என் மலர்
நீங்கள் தேடியது "DMK Youth Wing Conference"
- மாநாட்டு திடலில் இனிவரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், மேடை அமைப்பது தொடர்பாக விரிவாக கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
- மாநாட்டு வழிகாட்டு குழு மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
சேலம்:
சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
அந்த வகையில், நேற்று காலையில் ஈரோடு மாவட்டத்திலும், மாலையில் நாமக்கல் மாவட்டத்திலும் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று கட்சி இளைஞரணி நிர்வாகிகளிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
பின்னர் நேற்று இரவு 9 மணியளவில் சேலம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட எல்லையான மல்லூர் அருகே நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. , எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
எம்.பி.க்கள் பார்த்திபன், கவுதம சிகாமணி, மேயர் ராமச்சந்திரன், தேர்தல் பணிக்குழு செயலாளர் தாமரைக்கண்ணன், மாநகர செயலாளர் ரகுபதி, துணை செயலாளர் சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.அண்ணாமலை உள்பட கட்சியினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதற்கிடையே மாவட்ட கலெக்டர் கார்மேகம் , போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் மற்றும் அதிகாரிகளும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து சேலம் வந்த அமைச்சர் உதயநிதிஸ்டாலின் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார்.
இன்று காலை சேலத்தில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெத்தநாயக்கன்பாளையத்திற்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கு தி.மு.க . இளைஞரணி மாநில மாநாட்டுக்காக அமைக்கப்பட்டு வரும் பிரமாண்டமான பந்தலை பார்வையிட்டார்.
அப்போது மாநாட்டு திடலில் இனிவரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், மேடை அமைப்பது தொடர்பாக விரிவாக கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து மாநாட்டு வழிகாட்டு குழு மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெரிய கருப்பன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
பின்னர் சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் சீலநாயக்கன்பட்டி மைதானத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கு தி.மு.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். தொடர்ந்து அங்குள்ள மைதானத்தில் இளைஞரணியினர் முன்பு சிறப்புரையாற்றுகிறார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., இளைஞரணி அமைப்பாளர்கள் அருண்பிரசன்னா, வீரபாண்டி பிரபு, மணிகண்டன் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞரணியினர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் முடிந்ததும், சேலத்தில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையெட்டி மாநகர போலீஸ் கமிஷனர் விஜய குமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- மேடையில் இருக்க கூடிய உண்மையான முதல் செயல்வீரர் யார்? அது நம்முடைய முதன்மை செயலாளர் நேரு.
- உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு நம்முடைய இளைஞர் அணியே சாட்சி.
சேலம்:
சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இதையடுத்து தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி வருகிறார்.
அதேபோல் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இன்று நடந்த ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இளைஞர் அணி மாநாட்டை வெற்றி பெற செய்கின்ற பொறுப்பு மற்ற மாவட்டத்தை விட சேலம் மாவட்டத்திற்கு அதிகம் உண்டு என்பதை நீங்கள் உணர வேண்டும். இது வெறும் செயல்வீரர்கள் கூட்டம் அல்ல, மாநாட்டிற்கான முன்னோட்டம். நம்முடைய இளைஞர் அணிக்கு பல்வேறு பெருமைகள் இருக்கிறது. இளைஞர் அணியின் வரலாற்றை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு பல்வேறு இயக்கங்களில் இளைஞர் அணி இருக்கிறது. பல அணிகளும் இருக்கிறது. ஆனால் இந்தியாவிலேயே 1980-ம் ஆண்டு முதன் முறையாக ஒரு இயக்கத்திற்கு இளைஞர் அணி என ஆரம்பித்தது தி.மு.க. தான். இதை தொடங்கி வைத்தவர் நம்முடைய கழக தலைவர் தான்.
அதுபோல் தி.மு.க.வில் பல அணிகள் உள்ளது. அதவாது 22 அணிகள் இருக்கிறது. ஆனால் அணிகள் இருந்ததும் அதில் முதன்மையான அணி எதுவென்றால் இளைஞர் அணி என்று கலைஞரால் பலமுறை பாராட்டப்பட்டது.
தற்போது நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருந்து முதலமைச்சராக இருக்கிறார் என்றால் அவருடைய உழைப்பு எப்படி பட்டது என்பதை நீங்கள் உணர வேண்டும். இளைஞரணி மன்றத்தை கோபாலபுரத்தில் தொடங்கிய நம்முடைய தலைவர் படிப்படியாக உழைத்து இன்று தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக, கழக தலைவராக உட்கார்ந்து இருக்கிறார் என்றால் அவருடைய உழைப்பு தான் அதற்கு காரணம். அதற்கு அடித்தளமாக அமைந்திருப்பது நம்முடைய இளைஞரணி என்பதை நீங்கள் உணர வேண்டும். இளைஞர் அணியினர் உழைத்தால் நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும்.

செயல்வீரர்கள்னா யார்? தலைவர் என்ன சொல்கிறாரோ, தலைமை என்ன சொல்கிறதோ அதை களத்தில் இறங்கி செஞ்சி முடிப்பவன் தான் உண்மையான செயல்வீரன். அதனால் தான் இந்த கூட்டத்திற்கு பெயர் செயல்வீரர்கள் கூட்டம். தன்னுடைய சுய நலன் பார்க்காமல் கட்சி நலனுக்காக தலைமை சொல்லிவிட்டது, தலைவர் சொல்லி விட்டார் என உத்தரவை ஏற்று களத்தில் இறங்கி அதை முதன் முதலில் செஞ்சி முடிக்கிறவன் தான் உண்மையான செயல்வீரன்.
இந்த மேடையில் இருக்க கூடிய உண்மையான முதல் செயல்வீரர் யார்? அது நம்முடைய முதன்மை செயலாளர் நேரு. அவருக்கு துணை நிற்பவர்கள் தான் மாவட்ட செயலாளர்கள் 3 பேரும். இங்கு இருக்கக்கூடிய அனைவரும் உண்மையான செயல்வீரர்கள். எனவே தலைமை சொல்வதை களத்தில் இறங்கி செஞ்சி முடிப்பது நம்முடைய கடமை.
உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு நம்முடைய இளைஞர் அணியே சாட்சி. அதற்கு நம்முடைய தலைவரே சாட்சி. உழைப்பு என்றால் ஸ்டாலின், ஸ்டாலின் என்றால் உழைப்பு என்று பாராட்டப்பட்டவர் தான் நம்முடைய தலைவர் அவர்கள்.
14 வயதில் 1967-ம் ஆண்டு கோபாலபுரத்தில் ஒரு முடிதிருத்தும் கடையில் இளைஞர் தி.மு.க.வை தொடங்கினார்கள். அதன் பிறகு 1968-ல் சென்னை மாநகராட்சி தேர்தலுக்காக சென்னை முழுவதும் சைக்கிள் பிரசாரம் செய்தார். 1969-ம் ஆண்டு சென்னை மாவட்டத்தினுடைய வார்டு பிரதிநிதி, 1973-ம் ஆண்டு தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர். 1976-ம் ஆண்டு மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு கடுங்காவல் தண்டனை.
1980-ம் ஆண்டு தி.மு.க. இளைஞரணி ஆரம்பிக்கும்போது 7 அமைப்பாளர்களில் ஒருவர். கடின உழைப்பால் நம்முடைய தலைவர் முதலமைச்சர் ஆகியுள்ளார்.
பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 9 வருடங்கள் ஆகி விட்டது. 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு வாக்குறுதி கொடுத்தார். இந்தியாவை 2020-ம் ஆண்டுக்குள் வல்லரசு நாடாக மாற்றி காட்டுவேன் என்று சொன்னார். இப்போது மீண்டும் அதே வாக்குறுதியை கொடுக்கிறார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றி காட்டுவேன் என்று சொல்கிறார். ஒரு விசயத்தில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியாக வேண்டும். ஒரு வாக்குறுதி கொடுத்தார். இந்தியாவை மாற்றி காட்டுவேன் என்றார். இதை மட்டும் செய்து விட்டார். என்னவென்று கேட்டால் அவர் இந்தியா பெயரை பாரத் என மாற்றி விட்டார். தன்னுடைய சொல்லை காப்பாற்றி விட்டார் என சொல்கின்றார்.
சி.ஏ.ஜி. என்கிற அமைப்பு மத்திய, மாநில அரசுகளின் செலவு கணக்கை தணிக்கை செய்யும் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் மத்திய அரசில் ரூ.7½ லட்சம் கோடிக்கு கணக்கு இல்லை எனவும், மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு பணம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தொடர்ந்து நம்முடைய தலைவர் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
ஆனால் மத்திய பா.ஜனதா அரசு பதில் சொல்லாமல் அந்த சி.ஏ.ஜி. அறிக்கை தயார் செய்த அத்தனை அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்து விட்டார்கள்.
நம்முடைய மாநாட்டின் பெயர் மாநில உரிமைகள் மீட்பு மாநாடு. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விட்டு கொடுத்த நம்முடைய உரிமைகள் அத்தனையும் மீட்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இருந்து வரி வருவாயாக மத்திய அரசுக்கு ரூ.5 லட்சம் கோடி சேர்ந்துள்ளது. அதில் ரூ.2 லட்சம் கோடி மட்டுமே திருப்பி தரப்பட்டுள்ளது. ஆனால் உத்தரபிரதேசத்தில் ரூ.3 லட்சம் கோடி வருவாய் சென்றுள்ள நிலையில் ரூ.9 லட்சம் கோடி அந்த மாநிலத்திற்கு திருப்பி கொடுத்துள்ளது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. செயல்வீரர்கள் அனைவரும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி, பூட்டை உடைக்க சுத்தியல் பலமுறை அடித்தும் திறக்கவில்லை, சாவி எளிதாக பூட்டை திறந்தது. சுத்தியலிடம் சாவி சொன்னது நீ பூட்டின் தலையில் தட்டினாய், நான் பூட்டின் இதயத்தை தொட்டேன் என்று. இதில் பூட்டு என்பது தமிழ்நாடு. சுத்தியல் ஒன்றிய பா.ஜ.க. அரசு. மக்களின் இதயத்தை தொடும் சாவி தி.மு.க. என குட்டிக்கதை சொன்னார்.
- மாநாட்டின் தலைவர் உரையைத் தொடர்ந்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு வாழ்த்துரை வழங்குகிறார்.
- மாலையில் பல தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது.
சென்னை:
தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்றும், முன்னின்றும் நடத்தும், "தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு" மாநில உரிமை மீட்பு முழக்க மாநாடாக, வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டு வரலாற்றில் புது சரித்திரம் படைக்க உள்ள இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் இளைஞர் படை திரளுகிறது.
மாநாட்டுப் பந்தலுக்கு 'தந்தை பெரியார்' பெயரில் நுழைவாயில். திடலுக்குப் பெயரோ, அண்ணா திடல், கலைஞர் அரங்கம், பேராசிரியர் மேடை, வீரபாண்டியார் கொடி மேடை, முரசொலி மாறன் புகைப்பட கண்காட்சி.
வீரபாண்டி ஆ.ராஜா, வீரபாண்டி செழியன், சந்திரசேகர், 'நீட்' போராளிகள் அனிதா மற்றும் தனுஷ் ஆகியோர் பெயர்களால் தோரண வாயில்கள் என மாநாட்டின் ஒவ்வொரு ஏற்பாடும் உணர்ச்சியும், பொருளும் மிக்கதாய் அமைக்கப்படுகிறது.
காலை 9 மணியளவில் தி.மு.க. கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்குகிறது. தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தி.மு.க. கொடியினை ஏற்றி வைக்கிறார். காலை 9.30 மணியளவில் மாநாட்டு வரவேற்புக் குழு தலைவர் உரை, தி.மு.க. இளைஞர் அணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயல்.
9.45 மணியளவில் மாநாட்டின் தலைவராக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை முன்மொழிதலும் வழி மொழிதலும் நடைபெறும். காலை 10 மணியளவில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் உரை ஆற்றுகிறார்.
