என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai murder"

    • தாம்பரம் உதவி கமிஷனர் நெல்சன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாயமான குமாரை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டது.
    • செஞ்சி அருகே குழி தோண்டி உடலை புதைத்திருக்கும் அதிர்ச்சி தகவலும் தெரிய வந்தது.

    சென்னை:

    சென்னையில் தி.மு.க. முன்னாள் எம்.பி. குப்புசாமியின் உதவியாளர் கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இது பற்றிய விவரம் வருமாறு:-

    சென்னை அயனாவரம் வசந்தம் கார்டன் 2-வது லேன் பகுதியில் வசித்து வந்தவர் குமார். 72 வயதான இவர் சென்னை மாநகராட்சியில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

    தி.மு.க. தொழிற்சங்கமான எல்.பி.எப். உடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் பொது ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் என்ற பெயரில் தொழிற்சங்கத்தையும் இவர் நடத்தி வந்தார். இந்த சங்கத்தில் மாநில பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த இவர் தி.மு.க. முன்னாள் எம்.பி. குப்புசாமியிடம் உதவியாளராகவும் இருந்துள்ளார்.

    தாம்பரத்தை அடுத்த சேலையூரில் இவரது மகள் வீடு உள்ளது. அங்கு சென்று இருந்த குமார் கடந்த 16-ந்தேதி மகள் வீட்டில் இருந்து ஆட்டோவில் புறப்பட்டு உள்ளார்.

    பின்னர் தாம்பரம் பஸ் நிலையத்தில் இறங்கிய அவர் அதன் பிறகு காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் இது பற்றி தாம்பரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    தாம்பரம் உதவி கமிஷனர் நெல்சன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாயமான குமாரை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் குமாருக்கும் சேலையூர் பகுதியில் வசித்து வரும் ரவி என்பவருக்கும் இடையே நில பிரச்சனை இருந்து வந்தது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் ரவியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது குமார் கடத்தி படுகொலை செய்யப்பட்டு இருக்கும் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

    தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து ரவியும் அவரது கூட்டாளிகள் 7 பேரும் குமாரை காரில் கடத்திச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். செஞ்சி அருகே குழி தோண்டி உடலை புதைத்திருக்கும் அதிர்ச்சி தகவலும் தெரிய வந்தது.

    இதையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரவி உள்பட 7 பேரிடம் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

    மும்பையில் வசித்து வரும் குமாரின் உறவினர் ஒருவருக்கு சொந்தமாக கானாத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தண்டியில் ஒரு கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை குமார் தான் பாதுகாத்து வந்துள்ளார். இதன் தற்போதைய மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் நிலையில் அந்த இடத்தை ரவி தனது கள்ளக்காதலியான தனலட்சுமி என்ற பெயரில் போலியாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குமாரின் உறவுக்கார பெண்ணான மகாலட்சுமி பெயரில் ஒரிஜினல் நில பத்திரம் உள்ளது.

    இந்த இடத்தில் ரவி மகாலட்சுமி என்ற பெயரில் போலியாக வேறு ஒரு பெண்ணை தயார் செய்து தனது கள்ளக்காதலியான தனலட்சுமி பெயரில் இடத்தை பதிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக குமாரை கடத்திச் சென்று நிலத்துக்கான ஒரிஜினல் ஆவணங்களை கேட்டு காரில் வைத்தே தாக்கியுள்ளனர்.

    இதற்கு குமார் உடன்படாததால் அவரை காருக்குள் வைத்து சித்ரவதை செய்து கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்றுள்ளனர். பின்னர் கொலையுண்ட குமாரின் உடலுடன் செஞ்சிக்கு சென்றுள்ளனர். பின்னர் செஞ்சி அருகே காட்டுப்பகுதியில் பெரிய குழியை தோண்டி குமாரின் உடலை போட்டு புதைத்துள்ளனர்.

