என் மலர்
நீங்கள் தேடியது "hindu temples"
- இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘மதங்கீசுவரர்.’
- இறைவி பெயர் ‘ராஜமதங்கீசுவரி.’ இறைவிக்கு மேலும் 15 பெயர்கள் உண்டு.
நாகை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் ஒன்றுதான் மதங்கீசுவர சுவாமி ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் 'மதங்கீசுவரர்.' இறைவி பெயர் 'ராஜமதங்கீசுவரி.' கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் முன் முகப்பை தாண்டியதும், விஸ்தாரமான பிரகாரம் காணப்படுகிறது. அதன் வலதுபுறம் அம்பாளுக்கு தனிச்சன்னிதி இருக்கிறது.
இறைவிக்கு மேலும் 15 பெயர்கள் உண்டு. அவை அஞ்சனாட்சி, சங்கீத யோகி, சியாமா, சியாமளா, மந்த்ர நாயகி, மந்த்ரிணி, சசிவேசான், ப்ரதானேசி, சுகப்ரியா, வீணாவதி, வைணிகி, முத்ரிணீ, ப்ரயகப்ரியா, நீபப்ரியா, கதம்பவன வாசினி என்பன. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் பத்மத்தையும், சக்கரத்தையும் சுமந்து காட்சி தரும் அன்னை, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகிறாள்.
பேச்சு வராத குழந்தைகளை அன்னையின் சன்னிதி முன் அமரச் செய்து, அவர்கள் நாக்கில் தேனைத் தடவி மூல மந்திரத்தை எழுத, அவர்கள் மெல்ல மெல்ல பேசத் தொடங்குவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள். திருமணம் நடைபெறாமல் தாமதமாகும் ஆணோ, பெண்ணோ அன்னையின் சன்னிதிக்கு, அஷ்டமி அன்று வருகின்றனர். மட்டை உரிக்காத முழு தேங்காயை அர்ச்சனை பொருட்களுடன் தட்டில் வைத்து அன்னைக்கு அர்ச்சனை செய்கின்றனர். பின் அந்த தேங்காயை அர்ச்சகர் வேண்டுதலை வைப்பவரிடமே தந்து விடுகிறார். 11 மாதங்கள் அந்த தேங்காயை வீட்டில் வைத்து, மாதந்தோறும் அஷ்டமி அன்று பூஜை செய்து வர வேண்டும். அதற்குள் அவர்கள் திருமணம் நடைபெறுவது உறுதி என்கிறார்கள். வேண்டியபடி திருமணம் நடந்ததும், மணமான தம்பதிகள் ஆலயம் வந்து, அன்னைக்கு அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, சன்னிதியை 11 முறை வலம் வருவார்கள். பிறகு அந்த தேங்காயை அம்மன் சன்னிதிலேயே கட்டிச் செல்வது வழக்கமாக உள்ளது.
இந்த ஆலயம் சுமார் 1100 ஆண்டுகள் பழமையானது. ஆலயத்தின் தலவிருட்சமாக, வன்னி, புரசம், வில்வம் என மூன்று விருட்சங்கள் உள்ளன. இவை ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் உள்ளன. மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். எதிரே அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில், இறைவன் மதங்கீசுவரர் லிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
பிரளய காலத்தில் உலகமெங்கும் தண்ணீர் மயமாய் காட்சி தந்தது. அந்த சமயம் பிரபஞ்ச சிருஷ்டிக்காக பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் மூவரும் சிவபெருமானை நோக்கி தவம் செய்தனர். அதில் பிரம்மா, சிவனை மதங்க (யானை வடிவில்) ரூபமாய் தியானம் செய்தார். அதே நேரத்தில் பிரம்மாவின் மானஸ புத்திரரான மதங்க முனிவர், பிரம்மதேவனின் ஆணையால், சிவபெருமான் குறித்து தவம் செய்ய பூலோகம் நோக்கி புறப்பட்டார். உலகம் தண்ணீர் மயமாக இருந்ததால் அவருக்கு பூமி தென்படவில்லை. எனவே ஆகாயத்திலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்த மதங்க முனிவர், நாரதரிடம் தவம் செய்வதற்கு உரிய இடத்தைக் காட்டுமாறு வேண்டினார்.
மதங்கரிடம் நாரத முனிவர், "பூமியில் சுவேதவனம் (திருவெண்காடு) என்று ஒரு இடம் உள்ளது. அங்கு பிரம்மதேவர் மகா பிரளய காலத்தில் ஐக்கியமாகி விடுவார். அத்தலம் சிவ சூலத்தால் தாங்கப் பெற்றிருப்பதால், அந்தத் தலம் மட்டும் அழியாமல் இருக்கும். அங்கு புரச மரங்கள் அடர்ந்து இருக்கும். எனவே அப்பகுதியை 'பலாச வனம்' என்பர். அதன் அருகே சென்று தவம் செய்து சித்தி பெறுங்கள்" என்றார்.
நாரதர் சொன்னபடியே இந்த தலத்திற்கு வந்த மதங்க முனிவர் அங்கு தவம் செய்யத் தொடங்கினார். அவர் தவத்திற்கு இடையூறு விளைவிக்க, மன்மதனும், மோகினி உருவில் மகாவிஷ்ணுவும் வந்தனர். தனது தவத்திற்கு இடையூறு செய்ய வந்த மன்மதனை "சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் நீ அழிவாய்" என சபித்தார் முனிவர்.
பதறிப்போன மன்மதன், சாப விமோசனம் வேண்டினான். உடனே மதங்கர், "நீ கிருஷ்ண பரமாத்மாவின் புதல்வனாய் பிறந்து சரீரம் பெறுவாய்" என அருளினார்.
மோகினியை முனிவர் சபிக்க முற்பட்டபோது, பகவான் மகாவிஷ்ணு, மதங்க முனிவருக்கு தரிசனம் அளித்தார். "மதங்கரே! உன் தவத்தை சோதனை செய்து பின், உமக்கு யோக சாஸ்திரம் அருளவே இங்கு வந்தேன். என்ன வரம் வேண்டும் கேள்?" என்றார் மகாவிஷ்ணு.
அதற்கு முனிவர் "தாங்கள் மோகினியாகவே தரிசனம் தந்து கொண்டு, எப்போதும் இவ்விடத்திலேயே தங்கியருள வேண்டும்" என வேண்டினார். மகாவிஷ்ணுவும் அவ்வாறே அருளினார்.
மதங்க முனிவர் தியானத்தில் இருந்தபோது பரமசிவன் அவருக்கு காட்சி தந்து "என்ன வரம் வேண்டும்?" எனக் கேட்டார்.
மதங்கர், "நான் தவம் செய்த இந்த இடத்தில், யார் ஒருவர் பிறந்தாலும், இறந்தாலும், வசித்தாலும், பூஜித்தாலும் அவர்கள் எல்லா நலன்களையும் பெற்று வாழ வேண்டும். நீங்கள் 'மதங்கேசர்' என்ற பெயர் கொண்டு லிங்க மூர்த்தியாய் இங்கு காட்சி தர வேண்டும்" என வேண்டிக் கொண்டார்.
மதங்க முனிவர் தவம் செய்த இடம், திருவெண்காட்டில் இருந்து வடமேற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநாங்கூரின் ஒரு பகுதியாகும். மதங்க முனிவர் வேண்டியபடி சிவபெருமான் மதங்கேசுவரர் என்ற திருநாமத்தில், ராஜமதங்கீசுவரி என்ற திருநாமம் கொண்ட தேவியுடனும் மதங்கருக்கு காட்சி தந்தார்.
காளியின் ஆலயத்தை அடுத்து மதங்க மகரிஷியின் சன்னிதி உள்ளது. மேற்கு பிரகாரத்தில் வலஞ்சுழி மதங்க விநாயகர், பிரசன்ன சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி சன்னிதிகள் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் மோகினி உருவில் (பெண் உருவில்) நாராயணப் பெருமாள் நாராயணி என்ற பெயரில் அருள்பாலிக்கும் சன்னிதி உள்ளது.
தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்க, வடக்கு பிரகாரத்தில் சண்டீசுவரர் சன்னிதி உள்ளது.
சகல கலைகளுக்கும் அதிபதியாக விளங்குபவள் அன்னை மதங்கீசுவரி. சரஸ்வதி தேவிக்கு வித்யாபியாசம் செய்ததால், இந்த அன்னையை தரிசிப்பவருக்கு கலை, கல்வி, தேர்வில் தேர்ச்சி, உயர் பதவி, தொழில் மேன்மை, பேச்சு வன்மை அனைத்தும் கிடைக்கப்பெறும் என்பது நிதர்சனமான உண்மையே.
இரட்டை நந்திகள்
வழக்கமாக சிவாலயங்களில் இறைவனின் கருவறைக்கு எதிரே ஒரு நந்தி தான் இருக்கும். ஆனால் இங்கு கிழக்கும், மேற்கும் நோக்கிய இரண்டு நந்திகள் இருப்பது எங்கும் காணாத சிறப்பம்சமாகும். இதில் கிழக்கு நோக்கி உள்ள நந்தி 'சுவேத நந்தி' எனவும், மேற்கு நோக்கி உள்ள நந்தி 'மதங்க நந்தி' எனவும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு நந்திகளையும் பிரதோஷ நாட்களில் தரிசனம் செய்தால், 108 சிவாலயங்கள் சென்று பிரதோஷ தரிசனம் செய்த பலன் கிட்டும் என்கின்றனர். இந்த இரட்டை நந்திகளை 'மாப்பிள்ளை நந்தி' எனவும், 'மாமனார் நந்தி' எனவும் அழைக்கின்றனர்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
மயிலாடுதுறையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், சீர்காழியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது திருநாங்கூர் தலம்.
-பொ.பாலாஜி கணேஷ், சிதம்பரம்.
- சுமார் 1300 ஆண்டுகள் பழமையானது இந்த கோவில்.
- ஆலயத்தில் தரும் விபூதி பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டால், தீராத நோய்கள் நீங்கும்.
சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது, திருவான்மியூர் மருந்தீசுவரர் திருக்கோவில். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 258-வது தலம் என்ற சிறப்புக்குரியது. சுமார் 1300 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படும் இந்த ஆலயத்தில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்பாலித்து வருகிறார்.