இளைஞர் அணி கண்ட களங்கள்-திருச்சி சிவா, திராவிட மாடல்-எல்லோருக்கும் எல்லாம்-ஆ.ராசா, நிதித்துறையில் மாநில உரிமைகள் பறிப்பு-தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டின் கல்விப்புரட்சி-அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மொழிப்போர்-இந்தித் திணிப்பு-கம்பம் செல்வேந்திரன், திராவிட இயக்க முன்னோடிகள்-சபாபதி மோகன், கலைஞர் பாதையில் நம் தலைவர்-திண்டுக்கல் லியோனி, மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி-சுப.வீரபாண்டியன், திராவிடம் சொல்லும் மனிதநேயம்-வக்கீல் அருள்மொழி, தலைவர் ஆட்சியில் தொழில்புரட்சி-டி.ஆர்.பி.ராஜா, கலைஞர்-ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிவிளக்கு-மதிவேந்தன், கலைஞரின் பேனா-கரு.பழனியப்பன், தி.மு.க. ஆட்சியில் திறன் மேம்பாடும் வேலைவாய்ப்பும்-எம்.எம்.அப்துல்லா, மருத்துவக் கட்டமைப்பு-இந்தியாவின் முன்னோடி தமிழ்நாடு-டாக்டர் எழிலன் நாகநாதன், இலக்கியமும் தி.மு.க.வும்-மனுஷ்யபுத்திரன், அவதூறுகளை அடித்து நொறுக்கிடும் கழகம்-வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, சமூக நீதி-வே.மதிமாறன், பத்திரிகையும் திராவிட இயக்கமும்-கோவி லெனின், 'நீட்' விலக்கு நம் இலக்கு-வக்கீல் ராஜீவ்காந்தி, பெரியாரும் பெண் விடுதலையும்-வக்கீல் செ.ம.மதிவதனி, தாயுமானவர் நம் தலைவர்-கனிமொழி, திருநகர் வாழ்வில் திராவிட அரசு-ரியா ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.
மாலை 6.30 மணியளவில் மாநாட்டுத் தலைவர் உரை நடைபெறும். இந்தியா திரும்பிப் பார்க்கும் வண்ணம் இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டை நடத்தி வாகை சூடும் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை உரையாற்றுகிறார்.
மாநாட்டின் தலைவர் உரையைத் தொடர்ந்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு வாழ்த்துரை வழங்குகிறார். தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் சிறப்புரையாற்றுகிறார். இரவு 7.30 மணியளவில் மாநாட்டின் முத்தாய்ப்பாக தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு நிறைவு பேரூரையாற்றுகிறார்.
அப்போது அவர் இளைஞர் அணி எதிர்காலத்தில் ஆற்ற வேண்டிய பணிகளுக்கு வியூகங்கள் வகுத்தளிப்பார்.
தி.மு.க. தலைவரின் உரையை அடுத்து சேலம் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் டாக்டர் வீரபாண்டி ஆ.பிரபு நன்றியுரையாற்றுகிறார். இந்த மாநாட்டு நிகழ்வுகளை, நிகழ்ச்சி நிரலை தி.செந்தில்வேல், திவ்யாநாதன் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.
மாலையில் பல தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த மாநாட்டில் மேற்கூறிய நிகழ்வுகள் மட்டுமின்றி மாநாட்டு மலர் வெளியீடு, 10 பாசறை நூல்கள் வெளியீடு, தி.மு.க. முன்னோடிகளுக்கு மரியாதை, 'நீட்' விலக்கு நம் இலக்கு' அஞ்சல் அட்டை ஒப்படைப்பு, புதுகை பூபாளம் கலைக்குழு, பாடகர் தெருக்குறள் அறிவு இசை நிகழ்ச்சி ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் மாநாட்டு பந்தலை ஆய்வு செய்தனர். அப்போது பந்தல் அமைக்கும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர். அதில் இனி வரும் நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவான ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் மாநாட்டு திடலில் ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேர் சாப்பிடக்கூடிய அளவில் உணவு அரங்கம், கழிப்பிட வசதி, சாலை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
+2
- சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 24-ந்தேதி தி.மு.க. 2-வது இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது.
- ஆர்டர் கொடுத்ததுமே 4 நிறுவனங்களிலும் பனியன் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.
திருப்பூர்:
திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் மூலம் பனியன் உள்ளிட்ட ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் விளையாட்டு போட்டிகள், கோவில் திருவிழாக்கள், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் அணியும் வகையில் ஆர்டரின் பேரில் டீ-சர்ட் பனியன்கள் தயாரித்து கொடுக்கப்படுகிறது.
இந்தநிலையில் சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ள தி.மு.க. 2-வது இளைஞரணி மாநாட்டிற்காக திருப்பூர் பனியன் நிறுவனங்களில் 4 லட்சம் டீ-சர்ட் பனியன்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பனியன் உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:-
சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 24-ந்தேதி தி.மு.க. 2-வது இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கும் இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்கள் அணிவதற்காக தி.மு.க., சார்பில் 4 லட்சம் பனியன்கள் தயாரிக்க திருப்பூரில் உள்ள 4 பனியன் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கப்பட்டது. முதலில் 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணி மாநாடு நடைபெற இருந்த நிலையில், சென்னை மிச்சாங் மழை வெள்ள பாதிப்பு காரணமாக 24-ந்தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால் ஆர்டர் கொடுத்ததுமே 4 நிறுவனங்களிலும் பனியன் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.
முதலில் மாநாடு 17-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் அதற்கு 2 நாள் முன்னதாகவே பனியன்கள் தயாரித்து கொடுத்து விட வேண்டும் என்று தயாரிப்பு பணியில் ஈடுபட்டோம். தற்போது 4 லட்சம் பனியன்களும் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்காக தயாரிக்கப்பட்டுள்ள டீ-சர்ட் பனியனில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளது. பனியனின் இடது, வலதுபுற கைகளில் கலைஞர் நூற்றாண்டு விழா லோகோ அச்சிடப்பட்டுள்ளது. மேலும் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு-2023, மாநில உரிமை மீட்பு முழக்கம் என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளது. மிகவும் தரமாகவும், தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்களை கவரும் வகையில் பனியன்களை தயாரித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள டீ-சர்ட் பனியன்கள் மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாநாடு நடைபெறும் 24-ந்தேதி அன்று அந்தந்த மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்கள் டீ-சர்ட் அணிந்து கலந்து கொள்ள உள்ளனர்.