    பின்னர் எதுவும் தெரியாது போல ரவி வெளியில் நடமாடியுள்ளார். ஆனால் போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தி ரவியையும் அவரது கூட்டாளிகளையும் பிடித்து உள்ளனர். சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற குமார் தி.மு.க. தொழிற்சங்கத்தினர் மத்தியில் நன்கு அறிமுகமானவராவார். இவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தி.மு.க.வினர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கொலை வழக்கில் கைதாகியுள்ள ரவி பட்டதாரி வாலிபர் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். நிலம் தொடர்பான பிரச்சனை பெரிதாக உருவெடுத்ததால் பயந்து போய் காரில் கடத்திச் சென்று குமாரிடம் இருந்து ஒரிஜினல் பத்திரங்களை வாங்கிவிடலாம் என்று அவர் நினைத்திருக்கிறார்.

    ஆனால் நிலைமை விபரீதம் ஆகி கொலையில் முடிந்து விட்டதால் ரவியும் அவரது கூட்டாளிகளும் சிறை செல்ல நேரிட்டுள்ளது.

    • தனுஷை வெட்டும்போது தடுக்க முயன்ற அவரது நண்பர் அருணும் காயம் அடைந்தார்.
    • சம்பவம் குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை திருவல்லிக்கேணியில் குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த குத்துச்சண்டை வீரர் தனுஷை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியது. அப்போது தனுஷை வெட்டும்போது தடுக்க முயன்ற அவரது நண்பர் அருணும் காயம் அடைந்தார்.

    அரிவாள் வெட்டில் தலை, உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் தனுஷ் உயிரிந்தார். இச்சம்பவம் குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே, கஞ்சா போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்ததால் கொலை நடந்துள்ளதாக தனுஷின் உறவினர்கள் குற்றச்சாட்டி உள்ளனர். 

    • அருண்குமார் சிகிச்சைக்காக ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
    • தெருவில் யாராவது தகராறு செய்தாலோ, பிரச்சனையில் ஈடுபட்டாலோ தைரியமாக தட்டிக் கேட்பாராம்.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி ராஜாஜி நகர், கஜபதி தெருவை சேர்ந்தவர் தனுஷ் (வயது 28). குத்துச்சண்டை வீரரான இவர், ஆண் அழகன் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். சிறிய அளவில் குத்துச்சண்டை போட்டியிலும் பங்கேற்றுள்ளார்.

    இவர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு, தனது நண்பர் அருண்குமார் என்பவருடன் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, ஒரு கும்பல் தனுசை சுற்றி வளைத்தது.

    அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர் ஓடினார். ஆனால், அந்த கும்பல் தனுசை சுற்றி வளைத்து, அரிவாளால் வெட்டினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த தனுஷ், ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அவருடன் வந்த நண்பர் அருண் குமாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    உயிருக்கு போராடிய தனுஷ், அதே இடத்தில் பரிதாபமாக இறந்து போனார். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த அவரது நண்பர் அருண்குமார் சிகிச்சைக்காக ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக, ஐஸ்அவுஸ் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீஸ் விசாரணையில், முன்விரோதம் காரணமாக தனுஷ் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தனுஷ் அந்த பகுதியில் பந்தாவாக வலம் வருவாராம். தெருவில் யாராவது தகராறு செய்தாலோ, பிரச்சனையில் ஈடுபட்டாலோ தைரியமாக தட்டிக் கேட்பாராம்.

    சமீபத்தில் மரண ஊர்வலத்தில் கானா பாட்டு பாடுவதில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இனி மேல், தனுசை தீர்த்து கட்டாவிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதிய, மோகன், செந்தில் குமார், விஷால், சுரேஷ் குமார் ஆகியோர் சதி திட்டம் செய்து, தனுசை தீர்த்து கட்டியதாக கூறப்படுகிறது. குற்றவாளிகள் 4 பேரும் சம்பவம் நடந்த சில மணி நேரத்தில், உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், சிலரை தேடி வருவதாக போலீசார் கூறியிருந்தனர்.

    இந்த நிலையில், தனுஷை கொலை செய்த மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் இந்த கொலை வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. 

    • பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தனலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், ஐயாபிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி தனலட்சுமி(வயது 45). அருகில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்தார். இவர் காலையில் வீடுகள் முன்பு கோலம் போடுவது வழக்கம். அதே பகுதியில் தனலட்சுமியின் அக்காள் வீடு உள்ளது. அவரது வீட்டுக்கும் தனலட்சுமி கோலம்போட்டு வந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை 5.30 மணியளவில் தனலட்சுமி வழக்கம் போல் வீட்டு வேலைகள் செய்து விட்டு அக்காள் வீட்டு முன்பு கோலம்போட்டு கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு தனலட்சுமியின் அக்காள் மகளான செல்வியின் கணவர் காளிமுத்து வந்தார். ஏற்கனவே செல்விக்கும், காளிமுத்துவுக்கும் குடும்ப தகராறு இருந்து வந்ததால் தனலட்சுமி அவரை கண்டித்தார். இதனால் தனலட்சுமிக்கும், காளிமுத்துவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த காளிமுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் தனலட்சுமியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் தனலட்சுமி சரிந்தார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்த போது தனலட்சுமி உயிருக்கு போராடிய படி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தனலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் இளங்கோவன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் நவீன் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை துணை கமிஷனர் (பொறுப்பு) சுப்புலட்சுமி பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    இதில் குடும்ப தகராறில் காளிமுத்து தனது மனைவி செல்வியை தீர்த்து கட்ட வந்து இருந்த நிலையில் தனலட்சுமியை கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    திருப்பூரை சேர்ந்த காளிமுத்துவும், கொலையுண்ட தனலட்சுமியின் அக்காள் மகளான செல்வியும் பேஸ்புக் மூலம் காதலித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். காளிமுத்து திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    திருப்பூரில் இருந்தபோது செல்வி மீது காளி முத்துவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறில் திருமணமான சில நாட்களிலேயே பிரிந்து திருவொற்றியூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    எனினும் காளிமுத்து தொடர்ந்து இங்கு வந்து மனைவியுடன் மோதலில் ஈடுபட்டு வந்து உள்ளார். கடந்த 3 நாட்களாக அவர் மனைவி செல்வியை தீர்த்து கட்ட கத்தியுடன் அவரது வீட்டின் அருகே நோட்டமிட்டு சுற்றி வந்து உள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை செல்வியுடன் மோதலில் ஈடுபட காளிமுத்து வந்த போது அங்கு வீட்டு வாசலில் கோலமிட்ட தனலட்சுமி அவரை தடுத்து "இங்கே நீ ஏன் வருகிறாய்" என்று கூறி கண்டித்து உள்ளார். இதனால் கோபம் அடைந்த காளிமுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் தனலட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்று இருப்பது தெரியவந்தது.

    தலைமறைவான கொலையாளி காளி முத்துவை போலீசார் தேடிவருகிறார்கள். மேலும் இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    வீட்டு வாசலில் கோலமிட்ட பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தாய் மைதிலியின் அறிவுரையை ரித்திகா காதில் வாங்கி கொள்ளாமல் காதலன் ஷியாமுடன் வெளியில் சுற்றுவதை தொடர்ந்துள்ளார்.
    • தாயின் கொலையில் ரித்திகாவும் உடந்தையாக இருந்தது தெரியவந்தால் அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அம்பத்தூர்:

    சென்னை முகப்பேர் கிழக்கு சர்ச் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மைதிலி. 60 வயதான இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இவரது மகள் ரித்திகா. 26 வயது இளம்பெண்ணான இவர் போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் ரித்திகா ஷியாம் (28) என்ற வாலிபரை காதலித்து வந்து உள்ளார். இருவரும் அடிக்கடி வெளியில் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இது போன்ற நேரங்களில் ரித்திகா இரவில் தாமதமாகவே வீட்டுக்கு வந்துள்ளார்.

