என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fatima (RA)"

    • மூன்றாம் பிறையில் அன்னை பாத்திமா (ரலி) நினைவு கூரப்படுகிறார்கள்.
    • ரமலான் பிறை 3-வது தினத்தில் அன்னை இறைவனடி சேர்ந்தார்கள்.

    பாத்திமா (ரலி) அவர்களின் தியாகம்

    புனித ரமலான் மாதம் பிறந்துவிட்டால், அதன் மூன்றாம் பிறையில் அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் நினைவு கூரப்படுகிறார்கள். ஹிஜ்ரி 11-ம் ஆண்டில் ரமலான் பிறை 3-வது தினத்தில் புதன்கிழமை அன்று அன்னை அவர்கள் தமது 25-ம் வயதில் (கி.பி. 632 நவம்பர் 21) பூமியின் மடியிலிருந்து இறைவனடி சேர்ந்தார்கள்.

    அன்னை பாத்திமா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கும் அன்னை கதீஜா (ரலி) அவர் களுக்கும் பிறந்த கடைக்குட்டி செல்லக் குழந்தை ஆவார். நபி (ஸல்) அவர்களுக்கு நபி பட்டம் கிடைத்த ஓராண்டிற்குப் பின் நபி (ஸல்) அவர்களின் 41-ம் வயதினிலே அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் பிறந்தார்கள்.

    இவர்கள் சிறுவயதிலேயே தமது தந்தையின் மார்க்கக் கொள்கையை, ஓரிறைக் கொள்கையாக ஏற்றுக்கொண்டு முஸ்லிம் பெண்மணியாக நடந்து கொண்டார்கள்.

    எல்லா சூழ்நிலைகளிலும் தந்தைக்கு துணையாக, தந்தையின் சொல்படி வாழ்ந்து வந்தார்கள். தந்தையின் சொல்லும், செயலுமே நல்வழி காட்டும் என்பதை உணர்ந்து அதன்படி நடந்தார்கள்.

    தமது தாயின் மரணத்திற்கு பிறகு நபி (ஸல்) அவர்களின் சோதனையான காலகட்டங்களில் தாய்க்கு நிகராக இருந்து ஆறுதல் அளித்து வந்தார்கள். நிழலாக இருந்து தந்தையை கவனித்துக்கொண்டார்கள்.

    உஹதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களின் முகம் காயப்படுத்தப்பட்டது. அவர்களின் நடுப்பல் உடைக்கப்பட்டது. அவரது தலைக்கவசம் தலையின் மீது வைத்து நொறுக்கப்பட்டது. பாத்திமா (ரலி) தமது தந்தை நபி (ஸல்) அவர்களின் மேனியிலிருந்து வழிந்த ரத்தத்தை கழுவிக்கொண்டிருந்தார்கள். பாத்திமாவின் கணவர் அலி (ரலி) ரத்தத்தை தடுத்து நிறுத்த முயற்சித்தும் இன்னும் அது அதிகமாகிக் கொண்டே போனது. இதைப்பார்த்த பாத்திமா (ரலி) ஒரு பாயை எடுத்து, எரித்து சாம்பலாக்கி அதை நபியின் காயத்தில் வைத்து அழுத்தினார்கள். உடனே, ரத்தப் போக்கு நின்று விட்டது. (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: புகாரி)

    'ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் கஅபாவினருகில் தொழுது கொண்டிருந்தார்கள். குரைஷிகளில் மோசமான ஒருவன், நபி (ஸல்) அவர்கள் சிரசை தாழ்த்தியபோது ஒட்டகத்தின் சாணத்தையும், ரத்தத்தையும், கருப்பையையும் எடுத்து வந்து அன்னாரின் இரு தோள் புஜத்தில் போட்டுவிட்டான். நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாவிலேயே கிடந்தார்கள். இதைப்பார்த்து, குரைஷிகள் ஒருவர் மீது ஒரு வர்

    சாய்ந்துவிடும் அளவுக்கு சிரித்தார்கள். சிறுமியாக இருந்த பாத்திமா (ரலி) அவர் தான் அவற்றை அப்புறப்படுத்தினார். அப்புறம்தான் நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். பாத்திமா (ரலி) குரைஷிகளை ஏச ஆரம்பித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் 'இறைவா! குரைஷிகளை நீ பார்த்துக் கொள்!' என்று மூன்று தடவை கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: இப்னுமஸ்ஊத் (ரலி), நூல்:புகாரி)

    அலி (ரலி) அவர்களுக்கும், பாத்திமா (ரலி) அவர்களுக்கும், ஹிஜ்ரி 2-ம் ஆண்டு ரமலான் மாதம் திருமணம் நடந்தது. அப்போது பாத்திமா(ரலி) அவர்களுக்கு 15 வயது 5 மாதங்கள் ஆகும். அலி (ரலி) அவர்களுக்கு 21 வயது 5 மாதங்கள் ஆகும்.

    பாத்திமா (ரலி) நபியின் மகள் என்பதனால் அவர்களுக்கென்று தனி சலுகைகளை நபி (ஸல்) அவர்கள் வழங்கவில்லை. 'முஹம்மதின் மகள் பாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள்! தருகிறேன். ஆனாலும், இறைவனின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னைக் காப்பாற்ற முடியாது' என நபி (ஸல்) அவர்கள் தன் மகளிடம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் தன் மகளிடம் கனிவு, பாசம் காட்டினாலும், நீதி, நேர்மையுடன் நடந்து கொண்டார்கள்.

    • ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப்படுகின்றன.
    • ரமலானில் நோன்பு மற்றும் பிரார்த்தனைகளால் பலன்கள் பெறுவோம்.

    ரமலானில் திறக்கப்படும் வானின் கதவுகள்

    'ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    புனித ரமலானில் நோன்பாளிகளுக்காக வானத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. அவர்களின் நோன்பும், மாண்பும், வணக்கமும், வழிபாடும், வானம் வரைக்கும் கடந்து, பிறகு இறைவனிடம் சென்றடைந்து விடுகிறது.

    ரமலான் அல்லாத மாதங்களிலும், நோன்பு அல்லாத வணக்கங்களுக்காகவும் வானங்களின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. இப்னு உமர் (ரலி) கூறியதாவது:-

    நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது மக்களில் ஒருவர் 'அல் லாஹூ அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வசுப்ஹானல்லாஹி புக்ரத்தன் வஅஸீலா (இறைவன் மிகப்பெரியவன் என்று பெருமைப்படுத்துகின்றேன்.

    எல்லாப்புகழும் இறைவனுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகின்றேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கின்றேன்)' என்று கூறினார்.