- மிச்சாங் புயல் மற்றும் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஒத்திவைப்பு.
- தி.மு.க. இளைஞரணி மாநாடு 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை:
தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு கடந்த டிசம்பர் 17-ந்தேதி நடைபெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. சென்னையில் ஏற்பட்ட புயல் பாதிப்பு காரணமாக மாநாட்டு தேதி மாற்றப்பட்டது. டிசம்பர் 24-ந் தேதி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 24-ந் தேதி நடைபெறுவதாக இருந்த இளைஞர் அணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இப்படி 2 முறை மாநாடு தள்ளிப்போன நிலையில் தற்போது வருகிற 21-ந் தேதி இளைஞர் அணி மாநாடு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
'மிச்சாங்' புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று சேலத்தில் நடைபெறும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மாநாட்டில் உதயநிதி என்ன பேசப்போகிறார் என்பதை ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் உற்று நோக்க உள்ளனர்.
- பாராளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் 40 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்ய உள்ளார்.
சென்னை:
தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் வருகிற 21-ந்தேதி மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
மாநாட்டுக்கான பணிகளில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த மாநாட்டில் 'நீட் விலக்கு' கோரி நடத்தப்பட்டு வந்த கையெழுத்து இயக்கத்தின் நகல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.
மத்திய அரசுக்கு அனுப்ப இருக்கும் இந்த கையெழுத்து பிரதிக்காக மொத்தம் 50 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் பெறப்பட்டு வருகிறது.
இன்னும் 2 மாதத்தில் பாராளுமன்ற தேர்தலுகான தேதி அறிவிக்கப்பட உள்ளதால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தும் சேலம் இளைஞரணி மாநாடு மிக முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த மாநாட்டில் உதயநிதி என்ன பேசப்போகிறார் என்பதை ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் உற்று நோக்க உள்ளனர்.

ஏனென்றால் அண்மையில் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து விட்டு வந்துள்ளதால் இந்த மாநாட்டில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து பேசுவாரா? அல்லது பொதுவாக மத்திய அரசை குறை கூறுவாரா? என்பதை பார்க்க வேண்டும்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் 40 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்ய உள்ளார்.
அதற்கு முன்னோட்டமாக இளைஞரணி மாநாட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்துவதால் இந்த மாநாடு மிக முக்கியத்துவம் அடைந்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. இளைஞரணி செயலாளராகி அமைச்சரான பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் அதிக முக்கியத்துவம் கொடுத்து மாநாட்டை நடத்த தி.மு.க.வினர் தயாராகி வருகின்றனர்.
மூத்த அமைச்சரான கே.என்.நேரு களத்தில் இறங்கி மாநாட்டு பணிகளை கவனித்து வருகிறார்.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சம் பேர் மாநாட்டில் திரள்வார்கள் என்பதால் அவர்கள் தங்கி செல்வதற்கு வசதியாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களிலும் கட்சி நிர்வாகிகள் தங்குவதற்கு திருமண மண்டபங்கள், ஓட்டல் அறைகள் முன்பதிவு செய்துள்ளனர்.
வெளியூர்களில் இருந்து வரும் கட்சித் தொண்டர்கள் ஒருநாள் முன்னதாகவே வந்து தங்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசு விழாக்களில் இப்போதே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு நிகழ்ச்சிகளுக்கு மூத்த அமைச்சர்கள் வந்திருந்தாலும், அதில் உதயநிதி ஸ்டாலின்தான் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார்.
தென் மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பின் போதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்று வந்த நிகழ்வுதான் முன்னிலைப்படுத்தப்பட்டது.
அந்த வகையில் பார்க்கும் போது தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சேலம் மாநாட்டுக்கு பிறகு முக்கிய பொறுப்புகள் உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைக்கும் போது அவரது அரசியல் அந்தஸ்து மேலும் உயரும் என்று மாவட்டச் செயலாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இன்று இந்தியாவுக்கான முன்னோடித் திட்டங்களாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன.
- திசை திருப்பும் வதந்திகளில் கவனத்தை சிதறடிக்காமல், மாநாட்டின் மைய நோக்கமான, மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதமே உள்ள நிலையில் தி.மு.க.வில் தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடி வாரியாக பணியாற்ற கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது.
தமிழ்நாடு முழுவதும் பாக முகவர்கள் கூட்டத்தை மண்டல அளவில் கூட்டி அவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வந்தார்.
இதைத் தொடர்ந்து தகவல் தொழில் நுட்ப அணியினர் மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் வருகிற 21-ந் தேதி மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் இதை மிகப்பிரமாண்டமாக நடத்தி முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் அரங்கில் இளைஞரணி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி சுமார் 50 லட்சம் கையெழுத்து பெறப்பட்டுள்ள நிலையில் இதை மாநாட்டில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க இருக்கிறார். இந்த கையெழுத்து பட்டியல் அதன் பிறகு மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது.
இந்த நிலையில் மாநாட்டுக்கு வரும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலை தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தை பிறந்தாள் வழி பிறக்கும் என நம்பிக்கையளிக்கும் வகையில் மிச்சாங் புயல் பேரிடர் நிவாரணம், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கி உள்ளோம்.
தமிழ்நாடெங்கும் சமத்துவ பொங்கல் மகிழ்ச்சியெனப் பொங்கட்டும். அது சமூக வலைத்தளங்களில் எதிரொலிக்கட்டும்.
"நான்தான் எல்லாம்" என்ற சர்வாதிகாரப் போக்கு அகல, கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்கும் ஆட்சி ஒன்றிய அளவில் அமைய வேண்டும். அதற்கு தி.மு.க. இளைஞர் அணியின் சேலம் மாநாட்டில் நாம் எழுப்பும் மாநில உரிமை மீட்பு முழக்கம் டெல்லி வரை அதிரட்டும்.
