என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "deliverance"

    சென்னை ஆலோசனை கூட்டத்திற்கு பங்கேற்க சென்ற ரெயில்வே அதிகாரி திருச்சி தண்டவாளத்தில் பிணமாக மீட்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி:

    மதுரை அருகே உள்ள தத்தனேரி கன்னியப்பபுரத்தை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் (வயது 34). இவர் திருச்சி தென்னக ரெயில்வே மதுரை ஜங்சன் அலுவலகத்தில் கூடுதல் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி பத்ம பிரியா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று 22-ந் தேதி சென்னையில் ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க மதுரையில் இருந்து நேற்று முன்தினம் 21-ந் தேதி இரவு 9 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சவுந்திரபாண்டியன் புறப்பட்டு சென்றார்.

    ஆனால் நேற்று சென்னைக்கு அவர் சென்று சேரவில்லை. அவரது செல்போனுக்கு நேற்று காலை குடும்பத்தினர் தொடர்புகொண்ட போது, ரிங் போய்க்கொண்டே இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் செல்போன் டவர் உதவியுடன் சவுந்திரபாண்டியன் இருக்கும் இடத்தை தேடினர். அப்போது திருச்சியில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் குளத்தூருக்கும், பூங்குடி என்ற கிராமத்திற்கும் இடையில் தண்டவாளத்தில் படுகாயத்துடன் சவுந்திரபாண்டியன் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவரது செல்போனும் பிணத்தின் அருகிலேயே கிடந்தது. சவுந்திரபாண்டியன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று பிரேத பரிசோதனை செய்த பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    இதற்கிடையே ரெயிலில் படுக்கை வசதி பெட்டியில் பயணம் செய்த சவுந்திரபாண்டியன், தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அவர் ரெயிலில் பயணம் செய்தபோது வாசலில் நின்ற போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது மர்ம நபர்கள் அவரை கொலை செய்து வீசினார்களா? என்பது மர்மமாக உள்ளது. பிரேத பரிசோதனையின் போது சவுந்திரபாண்டியன் சாவில் உள்ள மர்மம் விலகும் என கூறப்படுகிறது.

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட 49 தமிழக தொழிலாளர்களை அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், வளர்மதி, ராஜலட்சுமி ஆகியோர் வரவேற்று ஆறுதல் கூறினர்.

    சென்னை:

    கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் திருநெல்வேலி சங்கரன் கோயில் தாலுக்காவை சேர்ந்த 49 பேர் வெள்ளைத்துரை என்பவரின் தலைமையில் மலேசியாவில், மலேசியத் தமிழர் ஒருவர் நடத்தும் ஏஜெஎம் எனர்ஜி என்ற நிறுனத்தில் தொழிலாளர்களாக கேபிள் பதிக்கும் பணிக்கு சென்றனர்.

    அவர்கள் அங்கு சென்ற பிறகுதான் பணிபுரிய வேண்டிய இடம் காட்டுப்பகுதி என்று தெரிந்தது. அங்கு சரியான தங்குமிடம் இல்லை. உணவில்லை, பூச்சித் தொல்லை என பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். இந்த இன்னல்களை, நிறுவனத்தின் அதிபருக்கு தெரிவித்த போது, இவர்களை கேவலமாக திட்டியும், மிரட்டியும் உள்ளார்.

    இதனால் இந்த 49 பேரும் அங்கிருந்து தப்பி பட்டுகேவ் பகுதிக்கு சென்றனர். இதை அறிந்த மலேசிய அரசு அவர்களை மலாக்காவில் உள்ள அரசு இல்லத்தில் தங்க வைத்தது.

    49 தொழிலாளர்களின் நிலை அறிந்த தமிழக அரசு மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் அவர்களை தமிழகம் அழைத்து வர உரிய நடவடிக்கை எடுத்தது.

    தமிழக அரசின் தொடர் நடவடிக்கை காரணமாக மலேசிய நிறுவனத்தின் மீது மலேசிய அரசால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் 49 தொழிலாளர்களும் புக்கிட் ஜெலின் இமிகிரேசன் டிடென்சன் முகாமுக்கு மாற்றப்பட்டார்கள். அங்கு 3 மாதங்கள் இருந்த பின் தமிழக அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகள் காரணமாக விடுவிக்கப்பட்டு விமானம் மூலம் சென்னை வந்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 49 பேரையும் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், வளர்மதி, ராஜலட்சுமி ஆகியோர் வரவேற்று ஆறுதல் கூறினர்.

