என் மலர்
நீங்கள் தேடியது "child kills"
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி டி.நல்லிக் கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ரவிந்திரன் (வயது 40). தொழிலாளி.
இவரது மகள் ஸ்ரீசாதனா (9) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று ரவிந்திரனும், அவரது மனைவியும் வேலைக்கு சென்றனர். வீட்டில் ஸ்ரீசாதனா தனது தம்பி மற்றும் உறவினர்களின் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடினார். பாட்டி லோகநாயகி குழந்தைகளை கவனித்துள்ளார்.
குழந்தைகள் வீட்டுக்குள்ளும், வெளியேயும் தொட்டில் கட்டி அதில் கால்களை இரு புறமும் போட்டவாறு அமர்ந்து சுற்றி, சுற்றி விளையாடியதாக தெரிகிறது.
அப்போது வீட்டுக்குள் ஸ்ரீசாதனா விளையாடிக் கொண்டிருந்த தொட்டிலில் எதிர் பாராத விதமாக சேலை துணி அவரது கழுத்தில் இறுக்கியது. இதில் அவள் பரிதாபமாக இறந்தாள்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாட்டி லோகநாயகி சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் ஸ்ரீசாதனாவை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஸ்ரீசாதனா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். கூலித்தொழிலாளி. இவரது 5 வயது குழந்தை நந்தினி நேற்று வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தகரத்தை வைத்து மூடி இருந்தனர்.
அதை கவனிக்காத குழந்தை நந்தினி தொட்டியின் மீது நடந்து சென்றாள். அப்போது எதிர்பாராத விதமாக தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டார். இதில் நந்தினி பரிதாபமாக இறந்தார். இதனிடையே நந்தினியை காணாமல் ஆறுமுகம் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.
அப்போது தண்ணீர் தொட்டிக்குள் நந்தினி பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி சிப்காட் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.