என் மலர்
உலகம்
பாகிஸ்தானில் துப்பாக்கிச் சண்டை: 12 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, 18 வீரர்கள் உயிரிழப்பு
- பாகிஸ்தானில் பாதுகாப்புப் படைக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடந்தது.
- இந்த மோதலில் பயங்கரவாதிகள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர்.
லாகூர்:
பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழு, பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்கள் பொதுமக்கள், போலீசார் உள்பட பல்வேறு தரப்பினரைக் குறிவைத்து அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் கலாட் மாவட்டத்தின் மங்கோசார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இருதரப்பிற்கும் இடையே நடந்த மோதலில் பாதுகாப்புப் படையினர் 18 பேர், பயங்கரவாதிகள் 12 பேர் என மொத்தம் 30 பேர் உயிரிழந்தனர். இந்த மோதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.