என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பாலஸ்தீனம்
- பலியானவர்களில் கர்ப்பிணி, அவரது கணவர், 3 வயது குழந்தை ஆகியோரும் அடங்குவர்.
- குழந்தையின் மார்பின் குறுக்கே டேப்பில் தியாகி சப்ரீன் அல்-சகானியின் குழந்தை என்று எழுதப்பட்டிருந்தது.
காசா:
பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள்.
இந்த நிலையில் காசாவின் ரபா நகரில் நேற்று இரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இதில் 22 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் கர்ப்பிணி, அவரது கணவர், 3 வயது குழந்தை ஆகியோரும் அடங்குவர். உயிரிழந்த கர்ப்பிணியான சப்ரீன் அல்-சகானி 30 வார கால கர்ப்பமாக இருந்தார். அவரது வயிற்றில் இருந்து குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்து டாக்டர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தனர். பின்னர் அந்த பெண் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வருகிறார்கள்.
குழந்தையின் மார்பின் குறுக்கே டேப்பில் தியாகி சப்ரீன் அல்-சகானியின் குழந்தை என்று எழுதப்பட்டிருந்தது. 1.4 கிலோ எடையுள்ள குழந்தை, அவசரகால பிரிவில் பிரசவிக்கப்பட்டு உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. குழந்தை மூன்று முதல் நான்கு வாரங்கள் மருத்துவமனையில் இருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். சகானியின் மகள் மலக், தனது புதிய சகோதரிக்கு அரபு மொழியில் ரூஹ் என்று பெயரிட விரும்பினாள் என்று அவரது உறவினர் ரமி அல்-ஷேக் தெரிவித்தார்.
- ரஃபா நகரில் காசாவின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
- இந்த நகரில் மீது தாக்குதல் நடத்தினால்தான் தங்களது முழு நோக்கம் நிறைவடையும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், காசாவின் வடக்குப்பகுதியை ஏறக்குறைய உருக்குலைத்துவிட்டது. தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரும் இஸ்ரேல் ராணுவத்தின் கொடூர தாக்குதலுக்கு உள்ளானது. தங்களது இலக்கு முடிந்து விட்டதால் இந்த நகரில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்திருந்தது.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போரின் நோக்கம் நிறைவேற ரஃபா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இந்த நகரில் சுமார் 10 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ரஃபாவின் அருகில் உள்ள டெல் சுல்தான் நகரின் மேற்கு பகுதியில் மக்கள் வசிக்கும் இடத்தின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை (நேற்று) நடத்திய தாக்குதலில் ஆறு குழந்தைகள் உள்பட 9 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட ஆறு குழந்தைகள், இரண்டு பெண்கள், ஒரு ஆண் ஆகியோரின் உடல்கள் ரஃபாவில் உள்ள அபு யூசெப் அல்-நஜ்ஜர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்தவர்களின் உடல்களை கட்டிப்பிடித்து உறவினர்கள் கதறியது நெஞ்சை பிளப்பதுபோல் இருந்தது.
காசா எகிப்பு எல்லையில் அமைந்துள்ளது. காசாவில் மொத்த மக்களை தொகையான 2.3 மில்லியனில் பாதிக்கும் மேற்பட்டோர் ரஃபாவில் வசித்து வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் மற்ற பகுதிகளில் இருந்து இங்கு குடிபெயர்ந்துள்ளனர்.
- ஹமாஸ் அமைப்பினர் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளனர்.
- 100 பேர் ஏழு நாட்கள் போர் நிறுத்தத்தின்போது விடுவிக்கப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் ஆறு மாதங்கள் முடிவடைந்து ஏழாவது மாதமாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
ஒரே ஒருமுறை மட்டும் ஏழுநாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டு சுமார் 100 பிணைக்கைகள் விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடையவில்லை.
கத்தார், அமெரிக்கா போன்ற பல நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டும் பலன் அளிக்கவில்லை இந்த நிலையில் தற்போது புதிய திட்டம் ஒன்றை ஹமாஸ் அமைப்பு முன்மொழிந்துள்ளது.
ஆறு வாரங்கள் தாக்குதலை நிறுத்தினால் பிணைக்கைதிகளை விடுவிக்க தயார் என புதிய முன்மொழிவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.