அகத்திய முனிவர் இத்தல இறைவனின் அருளை அறிந்து, இங்கு வந்து தவம் செய்தார். அவருக்கு இங்குள்ள வன்னி மரத்தின் அடியில் காட்சி கொடுத்த சிவபெருமான், உலகில் தோன்றியுள்ள நோய்களைத் தீர்க்கும் மருந்துகளைப் பற்றியும், அவற்றை உருவாக்கும் மூலிகைகளைப் பற்றியும், பல்வேறு மூலிகைகளின் தன்மைகள் பற்றியும் அகத்தியருக்கு உபதேசம் செய்தருளினார். எனவே தான் இத்தல ஈசன், 'மருந்தீசுவரர்' என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலயமும் 'மருந்தீசுரம்' என்று பெயர் பெற்று விளங்குகிறது.
வசிஷ்ட முனிவர், தான் செய்யப்போகும் சிவபூஜைக்காக பசுவின் பாலை எதிர்பார்த்தார். இதை அறிந்த இந்திரன், தேவலோகத்தில் இருந்த காமதேனு பசுவை, கருடன் மூலமாக வசிஷ்ட முனிவரிடம் கொண்டு போய் சேர்த்தான். இதனால் மகிழ்ச்சியடைந்த வசிஷ்டர், தன்னுடைய சிவ பூஜையை தொடங்கினார். பூஜை நேரத்தில் காமதேனு, பால் சுரக்காமல் காலதாமதம் செய்தது. இதனால் கோபம் கொண்ட வசிஷ்டர், காமதேனுவை 'காட்டுப் பசுவாக போவாய்' என்று சாபமிட்டார்.
இதனால் மனம் வருந்திய காமதேனு, தனக்கான விமோசனத்தை கேட்டு, வசிஷ்டரை வேண்டியது. உடனே அவர், "பூலோகத்தில் வன்னி மரத்தின் அடியில் சுயம்புவாக இருக்கும் சிவனை தினமும் பால் சுரந்து வணங்கி வந்தால், உனக்கு விமோசனம் கிடைக்கும்" என்று கூறினார்.
இதையடுத்து இந்தத் திருத்தலத்திற்கு வந்த காமதேனு, சுயம்புவாக மண்ணில் புதைந்திருந்த சிவபெருமானுக்கு தினமும் பாலைச் சுரந்து வழிபாடு செய்து வந்தது. இதன் காரணமாக இத்தல இறைவனுக்கு 'பால்வண்ணநாதர்' என்ற பெயரும் உண்டு. இப்படி பல காலம் பால் சுரந்து வழிபட்டதன் பலனாக, காம தேனுவுக்கு சாப விமோசனம் கிடைத்து, அது தேவலோகம் சென்றடைந்தது.
கொடூரமாக மக்களை தாக்கி கொள்ளையடித்து வந்த வால்மீகி, மனம் திருந்திட எண்ணம் கொண்டு, இத்தல இறைவனை வழிபட்டு வந்தார். அப்படி அவர் வந்தபோது, காமதேனு தன்னுடைய சாபம் நீங்குவதற்காக, பாலைச் சுரந்து இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தது. வால்மீகி வந்ததைப் பார்த்த காமதேனு, பதற்றத்தில் அங்கும் இங்கும் ஓடியது. இதில் சுயம்புவாக இருந்த சிவலிங்கத்தின் மீது காமதேனுவின் காலடி பட்டது. அது தழும்பாக மாறியது. இன்றும் இத்தல இறைவனின் சிரசில் இந்தத் தழும்பை காண இயலும். தன்னை வணங்கி மனம் திருந்திய வால் மீகிக்கு, சிவபெருமான் வன்னி மரத்தடியில் காட்சி தந்தார். அவரது பெயரிலேயே இந்த திருத்தலம் விளங்குகிறது.
ஆலய பிரகாரத்தில் அகத்தியர், வால்மீகி ஆகியோருக்கு சிவபெருமான் காட்சி தந்த வன்னி மரம் உள்ளது. இந்த இடத்தில் பங்குனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது, அகத்தியருக்கு காட்சி தந்த நிகழ்வு நடத்தப்படும். இவ்வாலய இறைவனான மருந்தீசுவரர், மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார். அம்மன் `திரிபுரசுந்தரி' என்ற திருநாமத்துடன் தனிச் சன்னிதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். விநாயகர் மற்றும் முருகப்பெருமான் சன்னிதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.
இந்தக் கோவிலின் கிழக்கு கோபுர வாசல் முன்பாக தெப்பக்குளம் உள்ளது. கோவிலுக்குள் சிறிய தடாகமும், நந்தவனமும் அமைந்திருக்கிறது. ராஜகோபுரம் கிழக்கு பார்த்த நிலையில் உள்ளது. அதைத் தாண்டி உள்ளே சென்றால் முன் மண்டபம் இருக்கும். ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் மூன்று விநாயகர்கள், வேதாகம பாடசாலை, நூலகம், திருமுறை மண்டபம் உள்ளன. உள் பிரகாரத்தில் கஜலட்சுமி, வள்ளி-தெய்வானை உடனாய முருகப்பெருமான், நடராஜர், 108 சிவலிங்கங்கள், கால பைரவர், கேதாரீசுவரர், ராமநாதேசு வரர், சுந்தரேசுவரர், உண்ணாமுலையம்மை, ஜம்புகேசு வரர், 63 நாயன்மார்கள் உள்ளனர். மூலவரின் கருவறை கோஷ்டத்தில் விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, கணபதி, துர்க்கை, சண்டிகேசுவரர் அருள்கின்றனர். மேற்கு வாசல் வழியாக வருகையில் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன.
இந்த ஆலயத்தில் வருடம் முழுவதும் சமய சொற்பொழிவுகள் நடத்தப்படுகின்றன. நிறைய பசுக்களைக் கொண்ட ஒரு பசு மடமும் இங்கு இருக்கிறது. இத்தல இறைவனுக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கி, ஆலயத்தில் தரும் விபூதி பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டால், தீராத நோய்கள் நீங்கும், பாவம் விலகும். அகத்தியருக்கு சிவபெருமான் காட்சி தந்த வன்னி மரத்தை சுற்றி வந்து வணங்கினால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. தங்களின் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், இத்தல இறைவனுக்கும், அம்பாளுக்கும் புது வஸ்திரம் அணிவித்து வழிபடுகிறார்கள்.
மேற்கில் திரும்பிய ஈசன்
அபயதீட்சிதர் என்ற சிவபக்தர், இத்தல இறைவனை வழிபடுவதற்காக வந்தார். அப்போது கடுமையான மழை பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆலயத்தைச் சுற்றிலும் சூழ்ந்திருந்த வெள்ளத்தால் அவரால் நீரைக் கடந்து சுவாமியைக் காண ஆலயத்திற்குச் செல்ல முடியவில்லை. வெளியில் இருந்து பார்த்த போது, சிவபெருமானின் பின் பகுதிதான் தெரிந்ததாம். இதனால் வருத்தம் கொண்ட அந்த சிவபக்தர், 'உன் முகம் கண்டு தரிசனம் செய்ய அருள்புரிய மாட்டாயா?' என்று வேண்டினார். இதையடுத்து அந்த பக்தருக்காக, சிவபெருமான் மேற்கு நோக்கி திரும்பினாராம். பின்னர் அந்த நிலையிலேயே அருள்பாலிக்கத் தொடங்கி விட்டார்.
சென்னை பாரீஸ் பஸ் நிலையத்தில் இருந்து, 14 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவான்மியூருக்கு ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன. பறக்கும் ரெயில் வழித்தடத்தில் மின்சார ரெயில் மூலமும் திருவான்மியூரை அடையலாம்.
- இங்குள்ள குரு பகவான் ஆசியாவிலேயே மிக உயரமானது.
- இந்தத் திருக்கோவில் எமனின் சாபம் நீக்கிய சிறப்பு வாய்ந்த தலம் என்ற சிறப்பு பெற்றது.
அபிஷேக பிரியரான சிவனுக்கு, கோவில்களில் விதவிதமான அபிஷேகம் செய்து பூஜை செய்வர். சிவன் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் சில தலங்களில் மூலிகையால் தைலாபிஷேகம் செய்வர். ஆனால், கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில் உள்ள காலகாலேஸ்வரர் கோவிலில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
மார்க்கண்டேயரின் ஆயுளை முடிக்கச்சென்ற எமதர்மன், தவறுதலாக சிவன் மீது பாசக்கயிறை வீசினான். கோபம் கொண்ட சிவன், பணியை சரியாக செய்யாத எமனின் பதவியை பறித்து சாதாரண மனிதனாக பிறக்கும்படி செய்துவிட்டார். பூலோகம் வந்த எமன் விமோசனம் பெறுவதற்காக பல தலங்களில் சிவனை வழிபட்டு வந்தார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது, சிவ வழிபாடு செய்ய எண்ணினார். ஆனால், இங்கு லிங்க வடிவம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, மணலால் லிங்கம் செய்ய நினைத்து, ஒரு குச்சியால் தரையை தோண்டினார்.
அப்போது, நுரை பொங்கியது. மணலையும், நுரையையும் சேர்த்து அவர் லிங்கமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். சிவன் அவருக்கு காட்சி தந்து, பறிக்கப்பட்ட எமலோக தலைவர் பதவியை மீண்டும் கொடுத்தார். காலனுக்கு (எமன்) காலம் (வாழ்க்கை, பதவி) கொடுத்தவர் என்பதால் இத்தலத்து ஈசன், காலகாலேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இத்தலத்தில் சுவாமி, மணல் லிங்கமாக இருப்பதால், அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
கோவை கோவில்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சுமார் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள குரு பகவான் ஆசியாவிலேயே மிக உயரமானது. இந்த கோவில் கொங்கு மண்டல குரு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
கோவை மாநகரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோவில் பாளையம் என்ற சிற்றூர். பேருந்து நிலையத்தில் இருந்து சில நிமிட நடை தூரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில்.
