என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ettayapuram"

    • 3-ந் தேதி ஒரு கும்பல் கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது.
    • திருடிய நகைகளை காட்டுப்பகுதியில் வைத்துள்ளதாக தகவல்.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலநம்பிபுரத்தை சேர்ந்தவர் சீதாலெட்சுமி (வயது 75), அவரது மகள் ராமஜெயந்தி (45) ஆகியோரை கடந்த 3-ந் தேதி ஒரு கும்பல் கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது.

    இதுதொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தாப்பாத்தி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (20). மேலநம்பிபுரத்தை சேர்ந்த முகேஷ்கண்ணன் (25), ஆகியோர் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இருவரையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தபோது அவர்கள் தப்பியோடினர். இதில் அவர்களுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான மேலநம்பிபுரத்தை சேர்ந்த முனீஸ்வரன் (25) என்பவர் அயன் வடமலாபுரம் காட்டுபகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து நெல்லை சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சந்தோஷ் ஹதிமணி உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் தலைமையில் 5 டி.எஸ்.பி.க்கள், 20 போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு காட்டுப்பகுதியில் தீவிரமாக தேடினர்.

    மேலும் 6 டிரோன் காமிராக்கள் பறக்க விட்டும் முனீஸ்வனை தேடி வந்தனர். அவர்கள் அயன்வடமலாபுரம், முத்துலாபுரம, தாப்பாத்தி, கீழகடந்தை, புதுப்பட்டி, ரகுராமபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் வைப்பாறு காட்டுப்பகுதி யிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் அயன்வடமலாபுரத்தில் உள்ள சகோதரி வீட்டில் முனீஸ்வரன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சுற்றி வளைத்து அவரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் பின்வாசல் வழியாக தப்பி ஓட முயற்சித்தார். அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    கடந்த 2 நாட்களாக போலீசாரிடம் சிக்காமல் இருக்க காட்டுப்பகுதியில் மறைந்திருந்ததால் பசி ஏற்பட்டு தனது சகோதரி வீட்டில் சாப்பிடுவதற்காக முனீஸ்வரன் சென்றுள்ளார். அவரும் முனீஸ்வரனுக்கு சாப்பாடு கொடுத்துள்ளார். அப்போது போலீசாருக்கு தகவல் கிடைத்து அங்கு சென்று கதவை உடைத்து சென்று முனீஸ்வரைனை கைது செய்தனர்.

    முனீஸ்வரனை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது திருடிய நகைகளை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காட்டுப்பகுதியில் வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவரை அழைத்துக்கொண்டு அந்த காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது நகைகளை எடுத்தபோது அங்கிருந்த ஒரு அரிவாளை எடுத்து முனீஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ், காவலர் ஜான்சன் தேவராஜ் ஆகியோரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றனர். அப்போது முனீஸ்வரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

    பின்னர் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் முனீஸ்வனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    எட்டயபுரம் அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எட்டயபுரம்:

    மதுரையில் இருந்து மூலிகை செடிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தூத்துக்குடிக்கு சென்றுகொண்டிருந்தது. லாரியை நெல்லையை அடுத்த மானூரை சேர்ந்த மோகன்(வயது 52) என்பவர் ஓட்டினார். லாரி எட்டயபுரம் அருகே உள்ள கோடாங்கிபட்டி விலக்கு பகுதியில் பாலத்தில் சென்றபோது பின்னால் மதுரையில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு ஒரு வேன் தூத்துக்குடி நோக்கி வந்தது.

    வேனை மதுரை கன்னியம்பட்டியை சேர்ந்த பிரகாசம்(31) என்பவர் ஓட்டினார். எதிர்பாராதவிதமாக லாரியின் பின்னால் வேன் பயங்கரமாக மோதியது. இதில் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பாலத்தில் இருந்து ரோட்டோரத்தில் கவிழ்ந்தது.

    டிரைவர் மோகன் லாரிக்கு அடியில் சிக்கினார். இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து மாசார்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து பற்றி போலீசார் வழக்குபதிந்து வேன் டிரைவர் பிரகாசத்தை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் ஓடும் பேருந்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    எட்டயபுரம்:

    மதுரை திருமங்கலம் தாலுகா வேப்பன்குளத்தை சேர்ந்தவர் விஜய். கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி (வயது35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முத்துமாரிக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் வயிற்றுவலி தீரவில்லை. இதில் வாழ்கையில் வெறுப்படைந்து காணப்பட்டார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்செந்தூருக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் நேற்று மீண்டும் மதுரை செல்வதற்காக திருச்செந்தூரில் இருந்து பேருந்தில் ஏறினார்.

    பஸ் எட்டயபுரம் அருகே உள்ள எப்போதும் வென்றான் அருகே வந்த போது பேருந்தில் இருந்து மயங்கிய நிலையில் காணப்பட்டார். அப்போது அருகில் இருந்தவர்கள் முத்துமாரியிடம் விசாரித்த போது அவர் வி‌ஷத்தை குடித்து விட்டதாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியவாறு உயிருக்கு போராடினார். உடனடியாக பேருந்தை நிறுத்தி 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    எட்டயபுரத்தில் இன்று நகைக்கடை சுவரை துளையிட்டு 100 பவுன் நகை மற்றும் 10 கிலோ வெள்ளி ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    எட்டயபுரம்:

    எட்டயபுரம் பெரிய கிணற்று தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் வெங்கடேஷ் ராஜா. எட்டயபுரம் வர்த்தக சங்க துணைத்தலைவர். இவர் அரசு மருத்துவமனை எதிரே ஒரு நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் பின்புறம் ஒரு தனியார் லாட்ஜ் உள்ளது.

    இந்நிலையில் இன்று காலை லாட்ஜின் சுவர் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த காவலாளி இதுகுறித்து லாட்ஜ் உரிமையாளர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    அப்போது லாட்ஜின் பின்பக்க சுவரை துளையிட்டு நகைக்கடைக்குள் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டியை வெல்டிங் மிஷின் கொண்டு உடைத்து 100 பவுன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    மேலும் அங்கிருந்த 3 சி.சி.டி.வி. கேமிராவையும், ஒரு டி.வி.யையும், கொள்ளையர்கள் தூக்கி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்ராம் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    கொள்ளை நடந்த நகைக்கடை

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் ஒரு நகைக்கடையை உடைத்து கொள்ளை போனது. இந்நிலையில் இன்று மற்றொரு நகைக்கடையில் சுவரை துளையிட்டு 100 பவுன் நகைகள் கொள்ளை போனது எட்டயபுரம் கடை உரிமையாளர்களுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை கைது செய்து திருட்டு போன நகைகளை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். #Tamilnews
    ×