ஆனால் எந்த முடிவை இஸ்ரேல் ஏற்குமா? எனத் தெரியவில்லை. காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரானை எதிர்கொள்வதற்கு ஆயத்தம் ஆகி வருகிறது இஸ்ரேல்.
இதனால் தனது பார்வையை ஈரான் மீது பதித்துள்ள இஸ்ரேல், இதற்கு சம்மதம் தெரிவிக்குமா என்பது தெரியவில்லை.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்ற அவர்கள், 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதனைத்தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதலில் காசா முனையில் உள்ள 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் 100 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிலர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். ரஃபா மீது தங்கள் தாக்குதல் நடத்தினால்தான் ஹமாஸ்க்கு எதிரான இலக்கு நிறைவடையும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஃபா பகுதியில் 10 லட்சம்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் வசித்து வருகின்றனர். ரஃபா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
- இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உள்ள 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
- 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, இஸ்ரேல் ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்து காசா முனை மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கிய இந்த தாக்குதல் இன்றும் நீடித்துக் கொண்டு வருகிறது.
இந்த தாக்குதலில் காசாவில் உள்ள 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை ஹமாஸ் அமைப்பின் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. மேலும், உறவினர்கள் சமூக வலைத்தளங்களில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மூன்று மகன்களுடன் மூன்று பேரன்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பழி வாங்கும் எண்ணத்தில் கொலை செய்ததாக இஸ்ரேல் மீது இஸ்மாயில் ஹனியே குற்றம் சாட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷாதி முகாமில் இருந்தபோது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இஸ்மாயில் ஹனியே தற்போது கத்தாரில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த டிசம்பர் மாதம் கான் யூனிஸ் நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது.
- ஹமாஸ் அமைப்பின் ஏராளமான சுரங்கப்பாதைகளை வெடிவைத்து தகர்த்து அழித்தனர்.
ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தியது. காசா முனையின் வடக்குப் பகுதியில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் படிப்படியாக தெற்குப் பகுதியிலும் தாக்குதல் நடத்த தொடங்கியது.
பாலஸ்தீன மக்கள் அதிக அளவில் வசித்து வந்த கான் யூனிஸ் நகர் மீது கடந்த டிசம்பர் மாதம் தாக்குதல் நடத்த தொடங்கியது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், கான் யூனிஸ் மீது தாக்குதல் நடத்தினால்தான் எங்களது நோக்கம் நிறைவேறும் எனக் கூறியது.
சுமார் நான்குமாதம் கடுமையான வகையில் கான் யூனிஸ் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. வான்வழியாக தாக்குதல் நடத்திய நிலையில், தெருத்தெருவாக சோதனை நடத்தி ஹமாஸ் அமைப்பினரை தேடினர். ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதைகளை தேடிப்பிடித்து அழித்தனர்.
ஹமாஸ் அமைப்பினரின் ஆதிக்கம் அதிகமாக உள்ள இடமாக கான் யூனிஸ் கருதப்பட்டது. இங்குள்ள வீடுகள், கட்டடங்கள் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் தரைமட்டமாகின.
தற்போது இஸ்ரேல் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் உதவிப்பொருட்கள் வழங்கிய நபர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதில் சிலர் உயிரிழந்தனர். இதனால் அமெரிக்கா தனது கண்டனத்தை வெளிப்படுத்தியது. இஸ்ரேல் ராணுவம் பொதுமக்களை பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தது.
இந்த நிலையில் யூனிஸ் கான் நகர் மீது தாக்குதல் நடத்தியதற்கான நோக்கம் முடிவடைந்து விட்டது. இதனால் கான் யூனிஸ் நகரில் இருந்து வெளியேறுகிறோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனால் கான் யூனிஸ் நகரில் வசித்த வந்த மக்கள் தங்களுடைய சொந்த நகருக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். ஆனால் கான் யூனிஸ் நகர் தனது அடையாளத்தை இழந்துள்ளது. கட்டடங்கள் இருந்த இடம் தெரியாத வகையில் சிதைக்கப்பட்டுள்ளன.