தொன்மை வாய்ந்த இந்தத் திருக்கோவில் எமனின் சாபம் நீக்கிய சிறப்பு வாய்ந்த தலம் என்ற சிறப்பு பெற்றது . மேலும் இங்குள்ள குருபகவான் இந்தக் கோவிலின் சிறப்பு. இந்தத் தலம் அதி சிறப்பு வாய்ந்த குரு பரிகார ஸ்தலம் ஆகும். ஆளுயர குரு பகவான் சிலை கண்டதும் நம் மனதில் சொல்ல இயலாத அமைதியை ஏற்படுத்தும் . ஒவ்வொரு குருப் பெயர்ச்சியும் இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடபடுகிறது.
இங்கு சூரியன், சந்திரன், குரு, சனீஸ்வரர் என தனித்தனி சன்னதி அமைந்திருக்கிறது.
முகவரி
அருள்மிகு காலகாலேஸ்வரர் கோவில்,
கோவில்பாளையம்,
கோயம்புத்தூர் மாவட்டம்.
- இந்த கோவிலில் பூஜை உள்ளிட்ட எதற்கும் கட்டணம் வசூலிப்பது கிடையாது.
- கோவிலின் மேல்தளத்தில் கடலை நோக்கியபடி சுவாமி எழுந்தருளியுள்ளார்.
இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி எப்போதும் சிறப்புக்குரியது. முக்கடல் சங்கமிக்கும் இந்த ஊர் சிறந்த சுற்றுலாத் தலமாகவும், குமரி பகவதி அம்மன் வீற்றிருக்கும் இடம் என்பதால் பலரும் வந்து வணங்கும் வழிபாட்டுத் தலமாகவும் இரு வேறு தேவைகளை பூர்த்தி செய்கிறது. இங்கு ஏற்கனவே கடலின் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, கடற்கரை ஓரமாக காந்தி நினைவு மண்டபம் உள்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களும் அமைந்துள்ளன.
கன்னியாகுமரிக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டுவது போல, விவேகானந்தர் கேந்திரா கடற்கரையில் கண்ணைக் கவரும் வகையில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது, திருப்பதி வெங்கடாசலபதி கோவில். பக்தர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பட்ட மக்களையும் கவரும் வகையில் கடற்கரையோரமாக அமைந்திருக்கும் இந்த ஆலயம், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி கட்டி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆந்திராவில் ஏழு மலைகளால் சூழ்ந்த இடத்தில் திருப்பதி வெங்கடாசலபதி வீற்றிருப்பதால், அவரை 'ஏழுமலையான்' என்று அழைக்கிறோம். அதுபோல கன்னியாகுமரியில் கடற்கரை ஓரமாக கடல் அலை ஓசைகளுக்கு அருகாமையில் வீற்றிருப்பதால் இத்தலத்தை 'கடல் திருப்பதி' என்று பக்தர்கள் அழைக்கின்றனர். திருப்பதியைப் போல, கன்னியாகுமரியில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்ததற்கும் சில காரணம் சொல்லப்படுகிறது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருமலையில் உள்ள திருப்பதி கோவில் உலக புகழ்பெற்றது. சாதாரண நாட்களில் கூட, இந்த ஆலயத்திற்கு சில லட்சம் பக்தர்கள் சாமியை தரிசிக்கிறார்கள். அதுவே விழா காலங்களில் லட்சோப லட்சம் பக்தர்கள் திரள்வார்கள். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை நல்லபடியாக அமைவதாலும், வேண்டுதல் நிறைவேறுவதாலும் அங்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஒரு மாத உண்டியல் வருமானம் மட்டும் ரூ.100 கோடியை தாண்டுகிறது. கூட்டமும் கட்டுக் கடங்காமல் வருவதால் இந்த கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்தியா முழுவதும் பல இடங்களில் திருப்பதியில் உள்ளதை போன்று கோவில் கட்ட முடிவு செய்தது. அந்த வகையில் உருவானது தான் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவில்.
கோவிலின் மேல்தளத்தில் கடலை நோக்கியபடி சுவாமி எழுந்தருளியுள்ளார். அதாவது சன்னிதியில் 12 அடி உயரத்தில் வெங்கடாசலபதியும், எதிரே உள்ள சன்னிதியில் கருடாழ்வார் 3 அடி உயரத்திலும், மூலவருக்கு வலதுபுற சன்னிதியில் பத்மாவதி தாயார் 3½ அடி உயரத்திலும், இடதுபுற சன்னிதியில் ஆண்டாள் 3½ அடி உயரத்திலும் அருள்பாலிக்கின்றனர். இதன் மேற்புற அமைப்பு மிகவும் பிரமிப்பாக இருக்கும். மேல்தளத்துக்கு செல்ல இருபுறமும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. வயதானவர்கள் ஏறிச்செல்ல சிரமமாக இருந்ததால் அவர்களுக்கு லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மூலவருக்கு எதிரே கருடாழ்வாருக்கு பின்புறம் பலிபீடம், 41 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் சீனிவாச கல்யாண மண்டபம், தியான கூடம், அன்னதான மண்டபம், அலுவலக அறைகள் உள்ளன. மேலும் 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் சீனிவாச கல்யாண மண்டபம் விசாலமாக அமைந்துள்ளது. நான்கு மாடவீதிகள் அலங்கார கற்கள் பதிக்கப்பட்டு காட்சி அளிக்கிறது. மேல்தளத்தில் உள்ள கொடிமரம், பலிபீடம் கீழ் தளத்தில் பூமியை தொடும் வகையில் கட்டப்பட்டுள்ளன.
திருப்பதி கோவிலில் பிரமோற்சவம், ரத உற்சவம், தீர்த்தவாரி, புஷ்கரணி, சீனிவாச கல்யாணம், ஆர்ஜித சேவை, சுப்ரபாதம் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் கன்னியாகுமரியில் எழுந்தருளி இருக்கும் வெங்கடாசலபதி கோவிலிலும் நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதுபோக திருப்பதி லட்டு கன்னியாகுமரியிலும் கிடைக்குமா? முடி காணிக்கை வசதி செய்து தர வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தரிசன நேரம், பூஜை விவரம்
கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு அடைக்கப்படும். இடையில் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை, மதியம் 12 மணியில் இருந்து 12.30 மணி வரை, மாலை 5 மணியில் இருந்து 5.30 மணி வரை நடை அடைக்கப்பட்டிருக்கும். மற்ற நேரங்களில் சுவாமியை தரிசனம் செய்யலாம். தினமும் இரவு 8 மணிக்கு நடையை அடைப்பதற்கு முன்பு பள்ளியறை பூஜை நடைபெறும்.
நடை திறக்கப்பட்ட நேரத்தில் சுப்ரபாதம், விஸ்வரூப ஸர்வ தரிசனம், தோமலை, கொலுவு, அர்ச்சனை, நைவேத்யம், பாலி, சாற்றுமுறை, ஏகாந்த சேவை போன்றவை நடைபெறும். வெள்ளிக்கிழமை அன்று சகஸ்ரநாம அர்ச்சனை, மூலவர் திருமஞ்சனம் விசேஷமாக இருக்கும்.
தை மாதம் வருஷாபிஷேகம், கார்த்திகை மாதம் பவித்ர உத்சவம், வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறும்.

புரட்டாசி மாத வழிபாடு சுவாமிக்கு உகந்த வழிபாடாக கருதப்படுகிறது. சத்தியலோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வந்து பிரம்மா, ஏழுமலையானுக்கு திருவிழா நடத்துவது பிரமோற்சவம். எந்த கடவுளுக்கும் இல்லாத வகையில் திருப்பதி வெங்கடாசலபதிக்கு அதிக விழாக்கள் நடத்தப்படுகிறது. அங்குள்ள கோவிலில் தினமும் காலை, மாலையில் உற்சவர் மலையப்பசாமி வலம் வருவார். இதேபோல் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதிக்கு விழாக்கள் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.
அமைவிடம்
கன்னியாகுமரியில் இருந்து முட்டப்பதி, சின்னமுட்டம் துறைமுகத்துக்கு செல்லும் சாலையில் விவேகானந்த கேந்திரா வளாகத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. இங்கு செல்ல குறிப்பிட்ட நேரத்தில் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதுதவிர கன்னியாகுமரியில் இருந்து கோவிலுக்கு ஆட்டோ, வேனிலும் சுற்றுலாப்பயணிகள் செல்லலாம். வாகனங்கள் நிறுத்துவதற்கு கோவிலில் விசாலமான இடவசதி இருக்கிறது. இங்கு பூஜை உள்ளிட்ட எதற்கும் கட்டணம் வசூலிப்பது கிடையாது.
குடும்பத்துடன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உணவருந்த வசதியாக மண்டபம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
- மேற்கு நோக்கி உள்ள சிவலாயத்தை வணங்கினால், 100 சிவாலயத்தை வணங்கியதற்கு சமம் என்பர்.
- சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது.
முற்பிறவியில் செய்த பாவத்தால் இப்பிறவியில் தீராத துன்பங்களை அனுபவித்து அவதிப்படுபவர்கள், சிவாலயங்களுக்கு சென்று முறையாக வழிபட்டால் தங்கள் முற்பிறவி பாவங்களில் இருந்து விடுபடலாம் என்பது முன்னோர் கூற்று.
முற்பிறவி பாவங்களை போக்கும் சிவாலயங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தாலும் இதில் முக்கிய இடத்தை பிடிக்கும் சிவாலயமாக நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது.
குறிப்பாக மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வை அடைந்து அனைத்து பேறுகளையும் பெற சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரை தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது வழிபட வேண்டும்
சரக்கொன்றை மலர்கள்
மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ஒரு அற்புத ஆலயம்தான், நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள சீயாத்தமங்கை சிவாலயம் ஆகும். மேற்கு நோக்கி உள்ள சிவலாயத்தை வணங்கினால், 100 சிவாலயத்தை வணங்கியதற்கு சமம் என்பர்.
சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சிவனுக்கும், அன்னைக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. சிவனுக்கு 5 அடுக்கு கோபுரமும், அன்னைக்கு இரண்டு அடுக்கு கோபுரமும் காணப்படுகிறது. முடிகொண்டான் ஆற்றுக்கு வடகரையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. முற்காலத்தில், சரக்கொன்றை மலர்கள் சூழ்ந்த வனமாக இருந்தது சீயாத்தமங்கை பகுதி. மலர்களின் நறுமணத்தை அறிந்து மகிழ்ச்சியுடன் இந்த தலத்துக்கு வந்தார் சிவபெருமான். அதன் பிறகு இங்கேயே தங்கியிருந்து ஆசி வழங்க தொடங்கினார்.
