என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gujarat Assembly Election"

    • குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • டிசம்பர் 1 மற்றும் 5-ந் தேதிகளில் ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தில் விஜய் ரூபானி தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

    அடுத்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 18-ந்தேதி வரை அவரது ஆட்சி காலம் உள்ளது. இந்த நிலையில் குஜராத் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடத்தும் ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வந்தது.

    182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு கடந்த காலங்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. அதேபோன்று மீண்டும் 2 கட்டங்களாக நடத்தலாமா என்று ஆய்வு செய்யப்பட்டது. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு இன்று மதியம் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

    டெல்லியில் இன்று மதியம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இது தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 1 மற்றும் 5-ந் தேதிகளில் ஓட்டுப்பதிவு நடத்தப்படும். 1-ந்தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின் போது 89 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

    இந்த 89 தொகுகளிலும் நாளை மறுநாள் (நவம்பர் 5-ந் தேதி) வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. டிசம்பர் 5-ந் தேதி 2-ம் கட்ட தேர்தலின் போது 99 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடத்தப்படும். இதற்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 10-ந் தேதி தொடங்குகிறது.

    குஜராத்தில் மொத்தம் உள்ள 182 சட்டசபை தொகுதிகளில் 142 தொகுதிகள் பொதுவானவை. 17 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், 23 தொகுதிகள் மலைவாழ் பழங்குடி இன மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் 4 கோடியே 90 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள்.

    இவர்கள் வாக்களிப்பதற்காக 182 தொகுதிகளிலும் 51 ஆயிரத்து 782 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளும் தரை தளத்திலேயே அமைக்கப்படும்.

    வாக்களிப்பதில் பெண்களையும், இளைஞர்களையும் உற்சாகப்படுத்துவதற்காக முழுக்க முழுக்க அவர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படும். 1274 வாக்குச் சாவடிகளில் முழுக்க பெண்களே பணிபுரிவார்கள்.

    அதுபோல 33 வாக்குச்சாவடிகளில் முழுக்க முழுக்க இளைஞர்கள் மட்டுமே பணியாற்றுவார்கள். 217 வாக்காளர்களுக்காக கப்பலிலும் இந்த தடவை வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது.

    வாக்காளர்களில் 2 கோடியே 53 லட்சத்து 36 ஆயிரத்து 610 பேர் ஆண்கள், 2 கோடியே 37 லட்சத்து 51 ஆயிரத்து 738 பேர் பெண்கள். இவர்களில் 4 லட்சத்து 61 ஆயிரத்து 694 பேர் முதல் முதலாக வாக்களிக்க போகும் இளைஞர்கள் ஆவார்கள்.

    ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் மாதம் 8-ந் தேதி நடத்தப்படும். தேர்தலை சுமூகமாக நடத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது.

    இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறினார்.

    கடந்த 2017-ம் ஆண்டு குஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் ஒரே காலக்கட்டத்தில் நடத்தப்பட்டது. இந்த தடவை இமாச்சலப் பிரதேச தேர்தல் வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கை டிசம்பர் மாதம் 8-ந் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

    அதே தேதியில் குஜராத் மாநில வாக்குகளும் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை தேர்தல் ஆணையம் இன்று உறுதிப்படுத்தி உள்ளது.

    இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா, ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதே மாதிரியான மும்முனை போட்டிதான் குஜராத் சட்டசபை தேர்தலிலும் காணப்படுகிறது.

    குஜராத் மாநிலத்தில் 1998-ம் ஆண்டு முதல் கடந்த 24 ஆண்டுகளாக பா.ஜனதா கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இதில் மோடி தலைமையில் 12 ஆண்டுகள் பா.ஜ.க. ஆட்சி நடந்துள்ளது. 5 தடவை தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா 6-வது தடவையும் வெற்றி பெறுமா என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நாடுமுழுவதும் நிலவுகிறது.

    கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பா.ஜனதா கட்சிக்கு 99 இடங்களே கிடைத்தன. 25 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் 100 இடங்களுக்கு கீழ் பா.ஜனதா சரிவை சந்தித்தது கடந்த தேர்தலில்தான்.

    அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களை கைப்பற்றி கடும் சவாலாக மாறியது. 10 தொகுதிகளில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது. தற்போது காங்கிரசுக்கு குஜராத்தில் செல்வாக்கு சற்று மேம்பட்டு இருப்பதாக கருதப்படுவதால் பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    அதே சமயத்தில் கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் 1 சதவீத வாக்குகளைக்கூட பெறாத ஆம் ஆத்மி கட்சி இந்த தடவை முழு வீச்சில் களம் இறங்கி உள்ளது. டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து குஜராத்திலும் வலுவாக கால் ஊன்ற வேண்டும் என்று கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தை எற்கனவே தொடங்கி விட்டார்.