கவனச் சிதறல்களுக்கு இடம் கொடுக்காமல் மாநாட்டின் மைய நோக்கத்தை முன்னெடுப்போம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தொண்டர்களுக்கு பொங்கல்-தமிழர் திருநாள் வாழ்த்து கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு எதிர்கொண்ட மிச்சாங் மழை-வெள்ள இயற்கைப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பதிலும் மீட்டெடுப்பதிலும் நமது திராவிட மாடல் அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்றியது. கடும் பேரிடர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் டெல்லியில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் நானே நேரில் சென்று வலியுறுத்தியபோதும், அத்தகைய அறிவிப்போ, தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான நிதியோ வரவில்லையென்றாலும், நம் மக்களைக் காக்க வேண்டிய கடமையை உணர்ந்து, மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6000 ரூபாய் நிதி வழங்கியதுடன், வீடுகளை இழந்த குடும்பத்தினர், படகுகள் சேதமான மீனவர்கள், உயிரிழப்புகளை எதிர்கொண்டவர்களின் குடும்பத்தினர், பயிர்கள் பாதிக்கப்பட்ட உழவர்கள், தொழில் முடங்கிய வணிகர்கள் என பல்வேறு தரப்பினருக்கான நிவாரணத் தொகையையும் உயர்த்தி அறிவித்து வழங்கி வருகிறது திராவிட மாடல் அரசு.
முதலமைச்சர் என்கிற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் இந்தப் பணிகளை மேற்கொண்ட வேளையில், தி.மு.க.வின் நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரவர் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, அவர்களின் துயர் துடைக்கும் கைகளாகச் செயல்பட்டீர்கள்.
பொருளாதாரப் பள்ளத்தாக்கில் விழுந்துகிடந்த தமிழ்நாட்டை இரண்டரை ஆண்டுகளில் மிகுந்த பாடு பட்டுச் சமதளத்திற்குக் கொண்டு வந்து, சிகரத்தை நோக்கிப் பயணிக்கச் செய்திருக்கிறது திராவிட மாடல் ஆட்சி.
மதவெறிக்கு இடந்தராத, மொழி ஆதிக்க சிந்தனையில்லாத, மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற ஓர் அரசை அமைப்பதற்கான காலம் கனிந்து வந்துள்ளது. அதற்கான உற்சாகத்தைத் தரும் தொடக்க விழாவாக இந்தப் பொங்கல் திருநாள் அமைந்துள்ளது.
தை பிறக்கிறது. இனி வரும் மாதங்களில் வழி பிறக்கட்டும். தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகச் சென்னை சங்கமம் நிகழ்வில் கேட்கின்ற பறை முழக்கம், தமிழ்நாட்டிற்கான வெற்றி முழக்கமாக அமையட்டும். ஜனவரி 21 அன்று சேலத்தில் நடைபெறுகிற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு எழுப்புகின்ற 'மாநில உரிமை மீட்பு முழக்கம்' டெல்லி வரை அதிரட்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற நம் இலக்கினை அடைவதற்கு உத்வேகமாகட்டும்.
எழுச்சிமிகுந்த இளைஞரணி மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்து, தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் பெரும் ஆர்வத்துடன் திரண்டு வரத் தயாராகியுள்ள நிலையில், இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமை முழக்கம் எனும் நோக்கத்தைத் திசை திருப்ப நினைக்கும் எந்த முயற்சிகளுக்கும் கழகத்தினர் யாரும் இடம் கொடுத்திட வேண்டாம். மாநில உரிமைகளைக் காத்து கூட்டாட்சி இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தைச் செயல்படுத்துவதே சேலம் இளைஞர் அணி மாநாட்டின் நோக்கமாகும்.
திசை திருப்பும் வதந்திகளில் கவனத்தை சிதறடிக்காமல், மாநாட்டின் மைய நோக்கமான, மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள். நாடு தழுவிய அளவில் அதுவே முதன்மைச் செய்தியாகட்டும்.
எப்போதும் பொங்கல் அன்று கழகத் தோழர்கள் என்னைச் சென்னையில் வந்து சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளீர்கள். இம்முறை கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் அவரவர் பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பொது மக்களின் பங்கேற்புடன் தமிழர் திருநாளைச் 'சமத்துவப் பொங்கல்' என்று பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண் டும். கழக உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிடுங்கள். பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்க வேண்டும்.
அனைவரது இல்லங்களிலும் 'சமத்துவப் பொங்கல்' எனக் கோலமிட்டு, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்! அதுதான் தலைநகரில் பொங்கல் கொண்டாடும் எனக்கு நீங்கள் தரும் இனிப்பான பொங்கல் வாழ்த்தாகும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- சேலம் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
- 310 கிலோ மீட்டருக்கு சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடைபெறும்.
சென்னை:
தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டத்தை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
சேலம் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. 3 முதல் 4 லட்சம் இளைஞர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். 310 கிலோ மீட்டருக்கு சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடைபெறும். அதனை இறுதியாக சேலத்தில் தலைவரிடம் கொடுப்போம். 85 லட்சம் கையெழுத்துகள் நீட் தேர்வை விலக்க கோரி வாங்கி உள்ளோம். மாநாட்டின் போது அதை திமுக தலைவரிடம் ஒப்படைப்போம். பின்னர் நேரடியாக நானே குடியரசுத் தலைவரை சந்தித்து அதனை வழங்க இருக்கிறேன். ராமர் கோவில் திறப்பிற்கோ அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை. அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதால்தான் அதில் திமுக-விற்கு உடன்பாடு இல்லை" என்றார்.
- கழகத் தலைவர் என்ற பொறுப்பைச் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான என்னை உங்கள் அனைவரிடமும் அடையாளப்படுத்தியது இளைஞரணிதானே!
- கழகத் தலைமையின் சுமையைப் பங்கிட்டுக் கொள்ளும் அணியாக இளைஞரணி எப்போதும் முன்னிற்பது வழக்கம்.