சிவலிங்க திருமேனியில் சிலந்தி
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலநக்க நாயனாரும், அவரின் மனைவி மங்கையர்கரசியாரும் அவதரித்தது இந்த தலத்தில்தான். இந்த தம்பதிகள் தினமும் அயவந்தீஸ்வரரை, கொன்றை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம். ஒருநாள் சிவபூஜையின்போது, சிவலிங்கத் திருமேனியில் சிலந்தி ஒன்று ஊர்வதை கவனித்தார், மங்கையர்கரசியார்.
எம்பெருமான் உடலில் சிலந்தியா? அதை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். ஆனால் அதை எப்படி அகற்றுவது? என அவருக்கு புரியவில்லை. எனவே வாயால் ஊதினார். சிலந்தி அங்கிருந்து செல்லவில்லை. எனவே மீண்டும், மீண்டும் பலங்கொண்டபடி முயற்சி செய்தார். அதைக் கண்ட திருநீலநக்கருக்கு கோபம் வந்தது.
மனைவியை விட்டு சென்றார்
"உன்னுடைய எச்சிலை இறைவன் மீது தெறிக்க விட்டு விட்டாய். உன் எச்சில் இறைவன் மீது பட்டுவிட்டது. இந்த செயல் ஆகம விதிகளை மீறியது. நீ ஆண்டவனை மதிக்காமல் விதிகளை மீறிவிட்டாய்" என்று மனைவியைக் கண்டித்தார். மனைவியை கோபத்தோடு அங்கேயே விட்டு விட்டு தான் மட்டும் இல்லம் திரும்பினார்.
மங்கையர்கரசியோ, இறைவனை பணிந்து அங்கேயே அமர்ந்து கொண்டார். "இறைவா நான் செய்தது தவறு என்றால், என்னை மன்னித்து விடு. என் கணவர் என்னை விட்டு பிரியும்படி செய்து விடாதே" என சிவபெருமானே கதி என இருந்தார்.
அன்னையாக ஏற்றார்
அன்று இரவு திருநீலநக்கர் கனவில் தோன்றினார் இறைவன். "திருநீலநக்கரே உம் மனைவி என்னிடம் தாயுள்ளத்துடன், நடந்து கொண்டார். விடிந்ததும் ஆலயத்துக்கு வந்து என் திருமேனியை வந்து பார்்" என்றார். விழித்தெழுந்த திருநீலநக்கர் விடியும் முன்பே கோவிலுக்கு ஓடினார். கோவிலில் கருவறையில் இருந்த சிவபெருமானின் லிங்கத்திருமேனியைக் கண்டார். லிங்கத் திருமேனியில் மங்கையர்கரசியாரின் எச்சில்பட்ட இடத்தை தவிர மற்ற இடங்களில் எல்லாம் சிலந்தி கடித்து புண்ணாகியிருந்தது. இறைவனுக்கு நேர்ந்த துயரை கண்டு திருநீலநக்கர் கண் கலங்கினார். .
"சிவபெருமானே என்னை மன்னித்து விடுங்கள்" என இறைவனை வணங்கி நின்றார். அதன் பின் சிவபெருமான் பழைய ரூபத்துக்கு வந்தார். திருநீலநக்கரும் அவரது மனைவியும் சிவபெருமான் முன்பு விழுந்து வணங்கினர். தன் மனைவி மங்கையர்கரசியை தனது அன்னையாக அந்த இறைவனே ஏற்றுக்கொண்டதை எண்ணி உள்ளம் பூரித்தார்.
மங்கையர்கரசியாரை தன்னுடன் அழைத்துக்கொண்டு மீண்டும் வீட்டுக்கு சென்றார். இந்த சம்பவத்திற்கு பிறகு சிவபெருமான் மேலும் போற்றி வணங்கப்பட்டார். இத்தலத்து சிவபெருமானுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
கோவில் உட்புறத்தோற்றம்
சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு கிழக்கே சூரிய தீர்த்தமும், மேற்கே சந்திர தீர்த்தமும் உள்ளது. இந்த குளத்தில் குளித்து அருகில் உள்ள அரச மரத்தை சுற்றி வந்தால் திருமண தடை நீங்குகிறது. இந்த ஆலயம் ருத்ர வியாமளா தந்தரம் ஆகமத்தில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்குள் நுழைந்ததும் திருநீலநக்க நாயனார், மங்கையர்கரசி ஆகியோர் உள்ளனர்.
மறுபுறம் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் உள்ளனர். மூலஸ்தானத்துக்கு செல்லும் முன்பு துவார பாலகரையும் விநாயகர், தண்டாயுதபாணியையும் தரிசிக்கலாம். அர்த்தநாரீஸ்வரர், துர்க்கையம்மன், பிட்சாடனர், பிரம்மன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன கணபதி, கவுரி, அகத்தியர், மகாவிஷ்ணு, அனுமன் ஆகியோரது திருமேனிகளும் உள்ளன.
மூல நட்சத்திரம்
தனியாக இருக்கும் அன்னை சன்னதிக்குள் நுழைந்தால், அங்கு விநாயகர், முருகன், நந்தி, பைரவர், சண்டிகேஸ்வரி, துவாரக பாலகிகள் உள்ளனர். வைகாசி மூல நட்சத்திர நாளில் திருநீலநக்க நாயனாருக்கு குருபூஜை சிறப்பாக நடக்கிறது.
முற்காலத்தில் செட்டிநாடு எனப்படும் காரைக்குடியில் இருந்து தொழில் நிமித்தமாக நாகப்பட்டினம் நோக்கி மக்கள் நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது மெல்ல இருள் படர்வதும், வெயில் அடிப்பதும், மழை பெய்வதுமாக இருந்தது. இதனால் அந்த பயணிகள் வழி தெரியாமல் அவதிப்பட்டனர். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு சிறுமி பயணிகள் கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவரின் கையைப்பிடித்தாள்.
சிறுமி வடிவில் அம்மன்
"என்னுடன் வாருங்கள். நீங்கள் செல்லும் இடத்துக்கு வழி காட்டுகிறேன்" என்று அழைத்து சென்றாள். அவளுடைய கண்களில் மின்னிய பிரகாசத்தை கண்டு மெய்சிலிர்த்த பயணிகள். 'யார் இந்த சிறுமி. நம்மை எங்கே கூட்டிச்செல்கிறாள்? என்று நினைத்தாலும், அந்த சிறுமி நமக்கு உதவத்தான் வந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தனர். மொத்த கூட்டமும் அவளை பின் தொடர்ந்தது.
சற்று தூரத்தில் அமைந்திருந்த ஆலயத்தை அந்த கூட்டத்தினர் நெருங்கினர். அதன் பின் பெரியவர் கையை விடுவித்துக் கொண்ட அந்தச் சிறுமி சட்டென மறைந்து போனாள். அனைவரும் அதிர்ந்தனர். சிறுமியாக வந்தது, அந்தக் கோவிலில் அருள்பாலிக்கும் இருமலர்க்கண்ணி அம்மையே என்பதை அறிந்து வியந்தனர். அம்பிகை இருமலர்கண்ணியம்மைக்கு, உபயபுஷ்ப விலோசினி என்ற ஒரு திருநாமமும் உண்டு.
திருமணத்தடை நீக்கும் ஆவணி மூல நட்சத்திர வழிபாடு
சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில் இறைவனின் திருமேனியில் சிலந்தி ஊர்ந்ததும் மூல நட்சத்திர நாளில்தான். எனவே மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கி நலம்பெற வேண்டிய திருத்தலம் இந்த கோவில் ஆகும்.
ஆவணி மாத மூல நட்சத்திர நாளில் இங்கு நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை தரிசித்து அந்த நாளில் நடைபெறும் ருத்ர வியாமளா தந்திர பூஜையில் பங்கேற்றால் திருமணத்தடை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.
குழந்தை பாக்கியம்
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பவுர்ணமியில் இந்த கோவிலில் உள்ள சூரிய-சந்திர தீர்த்தத்தில் நீராடி அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது. குழந்தை பாக்கியம், கல்வி, திருமணம் வேண்டுவோர் 5 பவுர்ணமிகளில் சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கும். இந்த கோவில் தினமும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கோவிலுக்கு செல்வது எப்படி?
சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து அங்கிருந்து நாகை- கும்பகோணம் சாலையில் உள்ள திருமருகலுக்கு சென்று திருமருகலில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலை அடையலாம்.
தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்களும் நாகப்பட்டினத்துக்கு வந்த மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம். நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 13 கி.மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது.
- இந்த கோவில் இறைவனை வழிபடுவோருக்கு திருமணத்தடை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- இத்தலம் வரலட்சுமி நோன்பு தோன்றிய தலம் எனக் குறிப்பிடப்படுகிறது.
நாகை மாவட்டம் திருமருகலில் பிரசித்தி பெற்ற ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. அப்பர் பெருமானாலும், திருஞானசம்பந்த பெருமானாலும் பாடல் பெற்ற இந்த கோவில் இறைவனை வழிபடுவோருக்கு திருமணத்தடை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அரவம் தீண்டி இறந்தவரை ஞானசம்பந்த பெருமான் பதிகம் பாடி உயிர்ப்பித்து, இறைவனின் முன்னிலையில் திருமணம் செய்து வைத்த தலம், வறுமை போக்கும் தலம், மகாலட்சுமி தாயார் தவமிருந்து மகாவிஷ்ணுவை அடைந்த தலம், சனி கிரகத்தின் உக்கிரம் போக்கும் தலம், பிரம்மதேவர் தவமியற்றிய தலம் என பல ஆன்மிக சிறப்புகளை கொண்ட இக்கோவில் பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளது. இக்கோவில் இறைவன் மாணிக்க வண்ணர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
5 நிலை ராஜகோபுரம்
வடமொழி பெயராக இறைவனுக்கு ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயர் விளங்குகிறது. அன்னை ஆதிசக்தி வண்டுவார்குழலி என்ற திருப்பெயருடன், தனி சன்னதியில் தெற்கு நோக்கி காட்சியளிக்கிறார். இந்த கோவில் அன்னைக்கு வடமொழி பெயராக ஆமோதள நாயகி என்ற பெயரும் உள்ளது.