    அவர் நிறுத்தப்போகும் வேட்பாளர்கள் பிரிக்கும் வாக்குகள்தான் பா.ஜ.க., காங்கிரஸ் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் குஜராத் மாநில தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

    கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. பா.ஜனதா கட்சி 49.9 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. காங்கிரஸ் கட்சி 41.4 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. சுமார் 8 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில்தான் காங்கிரஸ் வெற்றியை இழந்தது.

    இந்த தடவை அதை சரி கட்டுவதற்காக காங்கிரஸ் தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் ஆம் ஆத்மி கட்சி அதிக வாக்குகளை பிரிக்கும் பட்சத்தில் அது காங்கிரஸ் வெற்றியை பாதிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    • மும்முனை போட்டி காரணமாக குஜராத்தில் வாக்குகள் சிதறும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
    • குஜராத்தில் பாரதிய ஜனதா கடந்த 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகிறது.

    ஆமதாபாத்:

    182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இத்தேர்தல் கருதப்படுகிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

    வருகிற 14-ந்தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். 15-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. 17-ந்தேதி மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து குஜராத்தில் தேர்தல் ஜூரம் தொற்றி கொண்டுள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களை கவரும் வகையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    கடந்த தேர்தலில் குஜராத்தில் பாரதிய ஜனதாவும், காங்கிரஸ் கட்சியுமே பிரதான கட்சிகளாக களம் இறங்கியது. இதில் பாரதிய ஜனதா 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 77 இடங்கள் கிடைத்தன.

    இம்முறை குஜராத்தில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரசுடன் ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்கி உள்ளது. இதனால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    மும்முனை போட்டி காரணமாக குஜராத்தில் வாக்குகள் சிதறும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகிறார்கள். ஆனால் இம்முறையும் ஆட்சியை கைப்பற்றி விட பாரதிய ஜனதா தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளது.

    குஜராத்தில் பாரதிய ஜனதா கடந்த 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகிறது. 6 முறை ஆட்சியில் அமர்ந்து தொடர்ந்து 27 ஆண்டுகள் பதவியில் இருக்கிறது. 7-வது முறையாக இந்த தேர்தலிலும் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்துள்ளது.

    இதையொட்டி பிரதமர் மோடி கடந்த சில மாதங்களாக குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

    தேர்தல் தேதி வெளியான பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக குஜராத் மாநிலத்தில் பிரசாரம் தொடங்க இருக்கிறார். நேற்று இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலையொட்டி மோடி பாரதிய ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    இதன் தொடர்ச்சியாக அவர் சொந்த மாநிலமான குஜராத்திற்கு இன்று பிற்பகல் செல்கிறார்.

    அவருக்கு பாரதிய ஜனதா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பின்பு அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து வல்சாத் மாவட்டம் செல்கிறார்.

    வல்சாத் மாவட்டத்தில் உள்ள கப்ரடா கிராமத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகிறார். அதன்பிறகு தேர்தல் பிரசார பேரணியிலும் பங்கேற்கிறார்.

    இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து பாவ் நகரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். இதில் தந்தையை இழந்த 522 பெண்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

    பிரதமர் மோடி முதல் முறையாக இன்று பிரசாரம் தொடங்க இருப்பதை தொடர்ந்து அங்குள்ள பாரதிய ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கடந்த சில மாதங்களாக குஜராத் சென்று பிரசாரம் செய்தார். காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று பிரதமர் மோடி பிரசாரம் செய்ய இருப்பதால் குஜராத் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.

    • முதல் கட்டத்தில் 84 தொகுதியின் வேட்பாளர்களும், 2-வது கட்டத்தில் 76 தொகுதி வேட்பாளர்கள் விவரத்தையும் பாஜக வெளியிட்டுள்ளது.
    • 160 வேட்பாளர்களில் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் 69 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    182 தொகுதிகளுக்கான குஜராத் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் நடக்கிறது. முதல் கட்ட தேர்தலில் 89 இடங்களுக்கும், 2-வது கட்ட வாக்குப்பதிவில் 93 தொகுதிகளுக்கும் ஓட்டுப் பதிவு நடக்கிறது.