சென்னை:
தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
'எல்லாருக்கும் எல்லாம்' என்கிற இலட்சியத்தைக் கொண்டுள்ள நமது திராவிட மாடல் அரசின் சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் தமிழ்நாட்டு மக்களின் மனதில் மகிழ்ச்சி பொங்குகிற வகையில் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு இவற்றுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. பொங்கல் நன்னாளில் ஏழை -எளியோர் புத்தாடை உடுத்திட ஏதுவாகவும், நெசவாளர்களின் வாட்டம் போக்கிடும் செயலாகவும் வேட்டி - சேலைகள் பல ஆண்டுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு அவற்றைத் தாமதப்படுத்தாமல் பொங்கல் நேரத்திலேயே வழங்கியது திராவிட மாடல் அரசு. தரமாகவும் அழகாகவும் வேட்டி - சேலைகள் இருப்பதைப் பொங்கல் நாளில் அதனை உடுத்தியிருந்தது தொடர்பான பதிவுகளைச் சமூக வலைத்தளத்தில் கண்டேன்; நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்கிற்று!
அனைத்துத் தரப்பு மக்களும் கொண்டாடும் திருநாள்தான் பொங்கல் விழா. அதனைத் தமிழர் திருநாள் என்று இன உணர்வும் மொழி உணர்வும் கொண்ட பண்பாட்டுத் திருவிழாவாக மாற்றிய பெருமை திராவிட இயக்கத்திற்குரியது. எவ்வித ஏற்றத்தாழ்வுமின்றி, தமிழர்கள் அனைவரும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற குறள் நெறியைப் பின்பற்றி வாழ்கின்ற தமிழ் நிலத்தின் உயர்ந்த பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையிலும், மத வெறியை - சாதிய வன்மத்தை - மொழி ஆதிக்கத்தை இங்கே விதைக்க நினைப்போருக்கு ஒருபோதும் இந்த மண்ணில் இடமில்லை என்பதைக் காட்டும் வகையிலும் சமூகநீதி இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 'சமத்துவப் பொங்கல்' விழாவைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடுமாறு உங்களில் ஒருவனான நான் அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
உங்களுக்கு அன்புக் கட்டளையிடும்போது, அதனை முதலில் செயல்படுத்தக் கூடியவனாக நான் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நான் மறப்பதில்லை. அதனால், எனது கொளத்தூர் தொகுதியில் சமத்துவப் பொங்கல் விழாவைப் பல்வேறு மதத்தினர், பல மொழியினர் சூழக் கொண்டாடி மகிழ்ந்தேன். அதுபோலவே, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நம்முடைய கழக நிர்வாகிகள் சமத்துவப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிய செய்திகள் தொடர்ந்து வந்தபோது சர்க்கரைப் பொங்கலாக இதயம் இனித்தது. தலைநகரான சென்னை மாநகரம் தொடங்கி, ஊராட்சிகள் வரை சமத்துவப் பொங்கலின் மணம் வீசியது. இதுதான் திராவிட மாடல் தமிழ்நாடு. இதுவே, இந்திய ஒன்றியம் முழுமைக்கும் தேவைப்படுகிறது. அதனை அரசியல் களத்தில் எடுத்துரைக்கும் வகையில், சேலம் மாநகரில் ஜனவரி 21-ஆம் நாள் மிகுந்த எழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு.

கழகத் தலைவர் என்ற பொறுப்பைச் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான என்னை உங்கள் அனைவரிடமும் அடையாளப்படுத்தியது இளைஞரணிதானே! 1980-ஆம் ஆண்டில் மதுரை ஜான்சிராணி பூங்காவில் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் இளைஞரணியைத் தொடங்கி வைத்து, அதனை என் கைகளில் ஒப்படைத்தார். 1982-ஆம் ஆண்டு முதல் இளைஞரணிச் செயலாளராகப் பணியாற்றத் தொடங்கி, 30 ஆண்டுகளுக்கு மேல் அதனை வழிநடத்தி, தலைவர் கலைஞரின் நம்பிக்கையைப் பெற்றேன். 2007-ஆம் ஆண்டு நெல்லை மாநகரில் இளைஞரணியின் முதல் மாநில மாநாடு, வெள்ளி விழா மாநாடாகச் சிறப்பாக நடைபெற்று, அடுத்த தலைமுறையினரைக் கழகத்தின் பக்கம் ஈர்த்தது.
கழகத் தலைமையின் சுமையைப் பங்கிட்டுக் கொள்ளும் அணியாக இளைஞரணி எப்போதும் முன்னிற்பது வழக்கம். இப்போதும் அந்த வழிமுறைப்படி, 2024 பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் சூழலில், ஜனநாயகப் போர்க்களத்திற்குக் கழக வீரர்களை ஆயத்தப்படுத்தும் பயிற்சிப் பாசறையாக அமையவிருக்கிறது, சேலத்தில் நடைபெறும் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு. இது கூடிக் கலையும் நிகழ்வல்ல; கொள்கையைக் கூர் தீட்டும் உலைக்களம்! மாநில உரிமை முழக்கத்தை முன்னெடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு.
பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, கழகத்தையும் தமிழ்நாட்டையும் தலைமையேற்று வழிநடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் 1970-ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற கழக மாநில மாநாட்டில் ஐம்பெரும் முழக்கங்களை நமக்கு வழங்கினார். அதில் ஐந்தாவது முழக்கம், 'மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி' என்பதாகும். பன்முகக்தன்மை கொண்ட இந்திய ஒன்றியம் வலிமையாக இருக்க வேண்டுமென்றால், மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே மாநில சுயாட்சிக் கொள்கையின் நோக்கம். அது நிறைவேற்றப்பட்டால்தான், உண்மையான கூட்டாட்சிக் கருத்தியலின்படி இந்திய ஒன்றியம் வலிமையுடன் செயல்பட முடியும்.
பத்தாண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பலவும் பறிபோய்விட்டன. கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை, சட்ட உரிமை என மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு அபகரிக்கும் போக்கு தொடர்வதையும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அராஜகப் போக்கு மிகுவதையும் காண்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் போட்டியாக, நியமனப் பதவியில் உள்ள கவர்னர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைக்கும் எதேச்சாதிகாரப் போக்கு என்பது மாநிலங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானதாகும்.