கோச்செங்கோட்சோழனின் திருப்பணியுடன் மாடக்கோவிலாக அமைந்துள்ள இக்கோவில் இரு பிரகாரங்கள், 5 நிலை ராஜகோபுரம், அதன் எதிரே நீராழி மண்டபத்துடன் கூடிய தீர்த்தம் என எழில் சூழ்ந்த திருத்தலமாக உள்ளது. இத்தலம் மருகல் என்ற வாழை நிறைந்திருந்த பகுதி என்பதால், இப்பகுதிக்கு திருமருகல் என பெயர் ஏற்பட்டது.
தற்கொலைக்கு முயன்ற மன்னன்
முன்னொரு காலத்தில் மருகல் நாட்டை குசகேது என்ற மன்னன் ஆட்சி செய்துள்ளார். ஒருமுறை இப்பகுதியில் காடு திருத்தும் பணி நடந்தபோது, சுயம்புவாக தோன்றி இருந்த சிவலிங்க திருமேனியின் மீது மண்வெட்டி பட்டு ரத்தம் பீறிட்டுள்ளது. இதை அறிந்த மன்னர் ஓடி வந்து பார்த்தபோது அந்த பகுதியில் இறைவன் இருப்பதை அறிந்தார். பின்னர் அந்த இடத்தில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
நீதி நெறி தவறாத குசகேது மகாராஜாவின் ஆட்சி காலத்தில், விதியின் பயனாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. 9 ஆண்டுகள் மழையில்லாததால் மக்கள் மிகுந்த துயரத்துக்குள்ளாகினர். பசிப்பிணியாலும், வாட்டிய வறுமையாலும் மக்கள் நீதி நெறிகளை புறந்தள்ளினர். இதனால் மனமுடைந்த மன்னன் குசகேது, மக்களின் பசியை போக்க முடியாமல், மக்களை நீதி நெறியுடன் நடத்த முடியாமல் வாழ்வதை விட இறப்பதே மேல் எனக் கருதி தூக்கிட்டு் தற்கொலைக்கு முயன்றார்.
தன்னலம் கருதாமல், தன் குடிமக்களின் நலனுக்காக தன்உயிரையும் துறக்க துணிந்த மன்னனைத் தடுத்து, சிவகணங்களுடன் காட்சியளித்த சிவபெருமான், மருகல் நாட்டின் வறுமை தீர திருமருகல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாணிக்க மழை பெய்ய செய்து மக்களின் வறுமையை போக்கிய வள்ளல் என்பதால் இத்தல இறைவனுக்கு அருள்மிகு மாணிக்கவண்ணர் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாம்பு தீண்டியது
வைப்பூரைச் சேர்ந்த வணிகர் ஒருவருக்கு 7 பெண் பிள்ளைகள். ஆண் மகன் இல்லாத அவர், தன் தமக்கையின் மகனை தன்னுடன் அழைத்து வந்து வளர்த்துள்ளார். மேலும் தன் பெண் பிள்ளைகளில் ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செய்து வைப்பதாகவும் தமக்கைக்கு அவர் வாக்களித்திருந்தார். காலப்போக்கில் தனது வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய அந்த வணிகர் தனது 7 மகள்களில் 6 மகள்களை செல்வந்தர்களை தேடிப்பிடித்து மணம் செய்து வைத்தார்.
தன் தந்தையின் வாக்குத் தவறிய இச்செயலைக் கண்டு வருந்திய 7-வது பெண், தன் தந்தை தன்னையும் தன் அத்தை மகனுக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார் என அறிந்து தன் அத்தை மகனுடன் மதுரைக்கு சென்று அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தாள். அதன்படி அவர்கள் சென்றபோது வழியில் இக்கோவிலின் தெற்குவீதியில் அவர்கள் தங்கி இருந்தபோது பாம்பு தீண்டி மணமகன் உயிரிழந்தார். இதனால் பெரும் துயரம் அடைந்த மணமகள் கண்ணீர் விட்டு கதறி அழுதாள்.
திருமணம்
அந்த பெண்ணின் அழுகுரல், அங்கு தங்கியிருந்த ஞானக் குழந்தையாம் திருஞானசம்பந்தரின் செவிகளை அடைந்தது. அப்பெண்ணை சந்தித்து, அவளது துயரை கேட்ட திருஞானசம்பந்தர், மாணிக்கவண்ணரின் திருவருளை வேண்டி பதிகம் பாடி இறந்து கிடந்த மணமகனை உயிர் பிழைக்க செய்தார்.
பின்னர் இறைவன் திருவருள்படி வண்டுவார்குழலி-மாணிக்கவண்ணர் முன்னிலையில் வன்னி மரத்தையும், கிணற்றையும் சாட்சியாகக் கொண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. இதனால் இத்தலம் திருமணத்தடை நீக்கும் தலமாக விளங்குகிறது.
புராண காலத்தில் முனிவர்கள் பலர் ஒன்று கூடி கங்கை கரையில் வேள்வி மேற்கொள்ள திட்டமிட்டனர். அந்த வேள்வியின் முதன்மையான பயனை மும்மூர்த்திகளில் யாருக்கு அர்ப்பணிப்பது என்பதில் அவர்களுக்கிடையே பேதம் ஏற்பட்டது. பின்னர் பிரம்மனின் மகனான பிருகு முனிவரை மூன்று உலகங்களுக்கும் அனுப்பி, தங்கள் கேள்விக்கு விடையறிந்து வரச்செய்ய முடிவெடுத்தனர்.
திருமால் மார்பில் உதைத்த முனிவர்
அதன்படி பிருகு முனிவர் வைகுண்டம் சென்றார். அங்கு, திருமகளோடும், நித்திய சூரியர்களோடும், விஷ்வக்நேசர் முதலியரோடு வீற்றிருந்த திருமால், பிருகு முனிவரின் வரவை கவனிக்கவில்லை. இதனால் பெரும் கோபமடைந்த பிருகு முனிவர், பள்ளி கொண்ட பெருமாளின் திருமார்பில் உதைத்தார். உடனடியாக பிருகு முனிவரை வரவேற்று உபசரிக்கத் தொடங்கிய திருமால், தன்னை உதைத்த முனிவரின் கால்களுக்கு ஏற்பட்ட வலியை போக்க கருதி பிருகு முனிவரின் கால்களையும் பிடித்து விட்டார்.
தன் இருப்பிடமான பெருமாளின் திருமார்பில் உதைத்த பிருகு முனிவருக்குப் பெருமாள் பணிவிடை செய்வதைக் கண்டு கடும் சினம் கொண்ட திருமகள், தான் இருந்த இடத்தை உதைத்தவரை உபசரித்தது நியாயமற்றது எனக் கூறி, தான் இருக்கும் இடம் தேடி வந்து தன்னை அடையும் வரை வைகுண்டத்தை விட்டு விலகி கடும் தவம் செய்ய போவதாகக் கூறி பூலோகம் புறப்பட்டார்.
பல தலங்களைக் கண்ட திருமகள், மாணிக்கவண்ணரின் கோவிலைக் கண்டார். இத்தலமே தன் தவத்துக்கு ஏற்ற தலம் எனக்கருதி திருமருகல் அடைந்தார். மாணிக்கவண்ணர் கோவிலின் கிழக்குப் பக்கத்தில் குளத்தை ஏற்படுத்திய திருமகள், அக்குளத்தில் தீர்த்தமாடி வில்வங்களைக் கொண்டு மாணிக்கவண்ணரை பூஜித்தார்.
வரலட்சுமி நோன்பு
ஆவணி மாதம் பவுர்ணமி திதியுடன் கூடிய வெள்ளிக்கிழமை நாளில், மாணிக்கவண்ணரின் திருவருளால், திருமால் திருமகளை சந்திக்க திருமருகல் வந்தார். வண்டுவார்குழலியுடன் காட்சியளித்த மாணிக்கவண்ணர், திருமாலையும், திருமகளையும் இணைத்து வைத்து அருள்புரிந்தார் என்பது இத்தலத்து ஐதீகம்.
இதன்படி இத்தலமே வரலட்சுமி நோன்பு தோன்றிய தலம் எனக் குறிப்பிடப்படுகிறது. மகாலட்சுமி தாயார் உருவாக்கிய தீர்த்தமாதலால், இத்தீர்த்தம் அவரது பெயராலேயே மகாலட்சுமி தீர்த்தம் என்றே விளங்குகிறது.
குடமுழுக்கு
மேலும் மன பேதங்களால் பிரிந்த தம்பதிகள் இத்தலத்தில் மகாலட்சுமி தீர்த்தத்தில் நீராடி, மாணிக்கவண்ணரையும், வண்டுவார்குழலி அம்மையும் வழிபட்டால் மீண்டும் கூடி வாழ்வது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோவிலில் மூலவர் சன்னதிக்குச் செல்லும் பாதையில் சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இங்குள்ள சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.
இக்கோவிலின் முக்கியப் பெருவிழா, சித்திரை திருவிழா ஆகும். இத்திருவிழாவின் 7-ம் நாளில் செட்டிப்பெண்- செட்டிப்பிள்ளை திருமணமும், மாலையில் மணக்கோலத்துடன் தம்பதியர் பல்லக்கில் வீதிவலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். தற்போது இந்த கோவிலில் குடமுழுக்கு விழா திருப்பணிகள் தொடங்கி உள்ளன.
கோவிலுக்கு செல்வது எப்படி?
சென்னையி்ல் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தா்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வர வேண்டும். பின்னர் அங்கிருந்து நாகூர் திட்டச்சேரி வழியாக திருமருகலை அடைந்து ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று தாிசனம் செய்யலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.
- இக்கோவிலில் 4 நிலை ராஜகோபுரம் உள்ளது.
- இக்கோவிலில் 5 தீர்த்தங்கள் உள்ளன.
சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது, அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்று, சந்திரன் சாபம் தீர்த்த தலம், ஆதிசங்கரரால் ஶ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள காமக்கூர் என்ற காமத்தூர் சந்திரசேகரசுவாமி திருக்கோவில்.