    நபி (ஸல்) அவர்கள் 'இந்த வார்த்தைகளை மொழிந்தவர் யார்?" என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர், 'நான் தான்' என்றார். நபி (ஸல்) அவர்கள், நான் இதைக்கேட்டு வியப்புற்றேன். இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன' என்று கூறினார்கள். இவ்வாறு கூறக் கேட்டதில் இருந்து நான் அதைக் கூறாமல் இருந்ததில்லை.' (நூல்: முஸ்லிம்)

    மேலும், ஒவ்வொரு நாளும் மனிதர்களின் செயல்களை கண்காணிக்கும் பொறுப்புவானவர்களுக்கு சாட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் இரு பிரிவினராக செயல்படுகின்றனர். மனிதனின் பகல் நேர செயல்களை கண்காணிக்கும் வானவர்கள் அதிகாலை நேரத்தில் வருகை புரிவர். இரவு நேர செயல்களை கண்காணிக்கும் வானவர்கள் மாலை நேரம் வருகை புரிவர். அப்போது இந்த இரண்டு நேரங்களிலும் வானங்கள் திறக்கப்படுகின்றன.

    மனித செயல்கள் இறைவனிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன . 'ஐந்து இரவுகளில் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அப்போது வானத்தின் கதவுகள் திறக்கப்படுகிறது. அவை: வெள்ளி இரவு, நோன்புப் பெருநாள் இரவு, ஹஜ்ஜுப் பெருநாள் இரவு, ரஜப் மாதத்தில் முதல் இரவு, ஷஃபான் மாதத்தின் 15-ம் இரவு ஆகும் என இமாம் ஷாபி (ரஹ்) கூறுகிறார்.

    'ஒருவர் மனத்தூய்மையுடன் 'லாயிலாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று கூறினால், அவருக்காக வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. அவர் பெரும்பாவம் புரிவதை தவிர்த்திருந்தால்' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப் பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

    'ஒருவர் தொழுகையின் மூலம் பாவமீட்சி பெற்றாலும் வானத்தின் கதவுகள் திறக்கப் படுகின்றன. மேலும் அவரின் பிரார்த்தனையும் அங்கீகரிக்கப்படுகின்றன' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்:அஹ்மது)

    'இரவின் மூன்றாம் பகுதியின் நிறைவான நேரத்தில் இறைவன் முதல் வானத்தின் பக்கம் இறங்கி வருவான். அப்போது வானத்தின் வாசல்களை திறப்பான். பிறகு இறைவன் தமது திருக்கரத்தை விரித்து வைத்து என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு கேட்டது வழங்கப்படும்' என்று கூறுவான். இது அதிகாலை உதயமாகும் வரை நீடிக்கும் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: அஹ்மது).

    வானத்தின் வாசல்கள் திறந்திருக்கும் இந்த ரமலானில் நோன்பு மற்றும் பிரார்த்தனைகளால் பலன்கள் பெறுவோம்.

    • ரமலானில் அருளப்பட்ட இறைச்செய்தி.
    • வானவர் மணியோசை போன்று வருவார். அவர் நபியை தம்முடன் இணைத்துக் கொள்வார்.

    ரமலானில் அருளப்பட்ட இறைச்செய்தி

    இறைச்செய்தியின் ஆரம்ப வெளிப்பாடும், இந்த பிரபஞ்சத்தில் உலகப்பொதுமறையாம் திருமறை திருக்குர்ஆன் இறங்கிய துவக்கமும், இறை அழைப்பின் அழகிய ஆரம்பக்கட்டமும் புனித ரமலானில்தான் அரங்கேறியது.

    'ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக்கொண்டதாகவும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான திருக்குர்ஆன் இறக்கியருளப்பெற்றது.' (திருக்குர்ஆன் 2:185)

    நபி (ஸல்) அவர்களுக்கு நாற்பது வயதை நெருங்குவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே அவர்களின் மனம் தனிமையை விரும்பியது. மக்காவில் இருந்து சுமார் இரண்டு மைல்கள் தொலைவில் உள்ள நூர் மலையில் அமைந்துள்ள ஹிரா குகைக்குச் சென்று அங்கே இறைவனுக்காக தவம் மேற்கொண்டார்கள். பரிபூரணத்தின் தொடக்கமாகிய 40 வயதை நிறைவு செய்தபோது அவர்களுக்கு நபித்துவ பட்டம் கிடைத்தது.

    ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்த மூன்றாம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 21. திங்கட்கிழமை கி.பி.610 ஆகஸ்டு 10-ம் தேதி முதன்முதலாக இறைச்செய்தி இறங்கியது.

    'ஆயிஷா (ரலி) கூறினார்: 'நபி (ஸல்) அவர்களுக்குத் தொடக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்த கனவு கண்டாலும் அது அதிகாலைப்பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர், தனிமையில் இருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் பல இரவுகள் அங்கே தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டார்கள். அந்த நாள்களுக்கான உணவை தம்முடன் கொண்டு செல்வார்கள். உணவு தீர்ந்ததும் மனைவி கதீஜாவிடம் திரும்புவார்கள்.

    இந்த நிலை ஹிரா குகையில் இறைச்செய்திவரும் வரை நீடித்தது. ஒருநாள் வானவர் தோன்றி, ஓதும் என்றார். அதற்கு நபியவர்கள் நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றார்கள்.

    'அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு, என்னை விட்டுவிட்டு மீண்டும் 'ஒதும்' என்றார். 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே!' என்றேன். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. மூன்றாவது முறை கட்டியணைத்து விட்டு 'படைத்தவனாகிய உமது இரட்சகனின் திருப் பெயரால் ஒதும்! அவனே மனிதனை கரு வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருந்து படைத்தான். ஒதும் உம் இரட்சகன் கண்ணியமிக் கவன்' என்றார். (திருக்குர்ஆன் 96:1,2,3, நூல்:புகாரி)

    இதுதான் உலகில் முதலில் இறங்கியதிருக்குர்ஆனின் இறைச்செய்தியாகும். இறைச்செய்தியின் வகைகள்:

    1) உண்மையான கனவு. இதுதான் இறைச் செய்தியின் தொடக்கம்.

    2) வானவர், நபி (ஸல்) அவர்களின் கண் முன் தோன்றாமல் உள்ளத்தில் இறைச்செய்தியை போடுவது.

    3) வானவர் ஓர் ஆடவரின் உருவில் தோன்றி நபி (ஸல்) அவர்களிடம் பேசுவார். அதை நபி (ஸல்) மனதில் நிலை நிறுத்திக்கொள்வார்கள்.

    4) வானவர் மணியோசை போன்று வருவார். அவர் நபியை தம்முடன் இணைத்துக் கொள்வார்.

    5) வானவர் இறைவன் படைத்த உண்மை தோற்றத்தில் நபி (ஸல்) முன் தோன்று வார்.

    6) நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேல் அழைத்து பேசுவது. இது நபியவர்களின் விண்ணுலகப் பயணத்தில் தொழுகை கடமையாக்கப்பட்ட போது நடந்தது.

    7) வானவரின்றி நேரடியாக அல் லாஹ்வே பேசுவது. இது மூஸா (அலை) அவர்களுக்கு இந்த உலகத்திலேயே கிடைத்தது. நபி (ஸல்) அவர்களுக்கு விண்ணுலகப் பயணத்தின் மூலம் ஏற்பட்டது.