    இது தாய் மைதிலிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் மகளை கண்டித்து வந்துள்ளார். இப்படி வெளியில் சுற்றி விட்டு இரவில் நீண்ட நேரம் கழித்து வீட்டுக்கு வருவது சரி இல்லை.

    இந்த வழக்கத்தை மாற்றிக் கொள் என்று கூறி கண்டித்துள்ளார். இதனால் தாய் மைதிலிக்கும், ரித்திகாவுக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்துள்ளது.

    ஆனால் தாய் மைதிலியின் அறிவுரையை ரித்திகா காதில் வாங்கி கொள்ளாமல் காதலன் ஷியாமுடன் வெளியில் சுற்றுவதை தொடர்ந்துள்ளார்.

    நேற்றும் ரித்திகா, ஷியாமுடன் வெளியில் சென்று உள்ளார். இருவரும் பல இடங்களுக்கு சென்றுள்ளனர். இதனால் இரவு 9 மணி அளவிலேயே ரித்திகா வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மைதிலி மகளை கண்டித்துள்ளார். நான் சொல்வதை நீ கேட்க மாட்டாயா? இது போன்று வீட்டுக்கு தாமதமாக வருவது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறியும் ஏன் கேட்க மறுக்கிறாய் என்று கூறி சத்தம் போட்டு உள்ளார். இதனால் தாய்-மகளுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக முற்றியது.

    இதனால் கோபம் அடைந்த ரித்திகா தனது காதலன் ஷியாமுக்கு போன் செய்து தாய் திட்டுவது பற்றி கூறியுள்ளார். மேலும் உடனே நீ வீட்டுக்கு வா என்றும் அழைத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஷியாம் முகப்பேர் கிழக்கில் உள்ள காதலியின் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று தகராறில் ஈடுபட்டார்.

    காதலியின் தாய் மைதிலியிடம், "நீங்கள் எப்படி அவளை திட்டலாம்" என்று கேட்டு வாக்குவாதம் செய்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி உள்ளது. அப்போது ஷியாம், மைதிலியை கீழே தள்ளி விட்டு காதலியின் கண்முன்னே கழுத்தை நெரித்து உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மைதிலி, ஷியாமின் பிடியில் இருந்து தப்புவதற்கு முயன்றார். ஆனால் ஷியாம் விடாமல் கழுத்தை நெறித்ததால் மைதிலி துடிதுடித்து பலியானார். பின்னர் ஷியாம் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஜெ.ஜெ.நகர் போலீசார் அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தப்பி ஓடிய ஷியாமை கைது செய்தனர். இது தொடர்பாக கொலையுண்ட மைதிலியின் மகள் ரித்திகாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவத்தில் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் தாயின் கொலையில் ரித்திகாவும் உடந்தையாக இருந்தது தெரியவந்தால் அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கைதான வாலிபர் ஷியாம் அண்ணா நகரில் உள்ள ஐ.ஏ.எஸ். அகாடமி ஒன்றில் தங்கி இருந்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை எழுதுவதற்கு தயாராகி வந்துள்ளார். அப்போதுதான் ரித்திகாவுடன் காதல் ஏற்பட்டு ஷியாம் கொலை வழக்கில் சிக்கி உள்ளார். இந்த கொலை சம்பவம் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அகாடமியில் ஷியாமுடன் படித்து வந்த மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை கே.கே. நகர் அடுத்த நெசப்பாக்கத்தில் திருமணமான 3 மாதத்தில் காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    கே.கே.நகரை அடுத்த நெசப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (24) எலக்ட்ரிசியன்.

    இவரது மனைவி சந்தியா (20). இவர்கள் கடந்த ஜனவரி மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சந்தியாவுடன் அவரது தாய் சரிதா தந்தை சங்கர் ஆகியோர் வசித்து வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை 11 மணி அளவில் அருண்குமார்-சந்தியா இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த அருண்குமார் கத்தியால் சந்தியா தொண்டையில் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே சந்தியா சுருண்டு விழுந்து இறந்தார். இதை தடுக்க முயன்ற சந்தியாவின் தாய் சரிதாவுக்கு கையில் வெட்டு காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த உதவி கமி‌ஷனர் வின்சென்ட் ஜெயராஜ், இன்ஸ்பெக்டர் பிராங்க் ரூபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அருள்குமாரை கைது செய்தனர்.