இந்தக் கோவில், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணிக்கு அருகிலுள்ள காமக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமாகும். மூலவர் இளம்பிறைநாதர், பிறைசூடிய பெருமான், சந்திரசேகர சுவாமி என்ற பெயர்களாலும், அம்பாள் அமிர்தாம்பிகை என்ற திருநாமத்துடனும் அழைக்கப்படுகிறார்கள். அருணகிரிநாதர் தனது திருப்புகழ் பாடல்களில் இக்கோவிலின் முருகப்பெருமானைப் பற்றிப் பாடியுள்ளார். இக்கோவில் தேவார வைப்புத் தலமாகவும் கருதப்படுகிறது. இவ்வாலயம் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக குறிப்புகள் சொல்கின்றன. ஆதிசங்கரரால் ஸ்ரீசக்கர யந்திரம் இங்கே ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது என்பதில் இருந்து இக்கோவிலின் பழமையை உணர முடியும்.
ஒரு முறை இந்தக் கோவிலின் வழியாக ஒருவர், தன் குடும்ப உறுப்பினர் அஸ்தி கலசத்துடன் காசிக்கு பயணமாகச் சென்றார். அப்போது கலசத்தில் இருந்த எலும்பு துண்டுகள் அரளி மலர்களாக மாறியது. எனவே இந்த ஆலயம் காசிக்கு நிகரான தலமாக போற்றப்படுகிறது. காசியில் செய்யும் தர்ப்பணக் காரியங்களை இங்கும் செய்யலாம் என்கிறார்கள்.
ஒரு முறை ஜெயம் கொண்ட சோழனின் கனவில் சிவபெருமான் தோன்றினார். கனவில் அவர் கூறியபடிதான், மன்னன் இந்த ஆலயத்தைக் கட்டித் திருப்பணிகள் செய்ததாக சொல்லப்படுகிறது. இவ்வாலய இறைவனை, முருகப்பெருமான், சந்திரன், அர்ச்சுனன், மன்மதன், ரதி, தசரதன், விவஸ்வன் என்ற மன்னன், காமகோடி என்ற பெண்மணி ஆகியோர் வழிபட்டு, தங்களின் பாவங்கள் நீங்கப் பெற்றுள்ளனர்.
தட்சனின் சாபத்தில் இருந்து விடுபட சந்திரன் வழிபட்ட தலம் இந்த காமக்கூர் சிவன் கோவில். இந்தத் தலத்தில் அருள்பாலிக்கும் ஈசன், சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை நிவர்த்தி செய்ததால், 'சந்திரசேகரர்' என்ற திருநாமம் இவருக்கு வந்தது. பழங்காலத்தில் காமநகர் என்றும், காமத்தூர் என்றும் அழைக்கப்பட்ட இந்த இடம், பின்னர் காமக்கூர் என மாறியது. காமாட்சி அம்மை சன்னிதி உள்ளது. எனவே பழங்காலத்தில் 'காமத்தூர்' என்று பெயர் பெற்றது.
கோவில் அமைப்பு:
இக்கோவிலில் 4 நிலை ராஜகோபுரம் உள்ளது. துவஜஸ்தம்பம், நந்தி மற்றும் விநாயகர் சன்னிதி நுழைவு வாசலுக்குப் பிறகு உடனடியாகக் காணலாம். அடுத்ததாக கருவறையில் மூலவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தனிச் சன்னிதியில் அன்னை அமிர்தாம்பிகை அருளாசி தருகிறார். அவர் நின்ற தோரணையில் இருக்கிறார். கோவில் வளாகத்தில் முருகன் சன்னிதி உள்ளது. முருகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் வடக்கு நோக்கி இருக்கிறார். அவருக்கு ஆறு முகங்களும், 12 கைகளும் உள்ளன. தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோவிலிலும் இதேபோன்ற முருகன் சிலை உள்ளது. திருப்புகழ் பாடல்களில் இந்த முருகப்பெருமான் போற்றப்பட்டுள்ளார்.
கோவில் வளாகத்தில் காமாட்சி தேவி சன்னிதி உள்ளது. இவளை 'திரிபுரசுந்தரி' என்றும் அழைப்பர். ஒரு கையில் பூவும், மறு கையில் கரும்பும் ஏந்தியபடி இருக்கிறாள். ஆதிசங்கரர், இந்த அன்னையின் சன்னிதியில் ஸ்ரீ சக்கரத்தை நிறுவி இருக்கிறார். இந்த அன்னை சன்னிதியின் துவாரபாலாகியின் சிலைகளில், பல இடங்களில் தட்டும்போது பல்வேறு இசைக் குறிப்புகள் வெளிப்படுகின்றன. இந்த அன்னையின் சன்னிதிக்கு எதிரே, பச்சைக் கல்லால் ஆன யாழியைக் காணலாம்.
கோவில் வளாகத்தில் நடராஜர் சன்னிதி உள்ளது. இங்கு நடராஜப் பெருமானின் தோற்றம் மற்ற இடங்களில் இருந்து வேறுபட்டது. இங்கே அவரது இடது கால் தரையில் உள்ளது. வலது கால், இடது காலுக்கு பின்புறம் மடங்கிய வடிவத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வகையான நடன முத்திரை 'சதுர தாண்டவம்' என்று அறியப்படுகிறது. நடராஜருக்கு அருகில் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கிறார். கோவில் வளாகத்தில் சகஸ்ர லிங்கமும் உள்ளது. இக்கோவிலில் 5 தீர்த்தங்கள் உள்ளன. தினமும் இரண்டு முறை மட்டுமே பூஜை செய்யப்படுகிறது.
சிவாலய காவலரான பைரவர் கம்பீரமாக நாய் வாகனத்துடன் காட்சியளிக்கிறார். உலகின் இயக்கத்தைச் சமநிலைப்படுத்தும் நவக்கிரக நாயகர்களின் சன்னிதியும் இங்கே அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் லிங்கத் திருமேனியாகக் காட்சி தருகிறார் சிவபிரான். தட்சனின் சாபத்தால் கலைகளை இழந்து வருந்திய சந்திரனுக்கு சாப நீக்கம் தந்தவர் இவர்தான்.
சந்திரனின் கலைகளில் ஒன்றை தன் சிரத்தில் ஏற்று, சந்திரசேகரராகத் திருநாமம் கொண்டார் இந்த மூலவர். சோமவாரம் தான் சிவ வழிபாட்டுக்கு சிறந்த நாள். சோமன் (சந்திரன்) வழிபட்டுப் பலனடைந்ததன் காரணமாக, திங்கட்கிழமைகளில் சந்திரசேகரைத் தரிசித்து வழிபடுவது பெரும் பலன் அளிக்கும். சந்திரன் ராசிநாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள் இந்த பெருமானைத் தரிசித்து வழிபட்டால் தடைகள் விலகப் பெறுவார்கள். ஜாதக ரீதியாகச் சந்திரன் நீச்சம் அடைந்தவர்கள் இங்கு வழிபட்டால் தோஷ நிவர்த்தி ஏற்படும்.
இசை, ஓவியம், நடனம், கவிதை உள்ளிட்ட கலைகளில் சிறப்படைய விரும்புபவர்கள் திங்கட்கிழமை தினங்களில் இங்கு வந்து வெண்ணிற மலர்களால் மாலை சாத்தி வழிபடுவது மேன்மை தரும். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே காமக்கூரில் கோவில் கொண்டிருக்கும் இந்த சந்திரசேகரர் பெருமானை, ஒருமித்த சிந்தனையுடன் கைகுவித்து தொழுதால் விருப்பம் அனைத்தும் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.
இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் யெ்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
ஆரணியிலிருந்து 8 கிலோமீட்டர் தெலைவில் உள்ளது, காமக்கூர் திருத்தலம். ஆரணியில் இருந்து ஏராளமான பஸ் வசதிகள் இங்கு செல்ல இருக்கின்றன.
பாலாஜி கணேஷ், சிதம்பரம்.
- இத்திருத்தலத்தில் சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
- செப்பறை நடராஜர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் புராதனம் மிக்கது.
செப்பறை நடராஜர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் புராதனம் மிக்கது. திருநெல்வேலிக்கு அருகே ராஜவல்லிபுரம் கிராமத்தில் அழகிய தாமிரபரணியின் வடகரையில் அழகிய கூத்தர் திருக்கோயிலில் இவர் அருள்பாலிக்கிறார்.
சிதம்பரத்தை ஆண்ட சிங்கவர்மன் என்ற மன்னன் சிதம்பரத்தில் நடராஜர் சிலையைப் பிரதிஷ்டை செய்ய விருப்பம் கொண்டு சோழநாட்டுச் சிற்பியான நமச்சிவாயமுத்து ஸ்தபதியை நடராஜர் சிலை செய்யப் பணித்தான். அழகின் உருவாக விளங்கிய அந்த நடராஜர் சிலை தாமிரத்தில் இருந்தது. அதைப் போன்றதொரு சிலையைத் தங்கத்தில் செய்து பிரதிஷ்டை செய்ய விரும்பி, தாமிரத்திலான முதல் சிலையைப் பிரதிஷ்டை செய்யாமல் காலம் தாழ்த்தினான்.
இறைவனின் திருவிளையாடலால் இரண்டாவதாகச் செய்த சிலையும் தாமிரமாக மாறிவிட்டது. இரவில் சிங்கவர்மனின் கனவில் தோன்றிய இறைவன், 'உன் கண்களுக்கு மட்டுமே நான் தங்கமாகத் தெரிவேன். மற்றவர்கள் கண்களுக்கு நான் தாமிரமாகவே தெரிவேன்..' என்று அறிவுறுத்த, இரண்டாவதாகச் செய்த சிலையைச் சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்து விட்டு, தனது கனவில் இறைவன் இட்ட உத்தரவுக்கிணங்க, முதலில் செய்த நடராஜர் சிலையைச் சிற்பி ஒருவனிடம் கொடுத்துவிடுகிறான் சிங்கவர்மன். சிற்பியின் கனவில் தோன்றிய இறைவன் அச்சிலையை எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி செல்லுமாறு அறிவுறுத்த, நிறைவாக அச்சிலை செப்பறைத் திருக்கோவிலுக்கு வந்து சேர்ந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இத்திருத்தலத்தில் சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நெல்லையப்பர் என்றழைக்கப்படுகிற மூலவரான 'வேண்ட வளர்ந்த நாதர்' சுயம்புமூர்த்தியாக தனிச் சன்னதியில் இருக்கிறார். லிங்கத்தின் நடுவில் அம்பிகை வீற்றிருப்பது இத்திருத்தலச் சிறப்பம்சங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
- இந்தக் கோவிலின் நெல்லையப்பருக்கென்று என்று தனி ராஜன் கோபுரம் இருக்கிறது.