    • புனித ரமலானில் திறக்கப்படும் சொர்க்கவாசல்.
    • நம்மால் இயன்ற தான தர்மங்கள் செய்வோம்.

    புனித ரமலானில் திறக்கப்படும் சொர்க்கவாசல்

    ரமலான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    'புனித ரமலான் மாதத்தின் முதல் இரவு உதயமாகி விட்டால் சொர்க்க வாசல்கள் திறக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து எந்த ஒன்றும் மூடப்படாது. ஒரு அறிவிப்பாளர் நன்மை தேடுபவரே! நன்மை செய்வதின் பக்கம் முன்னோக்கிச் செல்லும்.' 'தீமை நாடுபவரே! தீமையை குறைத்துக் கொள்ளும்' இவ்வாறு அறிவிப்பு செய்வார் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹு ரைரா (ரலி), நூல்: இப்னுமாஜா)

    திருக்குர்ஆனில் சொர்க்கத்தை பற்றி பலவிதமான பெயர்களில் வர்ணிக்கப்படுகிறது.

    1) 'ஜன்னத்' (சொர்க்கம்),

    2) 'ஜன்னத்துல் குல்த்' (அழியாத சொர்க்கம்),

    3) 'ஜன்னத்துல் மஃவா', (தங்குமிடம் சொர்க்கம்),

    4) 'ஜன்னத்துல் பிர்தவ்ஸ்' (சொர்க்கச்சோலை),

    5) 'ஜன்னத் அத்ன்' (நிலையான இன்பம் கொண்ட சொர்க்கம்),

    6) 'தாருஸ்ஸ லாம்' (அமைதி இல்லம்),

    7) ஜன்னத்துன் நயீம்' (இன்பமயமான சொர்க்கம்),

    8) 'தாருல் ஹயவான்' (நித்திய வாழ்வுடைய வீடு),

    9) 'தாருல் முகாமா' (நிரந்தரமான வீடு),

    10) 'அல்மகாமுல் அமீன் (அபயம் தரும் இடம்),

    11) மக்அத் சித்க்' (உண்மையான இருக்கை),

    12) 'தாருல் முத்தகீன்' (இறையச்சமுள் ளவர்களின் வீடு),

    13) 'அல்குர்பா' (மாளிகை),

    14) தாருல் கரார்' (நிலையான வீடு),

    15) அல் ஹூஸ்னா (அழகிய சொர்க்கம்).

    இப்படிப்பட்ட சொர்க்கங்களில் நூற்றுக் கணக்கான படித்தரங்கள் உண்டு! சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்:புகாரி) அவை:

    1) பாபுஸ் ஸலாத் (தொழுகைவாசல்),

    2)பாபுல் ஜிஹாத் (அறப்போர் வாசல்),

    3) பாபுர் ரய்யான் (நோன்பு வாசல்),

    4) பாபுஸ் ஸதக்கா (தர்ம வாசல்),

    5) பாபுல் ஹஜ் (ஹஜ் வாசல்),

    6) பாபுல் வாலித் (தந்தை வாசல்),

    7) பாபுல் அய்மன் (வலதுபுற வாசல்),

    8) பாபுத் தவ்பா (மன்னிப்பின் வாசல்).

    ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களில் இருந்து, 'அல்லாஹ்வின் அடியாரே! இது நன்மையாகும்! இதன் வழியாக நுழையுங்கள்' என்று அழைக்கப்படுவார்.

    தொழுகையாளி தொழுகையின் வாசல் வழியாகவும், நோன்பாளி ரய்யான்' வாசல் வழியாகவும், தர்மம் செய்தவர் தர்ம வாசல் வழியாகவும், அறப்போர் புரிந்தவர் அறப்போர் வாசல் வழியாகவும் அழைக்கப்படுவார்' என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    சொர்க்கத்தின் 8 வாசல்களும் புனித ரமலான் மாதம் முழுவதும் திறந்தே இருக்கின்றன. நோன்பாளிக்கென்று ரய்யான் வாசல் உள்ளது. அதன் வழியாக நோன்பாளிகள் மட்டுமே நுழைவார்கள். சொர்க்கத்தில் ரய்யான்' எனும் ஒரு வாசல் உண்டு. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். 'நோன்பாளிகள் எங்கே?" என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுந்து, அதன் வழியாக நுழைந்ததும் அந்த வாசல் அடைக்கப்பட்டு விடும். வேறு எவரும் அதன் வழியாக நுழைய முடியாது என நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹ்ல் (ரலி), நூல்:புகாரி)

    சொர்க்கவாசல்கள் திறந்திருக்கும் புனித ரமலானில் சொர்க்கவாசிகளின் செயலை செய்து சொர்க் கத்தில் இடம்பிடிக்க நாம் முனைப்புடன் செயல்படுவோம். இறை சிந்தனையிலும், இறை வழிபாட்டிலும் புனித ரமலானில் அதிகம் ஈடுபடுவோம். நம்மால் இயன்ற தான தர்மங்கள் செய்வோம்.

    • இஸ்லாமியர்கள் ஐந்துவேளைத் தொழுவது கட்டாயமாகும்.
    • எந்த சந்தர்ப்பத்திலும் தொழுகையை தவறவிட்டுவிடக்கூடாது.

    தொழுகைக்கான முதல் அழைப்பு

    இஸ்லாமியர்கள் ஒவ்வொரு நாளும் 'ஐந்துவேளைத் தொழுவது கட்டாயமாகும். பருவ வயதை அடைந்ததில் இருந்து மரணமாகும் வரைக்கும் நீங்காத ஒரே கடமை தொழுகை தான். நின்று தொழ முடியாத பட்சத்தில் அமர்ந்தும், அமர்ந்து தொழ முடியாத பட்சத்தில் படுத்துக்கொண்டும் தொழ வேண்டும். இதுவும் முடியாதபட்சத்தில் தொழுகையின் முறைகளை சமிஞ்கை செய்து, எண்ணவடிவங்களை மனக் கண்முன்னே கொண்டு வந்து நிறைவேற்றிட வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் தொழுகையை தவறவிட்டுவிடக்கூடாது. 'உமக்கு மரணம் வரும் வரை உமது இறை வனை வணங்குவீராக!' (திருக்குர்ஆன் 15:99)

    ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்னால், அந்தந்தத் தொழுகையின் நேரம் வந்தவுடன் தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்படும். இதற்கு பாங்கு என்று பார்ஸி மொழியில் சொல்லப்படும். இஸ்லாத்தின் ஆரம்பக்காலத்தில் ஒரு சில வார்த்தைகள் கூறி தொழுகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முஸ்லிம்கள் மதீனாவிற்கு வந்த சமயம் தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப் படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒருநாள் இதுபற்றி அனைவரும் கலந்தாலோசித்தனர். அப்போது உமர் (ரலி) 'தொழுகைக்காக அழைக்கின்ற ஒருவரை ஏற்படுத்தக்கூடாதா?' என்றார்.