வீடுகள் இருந்த சுவடே தெரியவில்லை என நேரில் சென்று பார்த்த பாலஸ்தீனர்கள் தங்களது வேதனைகளை தெரிவித்துள்ளனர்.
கான் யூனிஸ் நகரில் இருந்து வெளியேறிய முகமது அப்தெல்-கானி தற்போது கான் யூனிஸ் நகர் திரும்பியுள்ளார். அவர் "பல பகுதிகள் குறிப்பாக நகரின் மையப் பகுதிகள் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறியுள்ளது. என்னுடைய வீடு மற்றும் என்னுடைய வீடு அருகில் இருந்த வீடுகள் தரைமட்டமாகியுள்ளன" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
நஜ்வா அயாஷ் என் பெண் "தனனுடைய குடும்பம் வசிக்கும் 3 மாடிக்கு செல்ல முடியவில்லை. ஏனென்றால் படிகள் அனைத்தும் இடிந்துள்ளன" எனத்தெரிவித்துள்ளார்.
பாசல் அபு சாசர் "அவர்கள் (இஸ்ரேல் ராணுவம்) எதையும விட்டுச் செல்லவில்லை. வாழ்வதற்கான ஏதும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
- இது ஒரு சோகமான சம்பவம். துரதிர்ஷ்டமானது மற்றும் திட்டமிடப்படாதது- நேதன்யாகு
- பொதுமக்களைப் பாதுகாப்பதில் ‘போதுமான நடவடிக்கையை இஸ்ரேல் செய்யவில்லை- ஜோ பைடன்
இஸ்ரேல்- காசாவில் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 6 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் அப்பாவி மக்கள் உள்பட 32 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே மத்திய காசாவில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 5 பேர் பலியானார்கள்.
கார் மீது குண்டு வீசப்பட்டதில் அரசு சாரா தொண்டு நிறுவனமான வேர்ல்டு சென்ட்ரல் கிச்சான் அமைப்பின் வெளிநாட்டு பணியாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் தொண்டு நிறுவன பணியாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் தவறுதலாக தாக்குதல் நடத்தி விட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறும்போது, "உதவிப் பணியாளர்கள் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வு கடுமையான தவறு. சிக்கலான சூழ்நிலைகளில் தவறாக அடையாளம் காணப்பட்டதன் விளைவாக இது ஏற்பட்டுவிட்டது. இது நடந்திருக்கக் கூடாது. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும்" என்றார்.
இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறும்போது, "இது ஒரு சோகமான சம்பவம். துரதிர்ஷ்டமானது மற்றும் திட்டமிடப்படாதது. ஆனால் போர் காலத்தில் இது போன்று நடக்கும்" என்றார்.
உதவி பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. ஸ்பெயினும் போலந்தும் இஸ்ரேலிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இந்த விவகாரத்தை அவசரமாக விசாரிக்க இஸ்ரேலை இங்கிலாந்து வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும்போது, பொதுமக்களைப் பாதுகாப்பதில் 'போதுமான நடவடிக்கையை இஸ்ரேல் செய்யவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
- வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
- 2014-ம் ஆண்டு இஸ்ரேல் போர் தொடுத்த பிறகு, காசாவின் மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்டவர்.
பாலஸ்தீனத்தின் பிரதமராக முகமது இப்ராஹிம் ஷ்டய்யே இருந்து வந்தார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னதாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தி ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், தனது பொருளாதார ஆலோசகரான முகமது முஸ்தபாவை அந்நாட்டின் பிரதமராக நியமித்துள்ளார். இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் (West Bank) பாலஸ்தீன அதிகாரிகத்திற்கு உட்பட பகுதியில் புதிய அரசை உருவாக்குவதில் இவரது பங்கு முக்கியமானதாக இருக்கும்.
முகமது முஸ்தபா வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படித்தவர். பாலஸ்தீன விடுதலை அமைப்பின் சுதந்திர செயற்குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
பொருளாதார விவகாரத்திற்கான துணை பிரதமராக பணியாற்றியுள்ளார். பாலஸ்தீன முதலீடு நிதி குழுவில் பணியாற்றியுள்ளார். உலக வங்கியில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியவர்.