கவர்னர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்குச் சிறிதும் தகுதியில்லாதவர்களாக, மலிவான - தரம்தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது. ஆன்மீக உணர்வுகளை அரசியலாக்கி மதவெறியைத் தூண்டுவது, இந்தி - சமஸ்கிருதத்தைத் திணித்துத் தமிழ் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளையும் அதன் பண்பாட்டையும் சிதைப்பது, திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லார் மீதும் காவிச் சாயம் பூசுவது என்பதை ஒன்றிய ஆட்சியாளர்களே முன்னின்று செய்கின்ற மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர - அவசிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய அளவில் சேலத்தில் கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது.
சென்னையையும் பிற மாவட்டங்களையும் கடுமையாகப் பாதித்த மிச்சாங் புயல் - மழை காரணமாகவும், தென்மாவட்டங்களில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாறு காணாத மழை - வெள்ளத்தினாலும் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட இளைஞரணி மாநில மாநாடு, ஜனவரி 21-இல் சேலத்தில் எழுச்சியுடன் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இளைஞரணிச் செயலாளரும் இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி முன்னெடுத்து வருகிறார். இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் அவருக்குத் தோளோடு தோள் நின்று பணியாற்றுவதைக் காண்கிறேன். அதுபோலவே, சேலம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள கழக முதன்மைச் செயலாளர் - மாநாடுகளைச் சிறப்பாக நடத்திக்காட்டுவதில் வல்லவரான கே.என்.நேரு அவர்களும், சேலம் மாவட்டக் கழக நிர்வாகிகளும் பந்தல் அமைப்பு தொடங்கி அனைத்து ஏற்பாடுகளையும் இரவு - பகலாக மேற்கொண்டு வருகிறார்கள்.

இளைஞரணி மாநில மாநாட்டின் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு தழுவிய அளவில் இருசக்கர வாகனப் பேரணியை கண்கவரும் வகையில் நடத்திக் காட்டிய இளைஞரணி நிர்வாகிகள், இன்று (ஜனவரி 18) காலையில் சென்னை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலையிலிருந்து சுடரேந்தித் தொடர் ஓட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தொடங்கி வைத்த இந்தச் சுடரோட்டம் சேலம் வரை தொடர்கிறது.
இந்த நேரத்தில், நான் நினைத்துப் பார்க்கிறேன். காஞ்சிபுரத்தில் 1972-ஆம் ஆண்டு நடந்த மாநில சுயாட்சி மாநாட்டின்போது, கோபாலபுரம் இளைஞர் தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலிருந்து அண்ணா ஒளிச்சுடரை ஏந்தி - ஓடி, மாநாட்டு மேடையில் தலைவர் கலைஞர், நாவலர், இனமானப் பேராசிரியர் ஆகியோரிடம் நான் வழங்கியது என் நினைவுக்கு வருகிறது. சேலத்தில் நடைபெறும் மாநில மாநாட்டிற்காக இளைஞரணியினர் ஏந்தியுள்ள ஒளிச்சுடர், காலம்தோறும் கொள்கை வெளிச்சம் பாய்ச்சிடும் அணியாக இளைஞரணித் திகழும் என்பதை மெய்ப்பிக்கிறது. மாநாட்டில் தலைமையுரை ஆற்றுகின்ற உங்களில் ஒருவனான நானும் மனதளவில் என்றும் என்னை இளைஞனாகவே கருதுகிறேன்.
நான் வளர்த்து ஆளாக்கிய அணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்பதில் ஒரு தாயின் உணர்வுடன் பெருமிதம் கொள்கிறேன். தொடர்ச்சியான பணிகள் காரணமாக, மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஒன்றிரண்டு கடிதங்களே என்னால் எழுத முடிந்தது. எனினும், இளைஞரணியின் 25-ஆம் ஆண்டினையொட்டி 2007-ஆம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற இளைஞரணியின் முதலாவது மாநில மாநாட்டின்போது, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளுக்கு எழுதிய 25 கடிதங்களை முரசொலியின் ஒவ்வொரு நாளும் முதல் பக்கத்தில் மீண்டும் வெளியிட்டு, இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்றுப் பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது கழகம்.
மாநாட்டு நாள் நெருங்கி வரும் நிலையில், உங்களில் ஒருவனான நான் இந்த மடலை எழுதுகிறேன். பாராளுமன்றத் தேர்தலும் நெருங்கி வருகிறது. ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன. இந்தப் பொருத்தமான சூழலில்தான், மாநில உரிமை மீட்பு முழக்கத்தினை மையமாகக் கொண்டு இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது.
தம்பி உதயநிதி அழைக்கிறார். கழக உடன்பிறப்புகளே சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் திரண்டிடுவீர். நான் முன்பே சொன்னதுபோல கடல் இல்லாச் சேலம் மாவட்டம், கருப்பு - சிவப்புக் கடல் ஆகட்டும். இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- இன்று வரை நான் கட்சித் தலைவராக செயல்படவில்லை, தலைமைத் தொண்டனாகத்தான் செயல்படுகிறேன்.
- இளைஞரணி மாநாட்டின் நோக்கமே மாநில உரிமைகளை வென்றெடுப்பதுதான்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,
இளைஞரணியின் எழுச்சி மிகுந்த 2-வது மாநாடு சேலத்தில் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. சேலத்திற்கு வர நான் தயாராகிவிட்டேன், நீங்கள் தயாரா?...
இன்று வரை நான் கட்சித் தலைவராக செயல்படவில்லை, தலைமைத் தொண்டனாகத்தான் செயல்படுகிறேன்.
இளைஞரணி மாநாட்டின் நோக்கமே மாநில உரிமைகளை வென்றெடுப்பதுதான். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன.
எனது உடன்பிறப்புகளே!
கழக உடன்பிறப்புகளே!
கலைஞரின் உடன்பிறப்புகள்!