    உடனே பிலால் (ரலி) அவர்களிடம் 'பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்:புகாரி)

    அப்துல்லாஹ் பின் ஜைத் பின் அப்துரப் (ரலி) கூறுவதாவது: 'நான் இரவில் தூங்கிக் கொண்டிருந்தேன். கையில் மணியை வைத்துள்ள ஒரு வானவர் என்னைக் கடந்து சென்றார். உடனே நான் அவரிடம் 'மணியை விற்கப் போகிறீரா?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'அதை வைத்து நீர் என்ன செய்யப் போகிறீர்?' என்று கேட்டார். 'அதை வைத்து நான் மக்களுக்கு தொழுகை அழைப்பு விடுப்பேன்' என்றேன். அதற்கு வானவர், இதை விடச் சிறந்த ஒரு அழைப்பை நான் உமக்கு அறிவித்துத் தரட்டுமா?' எனக் கேட்டதும் நான் ஆம்,என்றேன்.

    'அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர்,

    அல்லாஹூ அக்பர்,

    அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹ்,

    அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹ்,

    அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல் லாஹ்,

    அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல் லாஹ்,

    ஹய்ய அலஸ்ஸலாத்,

    ஹய்ய அலஸ் ஸலாத், ஹய்ய அலல் பலாஹ்,

    ஹய்ய அலல் பலாஹ், அல்லாஹூ அக்பர்.

    அல்லாஹூ அக்பர், லாயிலாஹா இல்லல்லாஹ்.

    இவ்வாறு நீர் கூறவேண்டும் என்றார்.

    அதிகாலையில் நான் கண்ட கனவை நபி யிடம் கூறினேன். அதற்கு நபி (ஸல்) 'இது உண்மையான கனவு. நீர் எழுந்து பிலாலிடம் (ரலி) கூறும். அவர் பாங்கு சொல்லட்டும். ஏனெனில் உம்மை விட அவர் குரல் வளமிக்க வர்' என்றார்கள்.

    இதை கேள்விப்பட்டு நபியிடம் வந்த உமர் (ரலி) சத்தியத்தை கொண்டு தங்களை அனுப்பிய இறைவன் மேல் ஆணை! அவர் கண்ட கனவைப்போன்று நானும் கண்டேன்' என்றார். 'எல்லாப்புகழும் இறைவனுக்கே!' என நபி கூறினார்கள்'. (நூல்: அஹ்மது, இப்னுமாஜா, அபூதாவூத்)

    இன்று உலகளாவிய அளவில் இவ்வாறு சொல்லப்படும் பாங்கு முறை, ஹிஜ்ரி முதலா மாண்டு ரமலான் மாதம் நடைமுறைப் படுத்தப்பட்டதாகும். பாங்கோசை கேட்டதும் தொழு கைக்கு விரைவோம். நன்மைகள் பெறுவோம்.

    • நோன்பு பாவங்களில் இருந்து காக்கும் ஒரு கேடயம் ஆகும்.
    • நோன்பு மனிதர்களின் இச்சையைக் கட்டுப்படுத்தும் கேடயம்.

    நோன்பு ஒரு கேடயம்

    நோன்பு (பாவங்களில் இருந்து காக்கும்) ஒரு கேடயம் ஆகும். எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம், முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால், அல்லது கோபமாக பேசினால், 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்." (அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி)

    நோன்பு பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. அது மனிதர்களின் இச்சையைக் கட்டுப்படுத்தும் கேடயம். நோன்பு கெட்ட வார்த்தைகளை பேசுவதை, பொய்யான பேச்சுக்களை பேசுவதை, பொய்யான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும் கேடயம்.

    முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும், சண்டை சச்சரவுகளில் இருந்து பாது காப்பு அளிக்கும், தகாத பார்வைகளை தடுக்கும்,பேராசைகளை அழிக்கும் கேடயம் நோன்பாகும். விபச்சாரத்தில் இருந்து தடுத்து, கற்பைக் காக்கும். குடிப்பழக்கத்தை முற்றிலும் ஒழிக்கும் கேடயம் நோன்பு.

    அபூ உபைதா (ரலி) அவர்கள் கூறுவது: "நோன்பு ஒரு கேடயம் ஆகும். அதனை உடைக்காமல் இருக்கும் வரை ... என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்" (நூல்: நஸயீ, இப்னு மாஜா)

    "உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்கு சக்தி பெற்றிருக்கிறாரோ, அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில், திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்கு சக்தி பெறவில்லையா, அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்". (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் (ரலி), நூல்:புகாரி)

    "ரமலானில் போதையுடன் இருந்த ஒருவரிடம் 'உனக்குக் கேடு உண்டாகட்டும்! நமது சிறுவர்களெல்லாம் நோன்பு நோற்றிருக்கிறார்களே!' என்று உமர் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, அவரை அடித்தார்கள்". (நூல்: புகாரி)

    நோன்பு என்பது ஒரு கேடயம். கேடயம் போர் வீரர்களையும், அவர்களின் உயிர்களையும், உடைமைகளையும் நன்றாக பாதுகாப்பது போன்று, நோன்பும் நோன்பாளிகளை பாவமான காரியங்களில் இருந்தும் பாதுகாக்கிறது. நோன்பாளிகளும் அந்த கேடயத்தை அணிந்து, பாவமான காரியங்களில் இருந்து தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்கிறார்கள்.

    நோன்பு எனும் கேடயத்தை உடைக்காமல் இருக்கும் வரைக்கும் நோன்பாளிகள் முழுமையான நோன்பாளிகளாகவே இருக்கிறார்கள். ஏதேனும் பாவச்செயல்களில் ஈடுபடும் போது, அந்த கவசத்தை உடைத்து, நோன்பையும் முறித்து விடுகிறார்கள். அதன் நன்மைகளையும் இழந்து விடுகிறார்கள்.

    "ஒரு மனிதர்நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! நோன்பு எதனால் முறிந்துவிடுகிறது' என்று கேட்டார்?. 'பொய், புறம் பேசுவதினால்' என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்". "யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிட வில்லையோ, அவர் தமது பானத்தையும், உணவையும் விட்டுவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்." (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    நோன்பு என்பது பசித்திருப்பது, தாகித் திருப்பது மட்டுமல்ல! தகாத காரியங்களில் இருந்து விலகி இருப்பதும் ஆகும். இத்தகைய நோன்பே கேடயமாக இருந்து நோன்பாளிகளை பாதுகாக்கிறது. நாமும் நமது நோன்பை சிறந்ததாக அமைத்துக்கொள்வோம்.

    • அன்னை கதீஜா (ரலி) அவர்களின் தியாகம்.
    • நாமும் அவரின் தியாக வாழ்வை ரமலானில் நினைவுகூர்வோம்.