குவைத் அரசுக்கு ஆலோசகராகவும் இருந்துள்ளார். சவுதி அரேபியாவின் இறையாண்மை சொத்து நிதி, பொது முதலீட்டு நிதி ஆகியற்றின் ஆலோசகராகவும் இருந்துள்ளார். 2014-ம் ஆண்டு இஸ்ரேல் போர் தொடுத்த பிறகு, காசாவின் மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்டவர்.
- ஹமாஸ் அமைப்பை அழிக்க ரபா மீது தாக்குதல் நடத்துவம் அவசியம் என்கிறது இஸ்ரேல்.
- சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பாலஸ்தீன மக்களுக்கு ஒரு இடத்தை உருவாக்க இஸ்ரேல் திட்டம்.
கடந்த ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது.
கடந்த ஐந்து மாதங்களாக இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.
முதலில் எல்லை அருகில் உள்ள வடக்குப் பகுதியை குறிவைத்து இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்கல் நடத்தியது. இதில் வடக்கு காசா முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. இங்கு வசித்து வந்த பெரும்பாலான மக்கள் தெற்கு பகுதிக்கு சென்றுள்ளனர்.
வடக்கு காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக மற்ற பகுதிகளிலும் தங்களது தாக்குதலை விரிவுப்படுத்தியது. காசாவின் முக்கிய நகரான ரஃபாவை தவிர்த்து ஏறக்குறைய மற்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை தங்களது தாக்குதல் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. காசாவில் உள்ள மொத்த மக்கள் தொகையான 2.3 மில்லியனில் 1.4 மில்லியன் மக்கள் ரஃபா நகரில் உள்ளன. ரஃபா பாதுகாப்பான பகுதியை என மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் இங்கு வந்து தஞ்சம் அடைந்துள்ளனர்.
இங்கு தாக்குதல் நடத்தப்பட்டால் பொதுமக்கள் என்ன ஆவார்கள் என்று நினைத்து பார்க்க முடியாத அச்சம் ஏற்பட்டுள்ளத. இந்த நிலையில் தாக்குல் நடத்தப்பட உள்ளதால், மக்கள் வெளியேறுமாறு உத்தரவிட இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசா முனைக்கு உதவிப்பொருட்கள் கொண்டு செல்வதற்கு ரஃபா எல்லை முக்கியமானதாக திகழ்கிறது. இந்த நிலையில் ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பாலஸ்தீன மக்கள் உதவிப் பொருட்கள் கிடைக்காமல் மிகவும் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஏற்கனவே மக்கள் பட்டினி விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பது என்ற இஸ்ரேலின் இலக்கை எட்ட ரஃபா தாக்குதல் முக்கியமானது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 31 ஆயிரம் பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 80 சதவீத மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என காசாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இஸ்ரேல் தலைமை ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகையில் "1.4 மில்லியன் மக்கள் அல்லது அதில் குறிப்பிட்டுள்ள அளவு மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பதை நாங்கள் உறுதி செய்வது அவசியம். எங்கே?. சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து அதற்கான ஒரு இடத்தை உருவாக்குவோம். ஹமாஸ் நிர்வகித்து வரும் நான்கு பட்டாலியன்களை அழிக்க இஸ்ரேல் ராணுவம் ரஃபா மீது தாக்குதல் நடத்த தயாராகவதற்கு மக்களை வெளியேற்றுவது முக்கிய பகுதியாகும்" என்றார்.
- தரை வழியாக கொண்டு செல்லும் உதவிப் பொருட்களை மக்கள் முற்றுகையிடுவதால் வான்வழியாக வினியோகம்.