சேலத்தில் எனது கண்கள் உங்களது முகங்களைத்தான் தேடும்! என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
எனது உடன்பிறப்புகளே!
— M.K.Stalin (@mkstalin) January 18, 2024
கழக உடன்பிறப்புகளே!
கலைஞரின் உடன்பிறப்புகள்!
வரும் ஞாயிறு அன்று (ஜனவரி 21), சேலத்தில் எனது கண்கள் உங்களது முகங்களைத்தான் தேடும்!https://t.co/DDFVVSX3cf#LetterToBrethren@dmk_youthwing @Udhaystalin pic.twitter.com/kqUywQ1ci2
- பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசுகிறார்கள்.
- மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் சைவ உணவு மற்றும் அசைவ உணவு மதியம் வழங்கும் வகையில் உணவு சமைத்து பரிமாறப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு தொடர்பாக இன்று மாநாட்டு திடலில் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை மாலை 5 மணி அளவில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விமானத்தில் சேலம் வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வந்து விடுகிறார். மாலை 6 மணி அளவில் மாநாட்டு சுடர் திடலை வந்தடைகிறது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாநாடு திடலுக்கு வருகிறார்கள்.
1500 பேர் பங்கேற்றுள்ள மோட்டார்சைக்கிள் பேரணி மாநாடு திடலை வந்தடைகிறது. 1000 டிரோன்கள் பங்கேற்கும் டிரோன் ஷோ நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சுமார் 1 மணி நேரம் நடைபெறுகிறது.
மறுநாள் காலையில் (21-ந்தேதி) 9 மணி அளவில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மாநாடு திறப்பு விழா மற்றும் புகைப்பட கண்காட்சி ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதன் பிறகு காலை 10 மணி அளவில் மாநாடு தொடங்கியவுடன் தீர்மானங்கள் வாசிக்கப்படுகின்றன.
இதையடுத்து பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசுகிறார்கள். காலையில் சுமார் 1 மணி நேரம் அமர்ந்து முதலமைச்சர் மாநாடு நிகழ்ச்சிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு தி.மு.க. முன்னணி தலைவர்கள் மாநாட்டில் பேசுகிறார்கள். 7 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேரூரை நிகழ்த்துகிறார்.
இந்த மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, உணவு வசதி போன்றவை செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருந்து மட்டும் 1200 பஸ்களில் தொண்டர்கள் மாநாட்டுக்கு வருகை தர உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஏற்பாட்டின் தொடக்கமாக அமையும் முன்னோட்டமாக இந்த மாநாடு அமையும். வெற்றி மாநாடாக அமையும். வாகனம் நிறுத்துவதற்கு 300 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு ஊரில் இருந்தும் வாகனம் வரும்போது அவர்களுக்கு ஜி.பி.எஸ். நவீன வசதி செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் சைவ உணவு மற்றும் அசைவ உணவு மதியம் வழங்கும் வகையில் உணவு சமைத்து பரிமாறப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தார்.
- மாநாட்டு திடலில் அமைக்கப்பட்ட 100 அடி உயர கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.
- சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்தநாயக்கன்பாளையம் அருகில் சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
சேலம்:
தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இன்று காலை 9.15 மணி அளவில் கொடியேற்று நிகழ்ச்சியுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் மாநாட்டு திடலுக்கு வந்தனர். உதயநிதி ஸ்டாலின் திறந்த ஜீப்பில் வெள்ளை நிற இளைஞர் அணியின் டி-சர்ட் அணிந்தபடி வருகை தந்தார். அவரை பார்த்ததும் கூடி இருந்த தி.மு.க. தொண்டர்கள், இளம் தலைவர் வாழ்க என கோஷம் எழுப்பினார்கள். அதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலினும் மாநாடு திடலுக்கு வருகை தந்தார். அவரை வாழ்த்தியும் கோஷங்கள் எழுப்பட்டன. திராவிட நாயகன், கழக தலைவர், அண்ணன் தளபதி என்ற கோஷங்கள் எழுப்பி வரவேற்றனர்.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மாநாட்டு திடலில் அமைக்கப்பட்ட 100 அடி உயர கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், இளைஞர் அணியை சேர்ந்த மாநில நிர்வாகிகள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர். இளைஞர் அணி மாநில துணை செயலாளர் தூத்துக்குடி ஜோயல் தலைமையில் அனைத்து துணை செயலாளர்களும் பங்கேற்றனர்.
மாநாட்டுக்கு வந்த முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்ற இடம் அருகில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற நிர்வாகிகள், மற்ற தொண்டர்கள் தூரத்தில் நின்றபடி கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மாநாட்டு கொடியேற்ற நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டு வெல்லட்டும் வெல்லட்டும் தி.மு.க. வெல்லட்டும், வாழ்க வாழ்கவே தளபதி வாழ்கவே என வாழ்த்து கோஷங்கள் எழுப்பினார்கள். வாழ்த்து கோஷங்கள் விண்ணை பிளந்தது.
இதையடுத்து தி.மு.க. கொடி கம்பம் அருகில் முன்னாள் நிறுவப்பட்டிருந்த தலைவர்கள் தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
மாநாட்டையொட்டி திடல் முழுவதும் தி.மு.க. தொண்டர்கள் நிரம்பி வழிந்தனர். மாநாட்டில் கடைகள் போடப்பட்டு இருந்தது. இந்த கடைகளில் தலைவர்களின் புகைப்படங்கள் விற்பனையானது. சேலம் மாநகரில் இருந்து மாநாட்டு திடல் வரையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து பேனர்கள் வைத்திருந்தனர். வாழ்த்து பேனரில் தளபதி, சின்னவர், மாமன்னன், இளம் தலைவர் வருக... வருக... என்பன போன்ற வாசகங்கள் இடம் பெற்று இருந்தன.
மாநாட்டில் பெத்தநாயக்கன்பாளையம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு இருந்தது. மாநாட்டுக்கு செல்லும் வழிநெடுகிலும் வாழை மரக்கன்றுகள் நடப்பட்டு, கொடி தோரணங்களும் கட்டப்பட்டு இருந்தன.