    அன்னை கதீஜா (ரலி) அவர்களின் தியாகம்

    நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த சத்திய மார்க்கத்தை முதலில் ஏற்றுக்கொண்டவர் அன்னை கதீஜா (ரலி) அவர்கள். இஸ்லாமிய வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் விதையாக இருந்தவர். நபி கொண்டு வந்த ஏகத்துவ ஓரிறைக் கொள்கைக்கு மக்காவில் எதிர்ப்பு கிளம்பிய போது, நபிக்கு அச்சுறுத்தல் வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு அரணாக அமைந்தவர் அன்னை கதீஜா (ரலி) அவர்கள். அவரின் பிறப் பையும், தியாக வாழ்வையும், மறைவையும் இஸ்லாமியர்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

    கதீஜா அவர்களின் தந்தை குவைலித் பின் அஸத் குரைஷி அஸதீ, தாய் பாத்திமா பின்த் ஸாயிதா ஆவார்கள். அவர் கி.பி. 556-ம் ஆண்டு மக்கா நகரில் பிறந்தார். இவருக்கு ஏற்கனவே இருமுறை திருமணம் நடைபெற்றது. முந்தைய இரு திருமணமான மணமகன்களும் இறந்துவிட்டனர். இவருக்கு 40 வயதாக இருக்கும் போது விதவையான இவரை நபி (ஸல்) அவர்கள் தமது 25-ம் வயதில் திருமணம் முடித்தார்கள். நபி (ஸல்) அவர்கள்ளுக்கு அன்னை கதீஜா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் அளப்பெரும் அருட்கொடை நாயகியாகத் திகழ்ந்தார்கள்.

    அண்ணலார் அன்னையருடன் கால் நூற்றாண்டு காலம் வாழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் துக்கநேரத்தில் ஆறுதல் அளிக்கும் நபராகவும், சிரமமான நேரத்தில் உற்ற தோழியாகவும், வாழ்க்கைத் துணைவியாகவும், நபியின் தூதுவச் செய்திக்கு பல எதிர்ப்புகள் வந்தபோது நபியைக் காக்கும் அரணாகவும், நபிக்கு தமது உடலாலும், பொருளாலும் உதவிய தியாகச் சீமாட்டியாகவும் திகழ்ந்தார்கள்.

    நபியின் வெற்றிக்கு பின் புலமாகவும், பக்கபலமாகவும் இருந்தார்கள். மக்கள் என்னை நிராகரித்த போது, கதீஜா (ரலி) என்னை நம்பினார். மக்கள் என்னை பொய்ப்பித்த போது, அவர் என்னை உண்மைப் படுத்தினார். மக்கள் என்னை ஒதுக்கியபோது, அவர் என்னைத் தமது பொருளால் அரவணைத்துக் கொண்டார். அவர் மூலமாகத் தான் அல்லாஹ் எனக்குக் குழந்தை பாக்கியத்தை வழங்கினான். அவரல்லாத மற்ற மனைவிகள் மூலம் அல்லாஹ் எனக்கு குழந்தைகள் வழங்காமல் செய்துவிட்டான் என நபி (ஸல்) கூறினார்.' (நூல்: அஹ்மது) 'நபி (ஸல்)

    அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) குடியேறுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு கதீஜா (ரலி) இறப்பெய்து விட்டார்கள். (அறிவிப்பாளர் : உர்வா பின் சுபைர் (ரலி), நூல்:புகாரி)

    கதீஜா (ரலி) அவர்கள் நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரமலான் மாதத்தில் தமது 65-வது வயதில் மரணமானார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வயது ஐம்பது. தமது மனைவி கதீஜா (ரலி) இறந்த பிறகும் அவரைப் பற்றி நினைவு கூர்ந்து கொண்டே இருப்பார்கள். அவரின் தோழிகளுக்கு அன்பளிப்புகளையும் வழங்கி வந்தார்கள்.

    'நான் நபி (ஸல்) அவர்களிடம் உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களே! என கேட்டபோது, அவர் புத்திசாலியாக இருந்தார். சிறந்த குணமுடையவராக இருந்தார். மேலும், அவர் வாயிலாகத்தான் எனக்கு பிள்ளைச் செல்வம் கிடைத்தது' என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

    'மர்யம்தான் (அப்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர். (தற்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா (ரலி) ஆவார்.' (அறிவிப்பாளர்: அலி (ரலி), நூல்: புகாரி).

    அன்னை கதீஜா இறந்த பிறகும் நபி (ஸல்) அவரை நினைவு கூர்ந்தார். நாமும் அவரின் தியாக வாழ்வை ரமலானில் நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறோம்.

    • புனித ரமலானில் சிறைபிடிக்கப்படும் ஷைத்தான்கள்.
    • அட்டூழியம் புரியும் ஷைத்தான்கள் ரமலான் மாதத்தில் விலங்கிடப்படுகின்றனர்.

    புனித ரமலானில் சிறைபிடிக்கப்படும் ஷைத்தான்கள்

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ரமலான் மாதம் வந்துவிட்டால் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எனது சமுதாயத்தினருக்கு ரமலான் மாதத்தில் ஐந்து விஷயங்கள் பிரத்தியேகமான முறையில் கொடுக்கப்பட்டுள்ளன. அவை வேறு எந்த சமுதாயத்தினருக்கும் வழங்கப்படவில்லை.

    1) நோன்பாளியின் வாய் வாடை இறைவனிடம் கஸ்தூரியை விட அதிக நறுமணமுள்ளதாக அமைகிறது.

    2) நோன்பாளிகள் நோன்பு திறக்கும் வரை கடலிலுள்ள மீன்கள் அவர்களுக்காக இறைவனிடம் மன்னிப்பு வேண்டுகிறது.

    3) ரமலானில் ஒவ்வொரு நாளும் சொர்க்கம் அலங்கரிக்கப்படுகிறது. எல்லாம் வல்ல இறைவன் அந்த சொர்க்கத்திடம் எனது நல்லடியார்கள் தங்களை விட்டும் உலகத்துன்பங்களை தூக்கியெறிந்து விட்டும் விரைவில் உன்னிடம் வர இருக்கிறார்கள்' என்று கூறுகிறான்.

    4) அட்டூழியம் புரியும் ஷைத்தான்கள் ரமலான் மாதத்தில் விலங்கிடப்படுகின்றனர். இதனால், ரமலான் அல்லாத மாதங்களில் எந்தத் தீமை கள் சம்பவித்ததோ அந்த விதமான தீமைகள் ரமலான் மாதத்தில் நடைபெறமுடிவதில்லை.