    பின்னர் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டு ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களை ஊருக்கு அழைத்து செல்வதற்கான வாகன வசதிக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.

    கோவை அருகே கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட 2 ஐம்பொன் சாமி சிலைகள் மீட்கப்பட்டது.

    சூலூர்:

    கோவை கருமத்தம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 2 ஐம்பொன் சாமி சிலைகள் கிடந்தன. இதைப் பார்த்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கருமத்தம்பட்டி போலீசார் 2 சிலைகளையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    விசாரணையில் இந்த சிலைகள் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தை அடுத்த கள்ளப்பாளையத்தில் கடந்த மாதம் வேணு கோபால சாமி கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட வேணுகோபாலசாமி- சத்யபாமா ஆகிய ஐம்பொன் சிலைகள் என்பது தெரிய வந்தது.

    ஐம்பொன் சிலைகள் திருட்டு தொடர்பாக திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த சிலைகளை கருமத்தம்பட்டி அருகே சாலையில் வீசிச் சென்றவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மழை தொடர்ந்து பெய்தாலும் மீட்பு, நிவாரணப்பணிகள் பாதிக்காமல் நடைபெறும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். #MinisterUdhayaKumar
    சென்னை:

    ஜகா புயல் மீட்பு நிவாரப் பணிகள் குறித்து வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 2 லட்சத்து 15 மரங்கள் விழுந்தன. அவற்றில் 93 ஆயிரம் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. மழை தொடர்ந்து பெய்தாலும் மீட்பு, நிவாரணப்பணிகள் பாதிக்காமல் நடைபெறும்.

    தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. 270 வார்டுகளில் 250 வார்டுகளில் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை மீட்பு பணிகள் ஜே.சி.பி. எந்திரம், டிராக்டர் மற்றும் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் நடைப்பெற்று வருகிறது.



    பேரூராட்சி, மாநகராட்சிகளில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் இருந்து ஜெனரேட்டர் மூலம் நீரை வெளியேற்றப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterUdhayaKumar
    இந்தோனேசியாவில் கடல் அலையில் சிக்கி காணாமல் போன பெண் 18 மாதத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஜகர்தா:

    இந்தோனேசியா நாட்டில் சுகாபூமி தீவை சேர்ந்த பெண் சுனாரிஷ் (வயது 53). இவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிட்டேபஸ் கடற்கரையில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது அவரை ராட்சத அலை இழுத்து சென்றுவிட்டது. அவரை தேடும் பணி நடந்தது. பல நாட்களாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அவர் இறந்து விட்டதாக கருதப்பட்டது. கடைசி வரை உடலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் அவருடைய தந்தை கனவில் தோன்றிய சுனாரிஷ் நான் உயிரோடு தான் இருக்கிறேன். கடலில் மூழ்கிய பகுதி அருகே தான் உள்ளேன். என்னை மீட்டு செல்லுங்கள் என்று கூறினார்.

    இதை அவரது தந்தை கண்டுகொள்ளவில்லை. ஆனால், தொடர்ந்து அவருக்கு இவ்வாறு கனவு வந்தது. இதனால் தந்தையும், சுனாரிசின் சகோதரியும் அந்த பகுதிக்கு தேடி சென்றனர்.

    நீண்ட நேரம் தேடிய நிலையில் அவர் கடலில் மூழ்கிய இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் உயிர் பிழைத்து கொண்டார். ஆனால், பேசும் நிலையில் இல்லை. சில நாட்களில் பேச்சு வந்துவிடும் என்று டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள்.

    18 மாதங்களுக்கு முன்பு கடலில் மூழ்கியவர் எப்படி உயிரோடு வந்தார்? என்பது மர்மமாக இருக்கிறது. அவரிடம் ஏதோ விசித்திர சக்தி இருக்கிறது. அதனால் தான் அவர் உயிருடன் வந்து விட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள்.

    ஆனால், சிலர் சுனாரிசின் குடும்பத்தினர் நாடகம் ஆடுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

    இந்தோனேசியாவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரும் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    ×