- அம்பாளுக்கு என்று தனி இராஜகோபுரம் இருக்கின்றது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது.
இங்கு பக்தர்களுக்கு காட்சி தரும் சுயம்பு வடிவ லிங்கத்தினை 'நெல்லையப்பர்' என்ற பெயரிலும் 'வேண்ட வளர்ந்தநாதர்' என்ற பெயரிலும் வழிபடுகின்றனர். லிங்கத்தின் மத்திய பகுதியில் அம்பாளின் உருவம் தெரிகின்றது. அபிஷேக சமயத்தின் போது அந்த காட்சியினை தரிசனம் செய்யலாம். சிவபெருமானும், சக்தி தேவியும் ஒன்றுதான் என்பதை இந்த காட்சி உணர்த்துகிறது. இதை உணர்த்தும் மற்றொரு வகையில் பிரதோஷ சமயத்தின் போது இந்த கோவிலில் அம்பாள் சந்நிதிக்கு எதிரே உள்ள நந்தி பகவானுக்கும் பிரதோஷ கால பூஜை நடைபெறுகிறது. இதேபோல் சிவராத்திரி அன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கும், அம்பிகைக்கும் சேர்த்துதான் நான்கு ஜாம அபிஷேகமும், பூஜைகளும் நடத்தப்படும். எந்தவிதத்திலும் சிவனையும், அம்பாளையும் இத்திருத்தலத்தில் பிரித்துப் பார்ப்பதில்லை. சிவனும் சக்தியும் ஒன்று என்பதனை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட தளமாகவே இது அமைந்திருக்கிறது.
இந்தக் கோவிலின் நெல்லையப்பருக்கென்று என்று தனி ராஜன் கோபுரம் இருக்கிறது. அம்பாளுக்கு என்று தனி இராஜகோபுரம் இருக்கின்றது. இரண்டு சன்னிதியை இணைக்கும் சங்கிலியாக நீண்ட மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு தனித்தனி கோவில் போன்ற தோற்றம் ஏற்பட்டாலும் இரண்டும் ஒரே கோவில் தான்.
பொதுவாக எல்லா கோவில்களிலும் நவகிரக சந்நிதியில் புதன் பகவான் கிழக்கு நோக்கித்தான் காட்சி தருகின்றார். இந்த கோவிலில் மட்டும் தனிச்சிறப்பாக வடக்கு பக்கம் காட்சி தருகின்றார். கல்விக்கு அதிபதியான புதன், குபேர திசையான வடக்கு பக்கம் நோக்கி இருப்பதால், மாணவர்கள் இந்த தளத்தில் புதனை வழிபட்டால், உயர்ந்த நிலைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. அதாவது அந்த மாணவர்களுக்கு நல்ல உயர்ந்த சம்பளத்தில், நல்ல வேலை கிடைக்கும். சொந்தத் தொழிலாக இருந்தால் நல்ல வருமானம் கொண்ட தொழிலாக அமையும் என்பது இந்த கோவிலின் நம்பிக்கையாக இருக்கின்றது.
இத்திருத்தலத்தின் மூலஸ்தானத்திற்கு அருகாமையில் ஒரு தனி சன்னிதியில் திருமால் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். திருமால் சிவலிங்கத்தை பூஜை செய்வது போன்ற காட்சி இங்கு உள்ளது. அருகில் இருக்கும் உற்சவரான விஷ்ணு பகவானின் மார்பில் சிவலிங்கம் இருக்கின்றது. திருமாலை இந்த கோலத்தில் காண்பது மிகவும் அரிதானது. தன் தங்கையான அம்பாளை மணந்துகொண்ட சிவபெருமானுக்கு, தன் மார்பில் விஷ்ணு இடம் தந்திருப்பதாக கூறப்படுகிறது. தனது தங்கையை சிவபெருமானுக்கு தாரைவார்த்துக் கொடுத்த தீர்த்த பாத்திரம் இந்த இடத்தில் இருக்கிறது.
கோவில் அமைப்பு
ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது.
கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். இது சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே "ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்" உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில்தான் "தாமிர சபை" உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.
மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலின் உள்ளே மிகப் பெரிய உள் தெப்பம் ஒன்று உள்ளது. இதுபோல் கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தூரத்தில் வெளித்தெப்பம் ஒன்றும் உள்ளது .
தல வரலாறு
பல நூறு வருடங்களுக்கு முன்பு பால் வியாபாரம் செய்து கொண்டிருந்த ராமகோனார் என்பவர் அரண்மனைக்கு பால் கொண்டு போகும் வழியில் கல் ஒன்று அவரின் காலை தடுக்கி விட்டு, கையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்றது. தெரியாமல் தடுக்கி விழுவது என்பது ஒருநாள் மட்டும் நடந்தால் எதிர்பாராதது. தினந்தோறும் நடந்தால்! இதனை பார்த்து பயந்த ராமகோனார் மன்னரிடம் உடனே இந்த விஷயத்தை கூறினார். மன்னர் வீரர்களுடன் அந்த இடத்திற்கு சென்று, கல்லை அகற்ற கோடரியால் வெட்டினார். அந்த சமயம் அந்த கல்லிலிருந்து ரத்தம் கொப்பளித்து வந்தது. அந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் இருந்த அனைவரும் ஒரு நிமிடம் திக்குமுக்காடிய சமயத்தில், ஒரு அசரீரி குரல் ஒலித்தது. அந்தக் கல்லின் அடியில் சுயம்புலிங்கம் இருப்பதாகவும், அந்த லிங்கத்தை மூவராக மூலவராக கோவிலில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் அந்த குரல் ஒலித்தது. அந்த லிங்கத்தை கொண்டு மன்னர் நெல்லையப்பர் கோவிலை எழுப்பியதாக கூறுகிறது வரலாறு.
சிவனும் சக்தியும் ஒன்று என்பதை வலியுறுத்தும் இந்த கோவிலில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து மனப்பூர்வமாக வழிபட்டால் அவர்களின் வாழ்க்கையில் சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமையாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஜாதகத்தில் புதனால் ஏற்படும் தோஷங்கள் நீங்குவதற்கு இந்த கோவிலில் நவகிரகத்தில் உள்ள புதனை வழிபடுவது சிறந்தது.
செல்லும் வழி பேருந்து மூலமாக செல்ல சென்னையிலிருந்து சுமார் 10 மணி நேரங்கள் பயணிக்க வேண்டியிருக்கும். மதுரையில் இருந்து சுமார் 360 கிலோ மீட்டர் தூரத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ளது.
முகவரி:
அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில்,
திருநெல்வேலி 627 001.
திருநெல்வேலி மாவட்டம்.
தொலைபேசி: +91-462-233 9910.
- இத்தலம் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.
- 15 அடி நீளம், 5 அடி உயரத்தில் பெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம் வீரராகவ பெருமாள் கோயில் திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் 59-வது திவ்ய தேசம் ஆகும். இத்தல மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும்.
இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். திருமழிசை பிரான், வேதாந்த தேசிகரும் இத்தலம் மீது பாடல்கள் புனைந்துள்ளனர்.
மூலவர்: எவ்வுள்கிடந்தான் (வீரராகவ பெருமாள்)
உற்சவர்: வைத்திய வீரராகவர்,
தாயார்: கனகவல்லி
தீர்த்தம்: ஹிருதாபநாசினி
ஆகமம்: பாஞ்சராத்ரம்
விமானம்: விஜயகோடி விமானம்
புரு என்ற முனிவர் செய்த யாகத்தின் பயனாக சாலிஹோத்ரர் என்ற முனிவர் பிறந்தார். சாலிஹோத்ரர் இத்தலம் அருகே இருக்கும் குளக்கரையில் ஒரு வருடம் தவம் இருந்தார். ஒரு நாள் (தை மாதம்) தனது பூஜைகளை முடித்துவிட்டு மாவை சுவாமிக்கு நைவேத்யம் செய்தார். அதில் ஒரு பங்கை எடுத்து வைத்துவிட்டு மற்றொரு பங்கை தான் உண்பதற்காக வைத்திருந்தார். (பொதுவாக அதிதிக்கு உணவளித்துவிட்டுதான் அவர் உண்பது வழக்கம்) அப்போது ஒரு வயதான அந்தணர் வந்து உணவு கேட்டார். உடனே ஒரு பங்கைக் கொடுத்தார். முதியவர் தனக்கு இன்னும் பசி தீரவில்லை என்று கூற, மற்றொரு பங்கையும் அவருக்கே கொடுத்துவிடுகிறார் முனிவர்.
அன்று முழுவதும் உபவாசம் இருந்துவிட்டு அடுத்த நாள் முதல் ஒரு வருடம் மீண்டும் தவத்தில் ஆழ்கிறார். ஒரு வருடம் கழித்து இதே போல் பூஜைகளை முடித்துவிட்டு மாவை, சுவாமிக்கு நைவேத்யம் செய்கிறார். ஒரு பங்கை எடுத்து வைத்து விட்டு, மற்றொரு பங்கை, தான் உண்பதற்காக வைத்திருந்தார். யாரேனும் அதிதி வருகிறார்களா என்று பார்த்தார். அப்போது ஒரு வயதான அந்தணர் வந்து உணவு கேட்டார். இவரும் மகிழ்ச்சியாக அந்த மாவைக் கொடுத்தார். முதியவர் உணவை உண்டுவிட்டு படுத்து உறங்க வேண்டி "எவ்வுள்" என்று கேட்டார்.