    இந்தநிலையில் குஜராத் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது. மொத்தம் 160 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

    முதல் கட்டத்தில் 84 தொகுதியின் வேட்பாளர்களும், 2-வது கட்டத்தில் 76 தொகுதி வேட்பாளர்கள் விவரத்தையும் பாஜக வெளியிட்டுள்ளது.

    இதில், கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவபாவுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். ரிவபா கடந்த 2019-ம் ஆண்டுதான் பாஜகவில் இணைந்தார்.

    கட்சியில் சேர்ந்த 3 ஆண்டுகளில் அவருக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுக்கப்பட்டு உள்ளது. காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த படேல் சமூகத்தை சேர்ந்த ஹர்திக் படேலுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. அவர் விரம்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    குஜராத் முதல் அமைச்சர் பூபேந்திர படேலுக்கு மீண்டும் டிக்கெட் கொடுத்து உள்ளது. அவர் கட்லோடியா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    160 வேட்பாளர்களில் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் 69 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. 38 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

    வேட்பாளர் பட்டியலில் 14 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். எஸ்.சி. பிரிவை சேர்ந்த 13 பேருக்கும், எஸ்.டி. பிரிவை சேர்ந்த 24 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    • காங்கிரஸ் 15 முதல் 30 இடங்களையும் ஆம் ஆத்மி கட்சி 10 முதல் 20 இடங்களையும் பெறலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
    • காங்கிரஸ் கட்சிக்கு குஜராத்தில் வலுவான தலைமை இல்லாததால் அக்கட்சியின் வாக்குகள் பிரிந்து ஆம்ஆத்மிக்கு பதிவாகலாம் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    குஜராத் மாநில சட்டசபைக்கு வருகிற டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் குஜராத் தேர்தலை வைத்து ஆன்லைன் சூதாட்டம் களை கட்டி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் கள்ளச்சந்தையில் ரூ.50 ஆயிரம் கோடி வரை பணப்புழக்கத்தை ஏற்படுத்த சூதாட்ட தரகர்கள் திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    தேர்தலில் பா.ஜனதா 120 இடங்களை கைப்பற்றி மெகா வெற்றி பெறும் என்று சூதாட்ட தரகர்கள் கணித்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் 15 முதல் 30 இடங்களையும் ஆம் ஆத்மி கட்சி 10 முதல் 20 இடங்களையும் பெறலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சிக்கு குஜராத்தில் வலுவான தலைமை இல்லாததால் அக்கட்சியின் வாக்குகள் பிரிந்து ஆம்ஆத்மிக்கு பதிவாகலாம் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் பா.ஜனதா 99 இடங்களையும், காங்கிரஸ் 77 இடங்களையும் கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தலை வைத்து நடத்தப்படும் இந்த சூதாட்டம் ஜனநாயகத்தையே கேள்விக் குறியாக்குவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், இங்கிலாந்து மோதும் போட்டி தொடர்பான சூதாட்டமும் களைகட்டி உள்ளது.

    இந்த சூதாட்டங்கள் ஆன்லைனில் நடப்பதால் அவற்றை முழுமையாக உடனடியாக தடுப்பது மிகவும் கடினமானது என்று போலீசார் தெரிவித்தனர்.

    • இதுவரை பாஜக 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
    • காங்கிரஸ் கட்சி 104 தொகுதிகளுக்கும், ஆம் ஆத்மி 176 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

    182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    ஆளும் பாஜக ஏற்கனவே 160 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருந்தது. முதலமைச்சர் பூபேந்திர படேல், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஹர்திக் படேல், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவபா உள்ளிட்டோர் பெயர் இடம் பெற்று இருந்தன. தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப் படவில்லை.

    இந்தநிலையில் பாஜக 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாஜக 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    இதற்கிடையே பாஜகவில் சீட் கிடைக்காததால் தற்போதைய எம்எல்ஏ மற்றும் 4 முன்னாள் எம்எல்ஏக்கள் ஆகிய 5 பேர் சுயேட்சையாக போட்டியிட போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சி 104 தொகுதிகளுக்கும், ஆம் ஆத்மி 176 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

    • பிரதமர் மோடி நாளை 4 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
    • பாவ்நகர், அம்ரேலி, ஜங்காபாத் ஆகிய மாவட்டங்களில் 4 பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்.

    அகமதாபாத்:

    182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    குஜராத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பா.ஜனதா தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு அங்கு ஆட்சியை பிடிக்கும் வேட்கையில் காங்கிரஸ் உள்ளது. ஆம் ஆத்மி 3-வது அணியாக களத்தில் குதித்துள்ளது.

    பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 6-ந்தேதி பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினார். வல்சாத் மாவட்டம் கபர்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். பாவ் நகரில் பிரமாண்ட திருமண நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி 2-வது முறையாக குஜராத் செல்கிறார். இன்று முதல் 2 நாட்கள் அவர் பிரசாரம் செய்கிறார்.

    மோடி இன்று காலை அருணாச்சல பிரதேசத்தில் முதல் பசுமை விமான நிலையத்தை தொடங்கி வைத்தார். பின்னர் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி சென்று நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கிருந்து அவர் புறப்பட்டு குஜராத் செல்கிறார்.

    இன்று மாலை 6.30 மணிக்கு வல்சாத் மாவட்டம் ஜூவா கிராமத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    பிரதமர் மோடி நாளை 4 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். பாவ்நகர், அம்ரேலி, ஜங்காபாத் ஆகிய மாவட்டங்களில் 4 பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

    • வருகிற 1-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகளின் வேட்பாளர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.
    • 89 தொகுதிகளிலும் மொத்தம் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநில சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு வருகிற 1-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இம்முறை குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சியும் களம் இறங்கி உள்ளது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

    ஆளும் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்க நம்பிக்கையுடன் பிரசாரம் செய்து வருகிறது. அவர்களை எதிர்த்து காங்கிரசும், ஆம் ஆத்மியும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    வருகிற 1-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகளின் வேட்பாளர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    89 தொகுதிகளிலும் மொத்தம் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களை பற்றிய விபரங்களை சமீபத்தில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டது.

    இச்சங்கம் வெளியிட்ட பட்டியலில் குஜராத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள், அவர்களின் குற்றப்பின்னணி குறித்த விபரங்களை தெரிவித்து உள்ளனர்.

    அதன்படி முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 167 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது போட்டியிடும் வேட்பாளர்களில் 21 சதவீதம் பேர் கிரிமினல்கள் என்று தெரியவந்துள்ளது.

    இந்த வேட்பாளர்களில் 100 பேர் கொலை, பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் உள்ளிட்ட தீவிர குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள்.

    இப்பட்டியலில் ஆம்ஆத்மி கட்சி முதலிடத்தில் உள்ளது. இக்கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் மட்டும் 32 பேர் உள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் காங்கிரசில் 31 பேரும், பாரதிய ஜனதா கட்சியில் 14 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.

    • முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் குஜராத்தில் தலைவர்கள் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே 3 முறை தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்று பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார்.

    அகமதாபாத்:

    182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 8-ந்தேதி நடைபெறுகிறது.

    முதல் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கும், 2-வது கட்ட தேர்தலில் 93 இடங்களுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது.

    குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா நீண்ட காலமாக ஆட்சி செய்து வருகிறது. 1998-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 6 சட்டசபை தேர்தல்களில் அந்த கட்சி வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 24 ஆண்டுகளாக பா.ஜனதா அங்கு ஆட்சி நடத்தி வருகிறது. அந்த கட்சி தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது.

    காங்கிரஸ் கட்சி பா.ஜனதாவிடம் இருந்து இந்த முறையாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது. குஜராத்தை பொறுத்தவரை பா.ஜனதாவும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் எப்போதும் நேரடி போட்டி இருக்கும்.

    தற்போது முதல் முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்குகிறது. டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பிலும் ஆட்சியை பிடித்ததால் குஜராத் தேர்தலிலும் ஆம் ஆத்மி குதித்துள்ளது. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது.

    ஆளும் பா.ஜனதா அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 179 இடங்களிலும், அதன் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் 2 தொகுதியிலும் நிற்கிறது. ஆம் ஆத்மி கட்சி 181 தொகுதிகளில் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளது. இது தவிர சிறிய கட்சிகளும் போட்டியிடுகின்றன.

    182 தொகுதியில் மொத்தம் 1621 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 139 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள். 3 பிரதான கட்சிகளும் சேர்ந்து மொத்தம் 38 பெண் வேட்பாளர்களை தான் நிறுத்தி உள்ளது. பா.ஜனதாவில் 18 பேருக்கும், காங்கிரசில் 12 பேருக்கும் டிக்கெட் கொடுக்கப்பட்டு உள்ளது. இது கடந்த முறையை விட கூடுதலாகும்.