    5) ரமலான் மாதத்தின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது என நபி (ஸல்) கூறியபோது, 'அல்லாஹ்வின் தூதரே! பாவமன்னிப்பு வழங்கப்படும் அந்த இரவு லைலத்துல்கத்ர் இரவா?' என நபித் தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'இல்லை, எனினும் ஒரு வேலைக்கார னுக்கு கூலி கொடுக்கப்படுவது, அவர் தம் வேலையை முடித்தபிறகுதான்' என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: தர்கீப்)

    மேற்கூறப்பட்ட நபிமொழியில் 'அட்டூழியம் புரியும் பெரிய ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு, சிறைபிடிக்கப்படுகின்றனர், என்று வருகிறது. இதனால், மற்ற மாதங்களில் இஸ்லாமியர்களி டம் வெளிப்படும் பாவமான பல காரியங்கள் புனித ரமலான் மாதத்தில் வெகுவாக குறைந்து விடுகிறது.இதையும் மீறி சிறு சிறு தவறுகள் ரமலானில் நடைபெறுவதற்கு காரணம் சாதாரண ஷைத்தான்களின் ஆதிக்கத் தால் நிகழ்கிறது. அவர்கள் ரமலானில் உலா வருகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.

    மேலும், ரமலானில் பாவங்கள் குறைந்து காணப்படுவதற்கு மற்றொரு காரணம்; ஒருவர் நோன்பு நோற்பதினால் பசித்தவராக, தாகித்தவராக, பலவீனம் அடைந்தவராக இருப்பதால் அவரின் வீரியம் குறைகிறது. அவரின் தீவிர உடல் இயக்கமும் சற்று தடைப்படுகிறது. இதனால் அவரிடம் ஏற்படும் தவறுகளின் வீரியமும் குறைந்து விடுகிறது.

    'நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஒடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டு விடுவான் என நான் அஞ்சுகிறேன் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஸபிய்யா (ரலி), நூல்: புகாரி)

    மனித ரத்த நாளங்களில் ஊடுருவி விட்ட ஷைத்தான்களை கட்டுப்படுத்தும் ஆயுதம் தான் புனித நோன்பு ஆகும். பசியின் மூலமாக ரத்த ஓட்டத்தை மிதமாக்கி, தவறான எண்ணத்தை அகற்றி, அவனை வென்றுவிடலாம். ஆக புனித ரமலானில் ஷைத்தானின் நடமாட்டத்தை ஒருபுறம் இறைவன் விலங்கிட்டும், மறுபுறம் நோன்பாளிகள் நோன்பிருந்தும் கட் டுப்படுத்துகின்றனர்.

    மனிதர்களை வழிகெடுக்கின்ற ஷைத்தானின் பிடியில் இருந்து நாம் விடுபட இந்த புனித ரமலான் மாதம் வழிகாட்டுகிறது. இதை நாம் பயன்படுத்திக்கொண்டு நோன்பிருந்து, நற்செயல்கள் புரிந்து, தொழுகையில் ஈடுபட்டு நம்மை நல்வழிப்படுத்திக் கொள்வோம். வாருங்கள்

    • பாவங்களை போக்கும் நோன்பு
    • பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும்பாவங்களைத் தவிர்த்திடுவீர்.

    பாவங்களை போக்கும் நோன்பு

    நன்மைகள் தீமைகளை அழித்துவிடும் படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரையாகும்.' (திருக்குர் ஆன் 11:114)

    ஒவ்வொரு மனிதனிடமும் அவன் அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, சிறு சிறு பாவங்கள், தவறுகள், சில நேரங்களில் பெரும் பாவங்களும் நிகழ்ந்து விடுகின்றன. 'ஆதமுடைய ஒவ்வொரு குழந்தையும் தவறு செய்பவர்கள்தான். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள், பாவமீட்சி தேடுபவர்களே! என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்:திர்மிதி)

    'பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும்பாவங்களைத் தவிர்த்திடுவீர்!' என நபி (ஸல்)கூறினார் கள். 'அவை எவை?' என்று கேட்கப்பட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள் 'இறைவனுக்கு இணை வைப்பது, சூனியம் செய்வது, உரிமையின்றி உயிரைக் கொல்வது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, வட்டியை உண்பது, போரின் போது புறமுதுகிட்டு ஓடுவது. இறைநம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவைதான் பெரும் பாவங்கள்' என்று கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    இது தவிர திருடுவது, கொள்ளையடிப்பது, பொது சொத்துக்களை மோசடி செய்வது, விபச்சாரம் புரிவது யாவும் பெரும் பாவங்களே. ஒருவரிடம் ஏற்படும் சிறுபாவங்கள் யாவும் அவர் செய்யும் நல்லறங்களின் மூலம் அழிக்கப்படுகிறது.

    'லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும், நன் மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன்பாவம் மன்னிக்கப்படுகிறது. மேலும், ரமலானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்பவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: ஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    ஆபூ 'ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜூம்ஆவில் இருந்து மறு ஜூம்ஆ, ஒரு ரமலானில் இருந்து மறு ரமலான் ஆகியன அவற்றுக் கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ் லிம்)

    'யாரேனும் என்னுடைய இந்த உளுவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங் களுக்கு இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுதால் அவர்முன் செய்த சிறுபாவங்களை இறைவன் மன்னிக்கின்றான் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: உஸ்மான் (ரலி), நூல்:புகாரி)

    இமாம் ஆமீன் கூறும்போது நீங்களும் ஆமீன் கூறுங்கள். ஒருவர் கூறும் ஆமீன் வானவர்கள் கூறும் ஆமீனுடன் ஒத்துப்போனால் அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    'நபி (ஸல்) அவர்களிடம் அராபா நாளின் நோன்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அது கடந்தாண்டு மற்றும் வருமாண்டு நிகழும் பாவங்களுக்கு பரிகார மாக அமையும்' என்றார்கள்.' (அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம்)

    இவ்வாறே பள்ளிவாசலை நோக்கி விரைவதும், தொழுகையை எதிர்பார்த்து இருப்பதும், ஐவேளைத் தொழுகைகளை பேணுதலாக தொழுவதும், ஹஜ் மற்றும் உம்ரா செய்வதும், தானதர்மம் செய்வதும், சாப்பிட்ட பிறகும், உடைமாற்றிய பிறகும் இறைவனை புகழ்வதும் ஆகிய செயல்பாடுகள் ஒரு மனிதனின் முன்செய்த சிறுபாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு போதுமானதாகும். இவை சிறுபாவங்கள் நீக்கப்படுவதற்கு பரிகாரமாகவும், நிவாரணமாகவும் அமைந்துவிடுகின்றன.

    • ரமலானில் ஒன்றுக்கு பத்து மடங்கு நன்மை.
    • ஒரு மாத நோன்பு 10 மாதங்கள் நோன்பிருந்த நன்மை கிடைத்துவிடுகிறது.

    ரமலானில் ஒன்றுக்கு பத்து மடங்கு நன்மை

    இஸ்லாம் சிலகாலங்களுக்கும், சிலபுனித தலங்களுக்கும் அபரிமிதமான சில சிறப்புகளை கொடுத்து அழகு பார்க்கிறது. அந்த வகையில் அந்த புனித தலங்களில், அந்த காலங்களில் வணக்க வழிபாடு புரியும்போது மற்ற புனித தலங்களில், மற்ற காலங்களில் நிறைவேற்றப்படும் வணக்கத்திற்கு கிடைக்கும் நன்மைகளை விட பல மடங்கு நன்மைகள் வாரி வழங்கப்படுகிறது.

