என் மலர்
நீங்கள் தேடியது "Bus glass breakage"
கண்ணமங்கலம்:
வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் குறிப்பிட்ட நேர இடைவெளியில் நேற்று இரவு 9.30 மணி அளவில் கணியம்பாடி மலை கணவாய் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் பஸ்கள் மீது கற்களை வீசினர். இந்த தாக்குதல் மலை கணவாய் முதல் கொங்கராம்பட்டு பகுதி வரை சென்று கொண்டிருந்த பஸ்கள் மீது நடத்தப்பட்டது. இதில் ஒரு ஆம்னி பஸ் உள்பட 7 அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
கல்வீசியவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தால் பயணிகள் மிகவும் அச்சம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து ஆங்காங்கே பஸ்களை சாலையிலேயே டிரைவர்கள் நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கண்ணமங்கலம், வேலூர் தாலுகா ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மர்ம நபர்களை தேடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்து பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் அந்த வழியாக வந்த மற்ற வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் தொடர்ந்து பயணம் செய்ய அச்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டது.
இதேபோல, கீழ்பள்ளிப்பட்டு அருகே புதுப்பேட்டை பகுதியிலும் ஒரு அரசு பஸ் கண்ணாடியை மர்ம நபர்கள் கல்வீசி உடைத்தனர். அந்த பஸ் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்:- 8 பஸ்களின் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்துள்ளதாக தெரிகிறது. ஒரு பைக்கில் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் செங்கல்களை பஸ்கள் மீது வீசி கண்ணாடியை உடைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயமில்லை.
குடிபோதையில் பஸ்களின் கண்ணாடியை உடைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். எனினும் இது குறித்து மேல் விசாரணை நடத்தி வருகிறோம். அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. 2 பேரையும் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே சென்னை-கும்பகோணம் சாலையில் ஆனகவுண்டன் குச்சி பாளையம் உள்ளது. இந்த ஊர் வழியாக பட்டுக்கோட்டையில் இருந்து திருப்பதிக்கு தமிழக அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் சென்றது.
அப்போது அங்கு சாலையோரம் இருட்டில் மறைந்து நின்ற மர்ம மனிதர்கள் சிலர் கற்களை எடுத்து அந்த பஸ் மீது சரமாரியாக வீசினர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
பஸ்சில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதனைத்தொடர்ந்து அங்கிருந்து அந்த பஸ் சென்று விட்டது.
இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பஸ் ஒன்று அதே ஆனகவுண்டன்குச்சி பாளையம் வந்தது. அப்போதும் மர்ம மனிதர்கள் அதன் மீதும் கற்களை வீசினர்.
இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்து சிதறியது. உடனே பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.
பின்னர் டிரைவரும், கண்டக்டரும் கீழே இறங்கி பஸ் மீது கல்வீசியவர்களை விரட்டினர். அதற்குள் அந்த மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து 2 பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களும் வளவனூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள்.
நள்ளிரவு ஒரே இடத்தில் 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.