    சந்தியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனை காரணமா? என அருண்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாடியில் தே.மு.தி.க. பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த உறவினரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    பூந்தமல்லி:

    பாடி, சக்திநகரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது45) தே.மு.தி.க.வில் பொறியியல் பிரிவில் மாநில இணைச் செயலாளராக இருந்தார். கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.

    நேற்று காலை அவர், 9-ம் வகுப்பு படிக்கும் மகனை அண்ணாநகரில் உள்ள பள்ளியில் இறக்கிவிட்டு பின்னர் மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். பாடி, சீனிவாசன் நகர் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மகும்பல் பாண்டியனை வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொன்றனர்.

    இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்தநிலையில் கொலையில் தொடர்புடைய அமைந்தகரையை சேர்ந்த வினோத்குமார் என்பவர் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    அவர் கொலையுண்ட பாண்டியனின் நெருங்கிய உறவினர் ஆவார்.

    வினோத்குமாருக்கும், பாண்டியனுக்கும் ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே குமரன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பை பெற்றதில் பாண்டியனிடம் பணம் இருந்துள்ளது.

    இதனை அறிந்த வினோத் குமார் பணம் கேட்டு பாண்டியனிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த மோதலில் கொலை நடந்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வினோத்குமாரை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
    அரும்பாக்கத்தில் ரவுடியை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பா.ம.க. பிரமுகர் கொலைக்கு பழிவாங்க 8 வருடம் காத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    போரூர்:

    திருவொற்றியூர், சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி (வயது 39). ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    நேற்று மதியம் கிருஷ்ணமூர்த்தி லோடு ஆட்டோவை ஓட்டிக் கொண்டு அரும்பாக்கம் பெருமாள் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொன்று விட்டு தப்பி சென்று விட்டனர்.

    பட்டப்பகலில் பொது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொலையாளிகளை பிடிக்க அண்ணா நகர் உதவி கமி‌ஷனர் குணசேகர் இன்ஸ்பெக்டர்கள் சங்கர், பெருந்துறை முருகன், சப்-இன்ஸ்பெக்டர் பச்சமுத்து ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    கொலை நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அதில் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய கோயம்பேட்டைச் சேர்ந்த சங்கர், அஜித் குமார், அரும்பாக்கத்தைச் சேர்ந்த கவிராஜ், பாபு, கார்த்திக் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 பைக் 2 கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான சங்கர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    அரும்பாக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு எனது சித்தப்பாவும் பாமக பிரமுகருமான நாகராஜ் என்பவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இதேபோல் 2009-ம் ஆண்டு சித்தப்பாவின் சகோதரர் சரவணன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இந்த இரண்டு கொலைக்கும் மூல காரணமாக ‘ஸ்கெட்ச்’ போட்டு கொடுத்து செயல்பட்டவர் கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி என்பது தெரிந்தது.

    எனவே தந்தை இல்லாத எங்களை வளர்த்து ஆளாக்கிய 2 சித்தப்பாக்களின் கொலைக்கு காரணமான கிருஷ்ணமூர்த்தியை பழி தீர்க்க முடிவு செய்தேன். 8ஆண்டுகளுக்கு பிறகு எனது நண்பர்கள் உடன் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை வெட்டி கொலை செய்தோம்.

    இதில் கைது செய்யப்பட்ட அஜித்குமார் மீது ஏற்கனவே அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கொலையில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    பாடியில் இன்று காலை தே.மு.தி.க. பிரமுகரை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரி தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #chennaimurder
    அம்பத்தூர்:

    பாடி குமரன்நகர் முல்லை தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45).

    தே.மு.தி.க. பிரமுகரான இவர் அக்கட்சியில் மாநில பொறியாளர் அணி துணை தலைவராக இருந்து வந்தார். இதற்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வில்லிவாக்கம், தி.நகர் தொகுதியில் இவர் போட்டியிட்டுள்ளார்.

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தார்.

    கட்டிட காண்டிராக்டரான பாண்டியன் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.

    இவர் இன்று காலை 9 மணியளவில் அண்ணா நகரில் உள்ள பள்ளியில் படிக்கும் தனது மகனை கொண்டு விட்டு விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். பாடி குமரன் நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அருகில் தனது புல்லட்டில் பாண்டியன் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் அவரை சுற்றி வளைத்தது. அவர்களது கையில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாண்டியன் தப்ப முயன்றார். ஆனால் 6 பேரும் சுற்றி வளைத்து அவரை சரமாரியாக வெட்டினர். கிரிக்கெட் மட்டையாலும் தாக்கினர். இதில் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    வெட்டும்போது தடுக்க முயன்ற பாண்டியனின் வலது கையில் 3 விரல்கள் துண்டானது.

    பாண்டியனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை விற்பனை செய்தது தொடர்பாக தகராறு இருந்து வந்ததுள்ளது.

    வீடு விற்றது தொடர்பாக பாண்டியன் சிலருக்கு புரோக்கர் கமி‌ஷனாக பணம் கொடுக்க வேண்டியது இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக பாண்டியன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இந்த விவகாரம் தொடர்பாக நேற்று இரவு பாண்டியனை தொடர்பு கொண்டு போனில் மர்மநபர்கள் பேசியுள்ளனர். அப்போது பாண்டியனுக்கும், போனில் பேசியவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தான் பாண்டியனை கொலை செய்து இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    அம்பத்தூர் உதவி கமி‌ஷனர் கண்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், பொற்கொடி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    பாண்டியனின் செல்போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கொலை நடந்த இடத்தில் உள்ள கேமராக்களை போட்டு பார்த்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #chennaimurder
    சென்னை அரும்பாக்கத்தில் இன்று பட்டப்பகலில் முன்விரோதம் காரணமாக 5 பேர் கொண்ட கும்பலால் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். #ChennaiMurder
    போரூர்:

    சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி. பிரபல ரவுடியான இவர் எண்ணூரில் வசித்து வந்தார்.

    இன்று காலையில் கிருஷ்ணமூர்த்தி, அரும்பாக்கத்தில் உள்ள வணிக வளாகம் பின்புறம் உள்ள பெருமாள் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் கிருஷ்ணமூர்த்தியை சுற்றி வளைத்தது. அவர்களின் கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதனை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    ஆனால் மர்ம கும்பல் அவரை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து பலியானார்.

    இந்த கொலை சம்பவம் காலை 11 மணி அளவில் நடந்தது. பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் இருந்த இடத்தில் மிகவும் துணிச்சலுடன் கொலையாளிகள் கிருஷ்ணமூர்த்தியை தீர்த்துக் கட்டியுள்ளனர்.

    கிருஷ்ணமூர்த்தி கொலையுண்டதை பார்த்து அந்த வழியாக சென்ற பொது மக்கள் மிரண்டு போனார்கள். பலர் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.



    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் உதவி கமி‌ஷனர் குணசேகரன், அரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் விரைந்து சென்று கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கொலை நடந்த இடத்தில் பதிவான கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். எண்ணூரில் இருந்து கிருஷ்ணமூர்த்தி மினி வேனை ஓட்டி வந்துள்ளார். அங்கிருந்தே 5 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்து அவரை தீர்த்துக் கட்டியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

    கிருஷ்ணமூர்த்தி மீது மொத்தம் 9 வழக்குகள் உள்ளன. கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து அவர் திருந்தி வாழ்ந்து வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும் பழைய தகராறுகளால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாகவே கிருஷ்ணமூர்த்தியை அவரது எதிரிகள் கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. #ChennaiMurder
    ×