- வான் வழியாக உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மக்கள் இருக்க இடம் இல்லாமல், உணவு இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. காசாவில் நான்கில் ஒருவர் பசியால் வாடுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் கடும் கட்டுப்பாட்டால் மனிதாபிமான உதவிகள் மக்களுக்கு சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் நிவாரணப் பொருட்கள் சென்ற லாரிகளை மக்கள் முற்றுகையிட்டதால், இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இதனால் வான்வழியாக உணவு மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நேற்று காசாவின் வடக்குப்பதியில் உள்ள ஷாதி என்ற பகுதியில் பாராசூட் மூலம் உணவு பொட்டலங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன. அப்போது ஒரு பாராசூட் விரியாமல் பழுதானதாக தெரிகிறது. அந்த பாராசூட் உணவுப் பொருட்களுடன் மக்கள் கூடியிருந்த பகுதிக்குள் விழுந்துள்ளது. இதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர். அத்துடன் உணவுப் பொட்டலங்கள் மக்களின் தலையில் விழுந்து பலர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பசியால் வாடும் மக்கள் உணவு பொட்டலங்கள் வாங்க காத்திருக்கும்போது உயிரிழக்கும் சம்பவம் வேதனை அளிப்பதாக உள்ளது.
"வான் வழியாக பயனற்ற உணவு வினியோகம், மனிதாபிமான சேவையை காட்டியிலும் இது விளம்பரம் படுத்துவதற்கான பிரசாரம். நிலப்பரப்பு எல்லை வழியாக உதவிப் பொருட்கள் கொண்டு வந்த வழங்கப்பட வேண்டும் என காசா அரசின் மீடியா அலுவலகம் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளது.
மேலும் "வான்வழியாக உணவு பொட்டலங்கள் போடும்போது அது மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என எச்சரித்தோம். தற்போது நடத்திருப்பது உணவுப் பொட்டலங்கள் மக்களின் தலையில் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
- லாரிகளில் உணவுப் பொருட்கள் கொண்டு சென்றதும் மக்கள் முற்றுகையிட்டதாக தகவல்.
- கூட்ட நெரிசல் காரணமாக அச்சுறுத்தல் இருந்ததாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது- இஸ்ரேல் ராணுவம்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் 4 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் காசாவில் மட்டும் இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இஸ்ரேலுக்கு நாளுக்கு நாள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருவதால் காசாவில் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. இதனிடையே போரின் விளைவால் காசா மக்கள் தொகையில் கால்வாசி பேர் பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாகவும், பல லட்சம் மக்கள் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் பரிதவித்து வருவதாகவும் ஐ.நா. கவலை தெரிவித்தது.
இதனால் குறைவான அளவில் கிடைக்கும் நிவாரண பொருட்களை பெற மக்கள் முண்டியடிப்பதாகவும், ஒரு சில இடங்களில் மக்கள் நிவாரண பொருட்களை கொள்ளையடித்து செல்வதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் காசாவின் மேற்கு பகுதியில் உள்ள நபுல்சி ரவுண்டாபவுட் என்ற இடத்திற்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வருவதாக வந்த தகவலின் பேரில் அவற்றை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
நிவாரண பொருட்களை கொண்டு வரும் லாரிகளை அவர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். நிவாரணப் பொருட்கள் வந்த லாரிகளுடன் இஸ்ரேல் ராணுவ வாகனங்களும் வந்தன. லாரி அப்பகுதிக்கு வந்ததும், மக்கள் லாரியை முற்றுகையிட்டு பொருட்களை வாங்க முண்டியடித்தனர். அப்போது கூட்ட நெரிசலில் சிலர் சிக்கி காயம் அடைந்ததாக தெரிகிறது.
இதனால் இஸ்ரேல் ராணுவம் கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டதாக தெரிகிறது. அப்போது இஸ்ரேல் ராணுவம் திடீரென மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதில் 104 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுள்ளனர். 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை உறுதி செய்த இஸ்ரேல் ராணுவம் "நிவாரணப் பொருட்கள் வாங்குவதற்கான மக்கள் முண்டியடித்தனர். அப்போது அருகில் இருந்து இஸ்ரேல் ராணுவ வாகனத்தை நோக்கி வந்தனர். அவர்கள் ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தும் விடுப்பதாக நம்பப்பட்டது. இதனால் தங்களை காப்பாற்ற துப்பாக்கிச்சூடு நடத்தினர்" எனத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே காசாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கான உபகரணங்கள் இன்றி தள்ளாடி வரும் நிலையில் தற்போதைய இந்த கொடூர சம்பவத்தால் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், கழுதை வண்டியில் பலியானவர்களின் உடல்கள் கொண்டு செல்லப்படும் பரிதாப நிலையை காண முடிந்தது.
