் தட் சம்ருத் பாரத்" எனப்படும் பாதுகாப்பான கடல் வளம் செழிப்பான இந்தியா என்ற கருப்பொருளுடன் நடத்தப்படும் இந்த சைக்கிள் பேரணி ஒரு விளையாட்டு நிகழ்வாக மட்டுமின்றி தேசப்பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இந்தியாவின் கடற்பாதி பகுதிகளில் நடக்கும் சட்ட விரோத கடத்தல், போதைப்பொருள் வர்த்தகம், ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு கடத்தல் போன்ற அபாயங்களை மக்களுக்கு எடுத்துக்காட்டுவது இதன் முக்கிய நோக்கம். வடக்கு, தெற்கு 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பேரணி நடந்து வருகிறது. 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கடந்து மொத்தம் உள்ள 6 ஆயிரத்து 553 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவிடத்தில் வருகிற 31-ந்தேதி நிறைவு செய்கின்றனர்.

இந்த பேரணியை வருகிற 31-ந்தேதி கன்னியாகுமரியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நிறைவு செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா 31-ந்தேதி கன்னியாகுமரி வருகிறார். இதைத்தொடர்ந்து இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி நடக்கும் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) தென் மண்டல ஐ.ஜி. சரவணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது கூடங்குளம் அணுமின் நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டர் மாங்கா சவுத்ரி, உதவி கமாண்டர் அசீம் பரத்வாஜ், ஆய்வாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.