    குஜராத் சட்டசபை தேர்தலில் 4.90 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட தகுதியானவர்கள். இதில் 2.53 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.37 கோடியாகும். தேர்தலுக்காக 51,782 வாக்கு சாவடிகள் அமைக்கப்படுகிறது.

    முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் குஜராத்தில் தலைவர்கள் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே 3 முறை தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்று பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார். அமித்ஷா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களும் அங்கு ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் பா.ஜனதா உள்ளது.

    நடை பயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார். இதேபோல ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும், கெஜ்ரிவாலும் குஜராத்தில் இன்று போட்டி பிரசாரம் செய்கிறார்கள். வாக்காளர்களை கவரும் வகையில் அவர்கள் ஓட்டு வேட்டையில் ஈடுபடுகிறார்கள். வைர நகரமான சூரத்தில் அவர்கள் ஆதரவு திரட்டுகிறார்கள்.

    மோடி 3 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். சூரத்தில் உள்ள மோட்டா வரச்சா, பரூச் மாவட்டம் நேட்ரங், கேடா மாவட்டம் மெகமதாபாத் ஆகிய இடங்களில் மோடி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.

    அவர் 25 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ செல்கிறார். விமான நிலையத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் மோட்டா வராச்சா வரும் வரை இந்த ரோடு ஷோ நடக்கிறது. இதை சூரத் பகுதி பா.ஜனதா தலைவர் ஜெகதீஷ் படேல் தெரிவித்தார். சூரத் பகுதியில் இருந்து 12 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு செல்கிறார்கள்.

    கெஜ்ரிவால் 2 நாள் பயணமாக சூரத் செல்கிறார். இன்று அவர் ஜவுளி தொழிலில் ஈடுபட்டுள்ள தலைவர்கள், கைவினை கலைஞர்களுடன் உரையாடுகிறார். சூரத்தில் உள்ள டவுன்ஹால் பகுதியில் இந்த உரையாடல் நடக்கிறது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த பகுதி பா.ஜனதாவின் கோட்டையாகும்.

    மேலும் கெஜ்ரிவால் அங்குள்ள கதர்காம் பகுதியில் ரோடு ஷோவிலும் ஈடுபடுகிறார். ஒரே நேரத்தில் மோடியும், கெஜ்ரிவாலும் குஜராத்தில் இன்று பிரசாரம் செய்வதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    • பெற்றோர் இல்லாவிட்டாலும், தங்கும் இடம் இல்லாமல் இருந்தாலும் பழங்குடியின சிறுவர்கள் பெரிய கனவுகளை கண்டு என்னை உத்வேகப்படுத்துகிறார்கள் என பிரதமர் மோடி கூறினார்.
    • பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பிரசாரங்களில் குழந்தைகளை தவறாக பயன்படுத்தியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

    அகமதாபாத்:

    குஜராத்தில் வருகிற 1-ந்தேதி முதற்கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதிகட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது.

    பிரதமர் மோடி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று நேத்ராங்க் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

    முன்னதாக அவர் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த அவி (வயது 14), ஜெய் (11) ஆகிய சகோதரர்களை நேரில் சந்தித்து பேசினார். இவர்கள் இருவரும் தாய், தந்தையின்றி தனித்து வளர்ந்து வருகின்றனர்.

    இவர்களது பெற்றோர் நீண்டகாலமாக நோய் வாய்ப்பட்டு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தனர். அன்றிலிருந்து அவி, ஜெய் ஆகியோர் ஒருவரை ஒருவர் கவனித்து வருகின்றனர். பெற்றோரை இழந்த நிலையில் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய கூலி வேலை செய்து வருகின்றனர்.

    வறுமையில் பல கஷ்டங்கள் வந்தாலும் கல்வியை விடக்கூடாது என்ற உறுதியில் சகோதரர்கள் இருவரும் வேலைகளுக்கு இடையே பள்ளி படிப்பை தொடர்ந்து வருகின்றனர். அவி 9-ம் வகுப்பும், ஜெய் 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்த பிரதமர் மோடி நேற்று தனது சுற்றுப்பயணத்தின் போது சிறுவர்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது சிறுவர்களிடம் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அவி, நான் என்ஜினீயராக வேண்டும் என கூறி உள்ளார். ஜெய், நான் மாவட்ட கலெக்டராக விரும்புவதாக கூறி உள்ளார்.

    மாணவர்கள் இருவரையும் பாராட்டிய பிரதமர் மோடி, அரசு சார்பில் அவர்களது வீட்டில் டி.வி., கம்ப்யூட்டர் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார். மேலும் அவர்களது படிப்பு செலவை ஏற்பதாகவும் உறுதி அளித்தார்.

    பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, தான் சந்தித்து பேசிய பழங்குடியின சிறுவர்களை குறிப்பிட்டு பேசினார். பெற்றோர் இல்லாவிட்டாலும், தங்கும் இடம் இல்லாமல் இருந்தாலும் இந்த சிறுவர்கள் பெரிய கனவுகளை கண்டு என்னை உத்வேகப்படுத்துகிறார்கள் என்றார்.

    பேரணியில் 2 சிறுவர்களை பற்றி பிரதமர் பேசிய வீடியோவை டுவிட் செய்த குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல், 'பிரதமர் பேசிய அவி மற்றும் ஜெய் என்ற 2 குழந்தைகளின் போராட்டத்தின் மனதை தொடும் கதையை கேளுங்கள்' என குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

    அதே நேரம் பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பிரசாரங்களில் குழந்தைகளை தவறாக பயன்படுத்தியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இதுதொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

    • முதல் கட்டமாக 89 தொகுதிகளில் 1ம் தேதி தேர்தல் நடப்பதால், அங்கெல்லாம் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது.
    • ஆம் ஆத்மி கட்சியும் 181 வேட்பாளர்களை களம் இறக்கி, ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

    நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள குஜராத் சட்டசபை தேர்தல் பிரசார களம், களை கட்டி வருகிறது. அங்கு 182 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1ம் தேதி, 5ம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

    முதல் கட்டமாக 89 தொகுதிகளில் 1ம் தேதி தேர்தல் நடப்பதால், அங்கெல்லாம் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. வழக்கமாக பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நடைபெற்று வந்த குஜராத்தில், இந்த முறை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் 181 வேட்பாளர்களை களம் இறக்கி, ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

    இந்த தேர்தலில் மொத்தம் போட்டியிடுகிற 1,621 வேட்பாளர்களில் 139 பேர் பெண்கள். அவர்களில் 38 பேர் மட்டுமே 3 முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற இந்த சூரத்தில் நேற்று முன்தினம் பா.ஜ.க.வுக்காக பிரதமர் மோடி ஓட்டு வேட்டையாடினார். அவர் சூரத் விமான நிலையத்தில் இருந்து மோட்டா வரச்சா என்ற இடம் வரையில் 25 கி.மீ. தொலைவுக்கு பிரமாண்ட வாகன பேரணி (ரோடு ஷோ) நடத்தி ஆதரவு திரட்டினார்.

    காங்கிரசுக்காக சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகல், பாலிடானா என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    ஆம் ஆத்மிக்காக, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சூரத்தில் முற்றுகையிட்டு தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். அவர் அங்கு ஜவுளித்தொழில் அதிபர்கள் மற்றும் ரத்தினக்கல் கைவினைஞர்களுடன் டவுன்ஹால் சந்திப்புகளை நடத்தி தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு வேட்டையாடினார்.

    இந்நிலையில், முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது.

    • 93 தொகுதிகள் குஜராத்தின் மத்திய பகுதி மற்றும் வடக்குப் பகுதியில் இந்த தொகுதிகள் அமைந்துள்ளன.
    • இரு கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    குஜராத் மாநிலத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு இன்று காலை 8 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    93 தொகுதிகள் குஜராத்தின் மத்திய பகுதி மற்றும் வடக்குப் பகுதியில் இந்த தொகுதிகள் அமைந்துள்ளன.

    மொத்தம் 2.54 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக 14 ஆயிரத்து 975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இத்தேர்தலில் 833 வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நிலவுகிறது. பிரதமர் மோடி 31 பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டார்.

    இரு கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    • 93 தொகுதிகளுக்கு இன்று காலை 8 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

    குஜராத் மாநிலத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு இன்று காலை 8 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 93 தொகுதிகள் குஜராத்தின் மத்திய பகுதி மற்றும் வடக்குப் பகுதியில் இந்த தொகுதிகள் அமைந்துள்ளன. மொத்தம் 2.54 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

    இவர்கள் வாக்களிப்பதற்காக 14 ஆயிரத்து 975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் 833 வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், அகமதாபாத் நகரில் உள்ள பள்ளியில் பிரதமர் மோடி வாக்குசாவடி மையத்திற்கு சென்று வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி கூறியதாவது:-

    குஜராத், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் டெல்லி மக்களால் ஜனநாயக திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டு மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். தேர்தலை அமைதியாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×