என் மலர்
உலகம்

6 பணயக்கைதிகளை விடுவிக்கிறோம் - ஹமாஸ் அறிவிப்பு

- வதந்திகளை பரப்ப வேண்டாம் என பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியதல்.
- உடல்களை மட்டுமே திருப்பி அனுப்ப வேண்டும்.
ஹமாஸ் அமைப்பை சேர்ந்த மூத்த நபர் ஒருவர், சனிக்கிழமை ஆறு உயிருள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதாகவும், வியாழக்கிழமை நான்கு பேரின் உடல்களை திருப்பி அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார். காசா பகுதிக்குள் மொபைல் வீடுகள் மற்றும் கட்டுமான பொருட்களை இஸ்ரேல் அனுமதிப்பதை அடுத்து ஹமாஸ் இவ்வாறு அறிவித்துள்ளது.
இந்த ஆறு பேர், இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு ஈடாக, போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள கடைசி உயிருள்ள பணயக்கைதிகள் ஆவர்.
ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹய்யாவின் அறிவிப்பில், இறந்தவர்களில் "பிபாஸ் குடும்பம்" - இரண்டு இளம் சிறுவர்கள் மற்றும் அவர்களின் தாயார் அடங்கும். இஸ்ரேல் அவர்களின் மரணங்களை உறுதிப்படுத்தவில்லை. மேலும் ஹமாஸின் அறிவிப்புக்குப் பிறகு "புகைப்படங்கள், பெயர்கள் மற்றும் வதந்திகளை" பரப்ப வேண்டாம் என்று பிரதமர் அலுவலகம் பொதுமக்களை வலியுறுத்தியது.
போரின் ஆரம்பத்தில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறிய ஷிரி பிபாஸ் மற்றும் அவரது மகன்கள் கிஃபிர் மற்றும் ஏரியல் குறித்து இஸ்ரேல் நீண்ட காலமாக கவலையை வெளிப்படுத்தியுள்ளது. கணவரும் தந்தையுமான யார்டன் பிபாஸ் தனித்தனியாக கடத்தப்பட்டு இந்த மாதம் விடுவிக்கப்பட்டார்.
விடுவிக்கப்பட உள்ள ஆறு பணயக்கைதிகள் எலியா கோஹன், தல் ஷோஹாம், ஓமர் ஷெம் டோவ், ஓமர் வென்கெர்ட், ஹிஷாம் அல்-சயீத் மற்றும் அவேரா மெங்கிஸ்டு என்று பணயக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்கள் மன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வாரம் ஆறு பேரின் விடுதலையும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை துரிதப்படுத்தும். சனிக்கிழமை ஹமாஸ் உயிருள்ள மூன்று பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், ஒரு வாரம் கழித்து மேலும் மூன்று பேரை விடுவிக்கப்பட வேண்டும். ஒப்பந்தத்தின் படி, முதற்கட்டமாக இறந்தவர்களின் உடல்களை மட்டுமே திருப்பி அனுப்ப வேண்டும் என்று அது கூறியது.
பணயக்கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பலர் கொடிய தாக்குதல்களுக்காக ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஆவர். மற்றவர்கள் குற்றச்சாட்டு இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, போர் தொடங்கியதிலிருந்து காசாவில் இருந்து கைப்பற்றப்பட்ட அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது.