search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collectros"

    • பல இடங்களில் மரங்கள், மரக்கிளைகள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்படும் நிலை நீடிக்கிறது.
    • ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆகாச பாலம் பகுதியில் சாலை பழுதுபார்க்கும் பணி நடைபெறுகிறது.

    கோவை:

    தொடர் மழை காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்ட கலெக்டர்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியான வால்பாறை, ஆனைமலை, மேட்டுப்பாளையம், பேரூர் மற்றும் மதுக்கரை ஆகிய வட்டங்களை சுற்றியுள்ள சுற்றுலா பகுதிகளான சின்னக்கல்லாறு, ஆழியாறு, சோலையாறு, கூழாங்கல்லாறு, அப்பர் நீராறு, கீழ் நீராறு, காடாம்பாறை, குரங்கு நீர்வீழ்ச்சி, கோவை குற்றாலம், பில்லூர் மற்றும் கீழ் பவானி ஆகிய இடங்களில் தற்போது தொடர் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் நிலச்சரிவு, நீரில் மூழ்குதல் போன்ற எதிர்பாரா நிகழ்வுகளை தவிர்க்கும் பொருட்டு பருவமழை காலங்களில் இப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை வரை மிக கனமழை பெய்யுமென எச்சரிக்கை விடுத்து உள்ளது. மேலும் மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிக மழைப்பொழிவு காரணமாக நீரோடைகளில் தண்ணீர் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

    நீலகிரியில் அதிவேகமாக காற்று வீசுவதால் பல இடங்களில் மரங்கள், மரக்கிளைகள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்படும் நிலை நீடிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இருந்தபோதிலும் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படாமல் இருக்க தமிழகத்தின் வேறு மாவட்டம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் வர வேண்டும்.

    மேலும் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆகாச பாலம் பகுதியில் சாலை பழுதுபார்க்கும் பணி நடைபெறுகிறது. இதன்காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி, கூடலூருக்கு அத்தியாவசிய வாகனங்கள் தவிர மற்ற கனரக சரக்கு வாகனங்கள் ஒரு வாரத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    ×