    புனித இறையில்லம் கஅபாவில் நிறைவேற்றப்படும் ஒரு தொழுகை மற்ற இறை இல்லங்களில் நிறைவேற்றப்படும் தொழுகையை விட ஒரு லட்சம் மடங்கு சிறந்ததாகும்.

    புனித மதீனாவில் நிறைவேற்றப்படும் ஒரு தொழுகை மற்ற இறையில்லங்களில் நிறைவேற்றப்படும் தொழுகையை விட ஆயிரம் மடங்கு சிறந்ததாகும்.

    'நன்மையை நாடி மூன்று இறை இல்லங்களைத் தவிர வேறெங்கும் பயணம் மேற்கொள்ளப்படாது; அவை: புனித கஅபா, மஸ்ஜித்நபவீ எனும் எனது பள்ளி, மஸ்ஜித் அக்ஸா (பைத்துல் முகத்திஸ்) ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    புனித தலங்களுக்கு வழங்கிய அதே சிறப்பை இஸ்லாம் சில காலங்களுக்கும் வழங்கி கவுர வப்படுத்துகிறது. துல்ஹஜ் மாதம் முதல் பத்து தினங்கள் உலக நாட்களிலேயே சிறந்த நாட்களாக அமைகிறது. ஏனெனில் அந்த பத்து நாட்களிலும் இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளான கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐந்தும் ஒருசேர நிறைவேற்றப்படுகின்றன.

    இந்த பத்து நாட்களில் நிறைவேற்றப்படும் நல்லறம் எதுவாயினும் மற்ற மாதங்களில் நிறை வேற்றப்படும் நல்லறங்களை விட சிறந்ததாக அமைந்துவிடுகின்றன. இவ்வாறு இரண்டு பெருநாட்களும் சிறந்த நாட்களாக அமைகின்றன.

    முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாட்களும் குறிப்பாக அதில் வரும் 9,10 ஆகிய இருதினங்களும் வெற்றி தினங்களாகும். இதன் வரிசையில் ரமலான் மாதமும் இணைகிறது. ரமலானில் மூன்று பத்துகள் உண்டு. அவற்றில் சிறந்தது கடைசி பத்து தினங்களாகும்.

    நபி (ஸல்) கூறியதாவது: 'ஆதமின் மகனு டைய ஒவ்வொரு நற்செயலுக்கும் ஒன்றுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்குகள் வரை நன்மை கள் வழங்கப்படுகின்றன, நோன்பைத் தவிர. ஏனெனில், நோன்பு எனக்கு உரிய தாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குகிறேன்.

    அவன் எனக்காக தனது உணர்வையும், உண வையும் கைவிடுகிறான் என இறைவன் கூறுகின்றான்'. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    'ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்ற வரைப் போன்றவராவார் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூ அய்யூப் அன்சாரி (ரலி), நூல்: முஸ்லிம்) ரமலானில் ஒரு நோன்புக்கு பத்து மடங்கு கள் நன்மை வழங்கப்படுவதால் ஒரு மாதம் நோன்பு நோற்றதற்கு 10 மாதங்கள் நோன் பிருந்த நன்மை கிடைத்துவிடுகிறது.

    அதைத்தொடர்ந்து பெருநாளை விட்டு விட்டு பிறகு வரும் ஆறு நாட்கள் நோன்பை தொடர்வதற்கும் 10 மடங்குகள் நன்மை வழங்கப்படும். 6 நாட்கள் நோன்பு நோன்பதற்கு இரண்டுமாத நோன்பின் நன்மை கிடைத்துவிடுகிறது. ஆக ரமலானிலும் நோன்பு நோற்று, ஷவ்வாலிலும் ஆறு நோன்பு நோற்றால் வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை உண்டு. எவர் ஒருவர் ஒரு நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்து மடங்கு (நன்மை) உண்டு.' (திருக்குர்ஆன் 6:160)

    • இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்த ஆயிஷா (ரலி)
    • நபி அவர்களின் மனைவிமார்களில் இவர் மட்டுமே கன்னிப்பெண்.

    இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்த ஆயிஷா (ரலி)

    இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்தோர்களில் முதன்மையானோர் சிலர். அவரில் ஒருவர் ஆயிஷா (ரலி) ஆவார். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை இரண்டு விதங்களில் அடங்கும்.

    1) பொது வெளி வாழ்க்கை,

    2) அந்தரங்க வாழ்க்கை.

    நபியின் அந்தரங்க வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் சமூகப் பார்வைக்கு கொண்டு போய் சேர்த்தவர் தான் ஆயிஷா (ரலி) ஆவார். கி.பி. 614-ல் ஆயிஷா (ரலி) பிறந்தார்கள். இவரின் தந்தை இஸ்லாமிய குடியரசின் முதலாம் ஜனாதிபதி அபூபக்ர் சித்தீக் (ரலி), தாயார் உம்முரூமான் (ரலி) ஆவார். இவருக்கு 3 சகோதரர்களும், 2 சகோதரிகளும் உண்டு. நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் இவர் மட்டுமே கன்னிப்பெண். மற்ற யாவரும் கைம்பெண்களே!

    இவரைக் கூட நபி (ஸல்) அவர்கள் தமது சுயவிருப்பத்தின்படி திருமணம் முடிக்கவில்லை. இறை உத்தரவின் பேரிலேயே திருமணம் புரிந்தார். இவர்களின் திருமணம் சொர்க்கத்தில் இறைவனால் தீர்மானிக்கப்பட்டதாகும்.

    ஆயிஷா (ரலி) அறிவித்தார்: 'நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். நான் உன்னை (மணந்து கொள்வதற்கு முன்னால்) இருதடவை கனவில் கண்டுள்ளேன். அதில் ஒருவர் (வானவர்) உன்னைப் பட்டுத்துணி ஒன்றில் சுமந்து செல்கிறார். அப்போது அவர் 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி' என்றார். உடனே, நான் அந்தப் பட்டுத்துணியை விலக்கிப்பார்த்தேன். அது நீ தான், அப்போது நான் (மனதிற்குள்) `இக்கனவு இறைவனிடமிருந்து வந்ததாயின், இதை அவன் நனவாக்குவான்' என்று சொல்லிக் கொண்டேன்.' (நூல்:புகாரி)

    சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட அண்ணலார், ஆயிஷா (ரலி) ஆகியோரின் திருமணம் மறுபடியும் சொர்க்கத்திலேயே முடியும். 'ஆயிஷாவே! நான் உன்னை சொர்க்கத்திலும் எனது மனைவியாக அமைவதை கண்டுகொண்டேன் என நபி (ஸல்) கூறினார்கள். ' (நூல்:தப்ரானீ)

    'ஒட்டுமொத்த உலகப் பெண்களின் கல்வியை ஒரு தட்டிலும், ஆயிஷா (ரலி) அவர்களின் கல்வியை மற்றொரு தட்டிலும் ஒன்று திரட்டப்பட்டால், ஆயிஷா (ரலி) கல்வியே மேம்படும்' என இமாம் ஸூஹ்ரீ (ரஹ்) கூறுகிறார்.

