என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "AIDS Day"
- திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு மற்றும் சமபந்தி போஜனம் நடைபெற்றது
- கலெக்டர் மா.பிரதீப் குமார், மருத்துவ சிகிச்சைக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும், ரத்ததான முகாம் நடத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் நினைவு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்
திருச்சி:
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உலக எய்ட்ஸ் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் உறுதிமொழி ஏற்பு மற்றும் சமபந்தி போஜனம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், கலந்து கொண்டு கூட்டு மருத்துவ சிகிச்சைக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும், சிறப்பான முறையில் ரத்ததான முகாம் நடத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் நினைவு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
இதில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் எஸ்.லெட்சுமி, மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர் எஸ்.எம்.மணிவண்ணன், மாநகர் நல அலுவலர் டாக்டர் ஷர்மிளி,
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுண்நுயிர் துறைத் தலைவர் திடாக்டர் கி.ஞானகுரு, துணை இயக்குநர் (காசநோய்) மரு.சாவித்திரி, எச்.ஐ.வியுடன் வாழ்வோர்க்கான கூட்டமைப்பு தலைவர் ஆர்.தமிழ் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மக்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. எச்.ஐ.வி. பரிசோதனை, சிகிச்சை மற்றும் எச்.ஐ.வி. தடுப்புப் பற்றி ‘‘உங்கள் நிலையை அறியவும்’’ இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தின மையக் கருத்து ஆகும்.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் எச்.ஐ.வி. பரிசோதனை சிகிச்சையை விரிவுபடுத்துவதற்கும், தமிழகமெங்கும் எச்.ஐ.வி. தொற்றைகண்டறிய 2561 நம்பிக்கை மையங்களும், 15 நடமாடும் நம்பிக்கை மையங்களும் மற்றும் 2 நடமாடும் எச்.ஐ.வி.-எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு வாகனங்களும் செயல்பட்டு வருகின்றன.
![](https://img.maalaimalar.com/InlineImage/201811301211403547_1_AIDS-Day._L_styvpf.jpg)
எச்.ஐ.வி.-எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்பெறும் வகையில், எச்.ஐ.வி.-எய்ட்ஸ் தொற்றுள்ளோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வர கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்குதல், எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 ஓய்வூதியம் வழங்குதல், சூரிய ஒளி மின் வசதியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல், எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட இளம் விதவைகளுக்கு வயது வரம்பை தளர்த்தி மாத ஓய்வூதியம் வழங்குதல், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக தமிழ்நாடு அரசின் அறக்கட்டளை 10 கோடி ரூபாய் வைப்பு நிதியுடன் ஏற்படுத்தப்பட்டு, அந்நிதியிலிருந்து வரும் வட்டியின் மூலம் அக்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு மற்றும் கல்வி உதவித் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் எச்.ஐ.வி.-எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்று, எச்.ஐ.வி.-எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களை மனித நேயத்துடன் அரவணைத்து, அவர்களது தன்னம்பிக்கை வளர உதவிட வேண்டுமென்று அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச் சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #Edappadipalaniswami #AIDSDay