இதற்கிடையே அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் உடனடி போர் நிறுத்தம் தேவை. பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காசாவில் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் இது ஒரு படுகொலை என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
- காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
- தொடர் தாக்குதல் எதிரொலியாக ராஜினாமா முடிவை எடுத்திருப்பதாக முகமது ஷ்டய்யே கூறியுள்ளார்.
காசா:
பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பாலஸ்தீனத்தில் திடீர் திருப்பமாக அந்நாட்டு பிரதமர், பதவியை ராஜினாமா செய்வதாக முகமது ஷ்டய்யே அறிவித்தார்.
பாலஸ்தீனத்தில் தனது தலைமையிலான அரசை கலைத்துவிட்டு புதிய அரசு பொறுப்பேற்க பிரதமர் முகமது ஷ்டய்யே விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாசிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் எதிரொலியாக இந்த முடிவை எடுத்துள்ளேன். காசாவில் போர் முடிவுற்ற பின், அதற்குப் பிந்தைய சூழலில் பாலஸ்தீனியத்தை நிர்வகிக்க புதிய அரசு அமைவதே சிறந்ததாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
- வடக்கு காசா பகுதியில் இருந்து வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது
- பசியின் காரணமாக உணவு வாகனங்களை கும்பல்கள் தாக்கி களவாடுகின்றன
கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் 130 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேலிய ராணுவ படையினர் (Israeli Defence Forces) ஹமாஸ் (Hamas) அமைப்பினரை அழிக்க வான்வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும், ஹமாஸ் அமைப்பினரின் வசம் உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகளை காசா பகுதி முழுவதும் அனைத்து இடங்களிலும் இஸ்ரேலிய ராணுவம் தேடி வருகின்றனர்.
இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையை அடுத்து வடக்கு காசாவில் இருந்து மக்களில் பலர் கூட்டம் கூட்டமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர்.
அங்கிருந்து செல்லாமல் தங்கிய மக்களுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் (World Food Programme) எனும் சர்வதேச அமைப்பின் வழியாக உணவு வழங்கப்பட்டு வந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வடக்கு காசாவில் உணவுகளை வினியோகிக்க சென்ற இந்த அமைப்பினரின் வாகனங்களை பசி மற்றும் வறட்சி காரணமாக காசா மக்கள் சூழ்ந்து கொண்டு உணவு பண்டங்களை சூறையாடினர்.
ஒரு சில இடங்களில் வாகன ஓட்டுனர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.
இந்நிலையில், அங்கு நிலவும் அசாதாரணமான சூழலால், உணவு வழங்குவதை உலக உணவு திட்ட அமைப்பினர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இது குறித்து உலக உணவு திட்ட அமைப்பு அறிவித்திருப்பதாவது:
வடக்கு காசா பகுதியில் வன்முறையும், கட்டுப்பாடற்ற சூழலும் நிலவுகிறது. அங்கு சட்டம் ஒழுங்கற்ற நிலை உருவாகி விட்டது.
உணவுக்காக கும்பல் கும்பலாக தாக்குதலில் ஈடுபடுகின்றனர். துப்பாக்கிச் சூடு மற்றும் உணவு களவாடப்படுதல் சம்பவங்கள் அதிகரித்து விட்டது.
பாதுகாப்பற்ற சூழலில் உள்ள மக்கள் சிறிது சிறிதாக பசி மற்றும் நோய் தாக்குதல் ஆகியவற்றால் தீவிர துன்பத்தை அனுபவிக்கின்றனர்.
உணவு வினியோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு கோரியுள்ளோம்.
விரைவில் வினியோகம் மீண்டும் தொடங்கப்படும்.
இவ்வாறு அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
?STATEMENT: WFP is pausing the delivery of lifesaving food assistance to Northern Gaza until safe conditions are in place for our staff and the people we are trying to reach.
— World Food Programme (@WFP) February 20, 2024
Our decision to pause deliveries to the north has not been taken lightly. The safety and security to… pic.twitter.com/eNc7d3kZDZ
வடக்கு காசாவில் உணவு, குடிநீர், மருந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பஞ்சம் நிலவுகிறது.
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் பாலஸ்தீனத்தில் இதுவரை 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்