    அதிகமான நபிமொழிகளை அறிவித்த நபர்களில் நான்காவது இடத்தை ஆயிஷா (ரலி) பகிர்ந்துள்ளார். கிட்டத்தட்ட 2210 நபிமொழிகளை அறிவித்துள்ளார். ஒரு சமயம் அன்னை அவர்கள் ஒட்டுப் போட்ட சட்டை அணிந்த நிலையில் 70 ஆயிரம் வெள்ளிக்காசுகளை தர்மம் செய்தார்கள்.

    ஒரு தடவை அவர்களிடம் இரண்டு சாக்கு மூட்டைகள் நிறைய ஒரு லட்சம் வெள்ளிக்காசுகள் வந்தது. அன்றைய தினம் அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள்.

    ஒரு தாம்பளத்தை கொண்டுவரச் செய்து அனைத்தையும் வழங்கிவிட்டார்கள். மாலை நேரம் காய்ந்த ரொட்டியையும், ஆலிவ் எண்ணையையும் வைத்து நோன்பு திறந்தார்கள். மற்றொரு சமயம், தன்னிடமுள்ள 70 ஆயிரம் வெள்ளிக்காசுகளை ஒரே நேரத்தில் இறை வழியில் செலவிட்டார்கள்.

    அன்னையார் அவர்கள் கி.பி. 678-ம் ஆண்டு, ஹிஜ்ரி 58-ம் வருடம் ரமலான் மாதம் பிறை 17-ம் தினம் புதன்கிழமை அன்று தமது 66-ம் வயதில் மரணம் அடைந்தார்கள்.

    அன்றைய தினம் அவர்கள் பகலில் நோன்பிருந்து, இரவில் வித்ர் எனும் தொழுகையை நிறைவேற்றிய பிறகு உயிர் பிரிந்தது. அபூ ஹுரைரா (ரலி) பிரேத தொழுகை நடத்தினார். பின்பு ஜன்னத்துல் பகீ இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அன்னையார் தமது இறுதிக் காலம் வரைக்கும் இறை தியானத்தில் கழித்து இறைவனடி சேர்ந்தார். அவரது வாழ்வு நமக்கு ஒரு பாடமாகும்.

    • தீய பார்வைகளை தீய்த்துவிடும் நோன்பு.
    • நோன்பின் புனிதம் காக்க முயலுங்கள்.

    தீய பார்வைகளை தீய்த்துவிடும் நோன்பு

    பார்வைகள் பலவிதம். அவற்றில் அழகிய பார்வையும் உண்டு. அன்பு பார்வையும் உண்டு. கருணைப் பார்வையும், கலங்கியப் பார்வையும் அடங்கும். சிந்திக்கும் பார்வையும், சீர்திருத்தும் பார்வையும், கண்டிக்கும் பார்வையும் வரவேற்கப்படுகின்றன. எனினும், காமப்பார்வையையும், சந்தேகப் பார்வையையும், பயமுறுத்தும் பார்வையையும், சீரழிக்கும் பார்வையையும், கவிழ்க்கும் பார்வையையும் இஸ்லாம் தடை செய்கிறது. தீய பார்வைகளை தீய்த்துவிடும் ஆயுதமாக நோன்பு அமைந்துள்ளதாக அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு தெரிவிக்கிறார்கள்.

    "உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்கு சக்தி பெற்றிருக்கிறாரோ, அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில், திருமணம் (அன்னியப் பெண்களைப்பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும். யார் அதற்கு சக்தி பெறவில்லையோ, அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும் என நபி (ஸல்) கூறினார்கள்." (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் (ரலி), நூல்:புகாரி)

    "(நபியே!) இறைவிசுவாசிகளான ஆடவர்களுக்கு நீர் கூறும்: அவர்கள் தங்களது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்." (திருக்குர்ஆன் 24:30)

    "இன்னும் இறை விசுவாசிகளான பெண்களுக்கும் நீர் கூறும்: அவர்கள் தங்களது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண் டும்." (திருக்குர்ஆன் 24:31)

    ஆண்கள், பெண்கள் தங்களது பார்வைகளை தாழ்த்தும்படி திருக்குர்ஆன் ஏன் பணிக் கிறது? அது விஷம் தடவப்பட்ட ஷைத்தானின் அம்புகளாகவும் அமைந்துள்ளதாக பின்வரும் நபிமொழி தெரிவிக்கின்றன. "பார்வை, ஷைத்தானின் விஷம் தடவப்பட்ட அம்புகளில் ஒன்றாகும் என நபி (ஸல்) கூறினார்கள்." (அறிவிப்பாளர்: மஸ் ஊத் (ரலி), நூல்: தப்ரானி)

    இப்னு "பாதைகளின் மீது அமர்ந்து இருப்பதை உங்களுக்கு நான் எச்சரிக்கை செய்கிறேன்' என நபி (ஸல்) கூறிய போது, 'நபியே! நாங்கள் பாதையில் அமர்ந்து பேசும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் என்ன செய்வது?' என தோழர்கள் வேண்டியதும், 'பாதைக்குரிய உரிமைகளை கொடுத்திடுங்கள்' என நபி (ஸல்) பதில் கூறினார்கள்.

    'பாதைக்குரிய உரிமைகள் என்ன?' என்பது பற்றி தோழர்கள் வினவினார்கள். அதற்கு நபியவர்கள் 'பார்வையை தாழ்த்திக் கொள்வது, நோவினை தரும் பொருட்களை அகற்றுவது, ஸலாமுக்கு பதில் கூறுவது, நன்மையை ஏவி தீயதை தடுப்பது' என்றார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஸயீத்,நூல்: திர்மிதி)

    தகாத பார்வைகளை தவிர்த்து வாழ்பவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சொர்க்கத்தில் நுழைவிக்க பொறுப்பேற்று இருக்கிறார்கள். எவர் தமது இரண்டு கண்களையும் தடுக்கப்பட்ட காட்சிகளை பார்ப்பதை விட்டும் தவிர்த்து, பார்வையை தாழ்த்தி நோன்பிருக்கிறாரோ, அவரின் நோன்பை எல்லாம் வல்ல அல்லாஹ் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டு, அவரை தன் கருணை பார்வையைக் கொண்டு பார்க்கிறான்.

    "எதைப்பற்றி உமக்கு(த்தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடர வேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும், இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்." (திருக்குர்ஆன் 17:36) நோன்பாளிகளே! தடுக்கப்பட்ட பார்வைகளை விட்டும் தவிர்த்து, நோன்பின் புனிதம் காக்க முயலுங்கள்.

    ×