என் மலர்
உலகம்

மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி: மழையிலும் குவிந்த மக்கள்

- மொரீஷியசில் தலைவர்கள், இந்திய சமூகத்தினரை சந்தித்து உரையாடினார்.
- மொரீஷியஸ் நாட்டின் உயரிய விருது இன்று வழங்கி கவுரவிக்கப்பட்டது.
போர்ட் லூயிஸ்:
மொரீஷியஸ் நாட்டின் 57-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மொரீஷியசுக்கு நேற்று புறப்பட்டார். தீவு நாடான மொரீஷியசை சென்றடைந்ததும், பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியின் வருகையை சிறப்பிக்கும் வகையில் பேசிய அந்நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம், மொரீஷியஸை இன்னும் மேம்படுத்தும் நோக்கில் நாட்டில் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்காக இந்திய அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நீங்கள் எப்போதெல்லாம் எங்கள் நாட்டுக்கு வருகிறீர்களோ, அப்போது எங்களுடைய நாட்டை நன்றாக வளப்படுத்துகிறீர்கள். மொரீஷியஸ் நாட்டில் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் நீங்கள் ஆற்றிய பங்கு உண்மையில் பெரிதும் பாராட்டத்தக்கது என பிரதமர் மோடிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, தி கிரேட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்டு கீ ஆப் தி இந்தியன் ஓசன் என்ற மொரீஷியஸ் நாட்டின் உயரிய விருது இன்று வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருது பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார்.
இந்த விருது பெற்ற பின்பு பேசிய பிரதமர் மோடி, இது எனக்கான கவுரவம் மட்டும் அல்ல. 140 கோடி இந்தியர்களின் கவுரவம். இந்த விருது, இந்தியா மற்றும் மொரீஷியஸ் இடையே நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கலாசார மற்றும் வரலாற்று பிணைப்புகளுக்கான அடையாளம் ஆகும் என தெரிவித்தார்.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின்போது மழை கொட்டியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பிரதமர் மோடி விருது பெறும் நிகழ்வை காண்பதற்காக மக்கள் கூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.