முனிவரும் தான் படுத்து உறங்கும் இடத்தைக் காட்டி, அவ்விடத்தில் படுத்து உறங்குமாறு அவரை கேட்டுக் கொண்டார். அடுத்த கணமே முதியவர் வடிவத்தில் வந்த திருமால் சயன கோலத்தில் காட்சி அளித்தார். முனிவருக்கு எல்லையில்லா ஆனந்தம். பெருமாளும் முனிவருக்கு வரம் அளிப்பதாக உறுதி அளித்தார். முனிவரும் இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரது பிரச்சினைகளையும் தீர்த்து அருள்பாலிக்கும்படி வேண்டினார். பெருமாளும் அவ்வண்ணமே அருளி இத்தலத்தில் எழுந்தருளினார். அதனால் இத்தலத்துக்கு எவ்வுள் என்றும், இத்தல பெருமாளுக்கு எவ்வுட்கிடந்தான் என்றும் பெயர் வழங்கலாயிற்று.
தர்மசேனர் என்ற அரசருக்கு மகளாக ஸ்ரீதேவித் தாயார் வசுமதி என்ற பெயரில் அவதரித்தார். வசுமதியும் திருமணப் பருவத்தை அடைந்தாள். அப்போது ஒரு நாள் வீரநாராயணன் என்ற பெயரில் வேட்டைக்குச் சென்ற பெருமாள் வசுமதியை மணமுடித்தார். இந்த திருமணத்துக்குப் பிறகுதான் பெருமாளின் பெயர் மாறிற்று. அதுவரை கிங்கிருஹேசன் என்ற பெயராலேயே அழைக்கப்பட்டார்.
இத்தலம் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. ஐந்தடுக்கு ராஜகோபுரம் உள்ள இத்தலம் 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. இத்தல மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும். 15 அடி நீளம், 5 அடி உயரத்தில் பெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தல விமானம் விஜயகோடி என்றும் வனம் விஷாரண்யம் என்றும் அழைக்கப்படுகின்றன.
கனகவல்லி தாயார், கணேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், உடையவர், கோதண்ட ராமர் ஆகியோர் தனிசந்நிதியில் அருள்பாலிக்கின்றனர். லட்சுமி நரசிம்மர், சக்கரத் தாழ்வார் சந்நிதிகளில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் காணப்படும்.
தை பிரம்மோற்சவம், சித்திரை பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும். தை அமாவாசை, தமிழ், ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், சனிக்கிழமை தினங்களில் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும்.
இத்தலத்தில் உள்ள குளம் (தீர்த்தம்) கங்கையைவிட புனிதமானது என்று கூறப்படுகிறது. இந்த ஹிருதாபநாசினி தீர்த்தத்தில் நீராடினால், மனதால் நினைத்த பாவங்கள் அனைத்தும் விலகும். என்பது நம்பிக்கை. நோய் தீர்க்கும் திருக்குளமாக இக்குளம் அழைக்கப்படுகிறது. அவ்வண்ணமே இத்தல பெருமாளும் வைத்திய வீரராகவப் பெருமாளாக அழைக்கப்படுகிறார்.
3 அமாவாசைகளுக்கு பெருமாளிடம் வேண்டிக் கொண்டால் தீராத நோயும் (வயிற்று வலி, கைகால் நோய், காய்ச்சல்) குணமாகும் என்பது நம்பிக்கை. தடைபட்ட திருமணம் நடைபெற, குழந்தை பாக்கியம் பெற, அனைத்து கவலைகளும் நீங்கி சகல ஐஸ்வர்களையும் பெற இத்தல பெருமாள் அருள்பாலிப்பார். உடலில் உள்ள மரு, கட்டி நீங்க தீர்த்தக் குளத்தில் பால், வெல்லம் சேர்ப்பது வழக்கம். கோயில் மண்டபத்தில் உப்பு, மிளகு சமர்ப்பிப்பதும் வழக்கம்.
நோய்களை வீரராகவர் குணப்படுத்துகிறார் என்றால், சிகிச்சையின்போது ஏற்படும் வலிகளையும் வேதனைகளையும் இத்தல தாயார் மெல்ல வருடிக் கொடுத்து ஆறுதல் படுத்துகிறார்.
அமைவிடம்: சென்னையில் இருந்து 47 கிமீ தூரத்தில் உள்ளது.
- அற்புதமான சிறு குன்றின் மீது கோவில் கொண்டுள்ளார் அரங்கநாதர்.
- அனந்த சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு அருகே இருக்கிறது, திருமால்பாடி என்ற கிராமம். இங்கு அரங்கநாதப் பெருமாளாக, திருமால் காட்சி தரும் திருக்கோவில் அமைந்திருக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் சிலை வடிவமாக அருள்புரிந்து வரும் திருமால், இந்த திருமால்பாடியில் குளிர்ந்த ஏரிக்கரையின் மீது அமைந்த குன்று ஒன்றில், அனந்த சயன கோலத்தில், அடியாளர்களுக்கும், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கும் அருள்பாலித்து வருகிறார்.
பல்வேறு புராணங்களை எழுதியவரும், வேதங்களை தொகுத்து வழங்கியவருமான வேதவியாசரின் மகன் சுகபிரம்ம ரிஷி. இவர் கிளி முகம் கொண்டவர். அந்த புராண காலத்தில் இப்பகுதி விரஜாபுரி என்று அழைக்கப்பட்டது. வைகுண்டத்தில் பிரவாகம் கொண்டு பாயும் புண்ணிய நதியின் பெயர் விரஜை. இதன் பெயரில் அமைந்த இடம்தான் விரஜாபுரி. இங்குள்ள குன்றின் மீது சுகபிரம்ம மகரிஷி, திருமாலை நோக்கி தவம் இயற்றினாா். பல ஆண்டுகளாக அவர் இருந்த தவத்தின் பயனாக, இந்த திருத்தலத்தில் தேவர்களுடன் கூடிய அரங்கநாதனாக, சுகப்பிரம்ம ரிஷிக்கு திருமால் தரிசனம் தந்தார்.
மேலும் வேண்டிய வரம் கேட்கும்படியும் கூறினார். அப்போது தனக்கு 'முக்திப்பேறு வேண்டும்' என்று கேட்டார் சுகப்பிரம்ம ரிஷி. அதற்கு அரங்கநாதர், "இத்தலத்திற்கு அருகில் உள்ள தீர்க்காசலம் என்னும் நெடுமலையில் தவம் புரிந்து வா. என்னுடைய ராம அவதாரத்தின் போது, லட்சுமணன், அன்னை சீதாபிராட்டி, அனுமன் புடைசூழ காட்சி தந்து, முக்திப்பேறு அருள்வேன்" என்று கூறி மறைந்தார். இக்குன்றில் தவத்தை முடித்து, அரங்கநாதரின் கட்டளைப்படி நெடுமலையை அடைந்து, அங்கு மீண்டும் திருமாலைக் குறித்து தவமிருந்தார். பின்னர் ராமச்சந்திர பிரபுவைக் கண்டு, வணங்கி, முக்தி நிலையை எய்தினார் சுகப்பிரம்ம ரிஷி.
இந்த புராண பின்னணியை மனதில் கொண்டு, கி.பி.1136-ம் ஆண்டு பராந்தக சோழனின் மகன் விக்கிரம சோழனால், இக்குன்றில் அரங்கநாதருக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. அது முதல் அடியார்களின் குறைகளை நீக்கி அற்புதமாக அருள்பாலித்து வருகின்றார் அரங்கநாயகி உடனாய அரங்கநாத பெருமாள்.
குளிர்ந்த ஏரி நீரில் பட்டு வீசும் தென்றலும், பூஞ்சோலைகளும் பசுமையான வயல்வெளிகளும் சூழ, அற்புதமான சிறு குன்றின் மீது கோவில் கொண்டுள்ளார் அரங்கநாதர். 108 திவ்ய தேசங்களை நினைவூட்டும் 108 படிகளைக் கடந்து இந்த குன்றின் மேல் உள்ள இறைவனைக் காணச் செல்ல வேண்டும். படிகளைக் கடந்து மேலே சென்றதும், மேற்குப்புறமாக வசந்த மண்டபம் காணப்படுகின்றது. அடுத்ததாக, மூன்று நிலைகளும் ஏழு கலசங்களும் கொண்ட ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. முன் மண்டபத்தின் இருபுறமும் கருங்கல் திண்ணைகள். உள்ளே மகா மண்டபத்தில் நேராக தென்திசையை பார்த்தபடி வீர ஆஞ்சநேயர் தரிசனம் அளிக்கின்றார்.
சற்று இடதுபுறம் திரும்பினால், தாயார் அரங்கநாயகியின் சன்னிதியை தரிசிக்கலாம். இந்த தாயார் அலங்கார ரூபத்தில், சர்வ மங்களங்களையும் அருளும் சக்தியாக திருவருள் பொழிகின்றாள். அவருக்கு அருகில் நரசிம்மரது தரிசனத்தைக் காணலாம். மகாமண்டபம் கடந்து, பெரிய அந்தராளத்தை அடைந்தால், கருவறையில் ஒய்யாரமாக சயனித்திருக்கும் அரங்கநாதப் பெருமாளை கண்குளிரக் கண்டு தரிசிக்கலாம். 15 அடி நீளமுள்ள ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது, மரக்காலை தலைக்கு வைத்தபடி, அனந்த சயனத்தில் பெருமாள் படுத்திருக்கிறார். அவரது தலையின் பக்கத்தில் ஸ்ரீதேவியும், கால் அருகில் பூதேவியும் அமர்ந்துள்ளனர்.
அரங்கநாதரின் திருப்பாதங்களின் அருகே பிரகலாதனும், சுகபிரம்ம ரிஷியும் தவக்கோலத்தில் உள்ளனர். பரந்தாமனின் திருமுகமோ பக்தர்களை பார்த்தபடி இருப்பது சிறப்பு. தலைக்கு கீழே இரண்டு விரல்களையும் உள்ளே மடக்கி, மூன்று விரல்களை வெளியில் காட்டியபடி, 'நான் மூவுலகங்களையும் அளந்தவன்' என்று உரைக்கும் தொனியில் காட்சி தருகிறார், அரங்கநாதர். பக்தர்களை பார்த்தபடி இருக்கும் இவரது திருமுகம், பக்தர்களின் மனக் குறைகளை அகற்றி அருள்பாலிக்கும் திறனை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. சிலை வடிவில் உள்ள இந்த அரங்கநாதரின் முன்பாக, உற்சவ மூர்த்தங்களாக ஸ்ரீதேவி, பூதேவி உடனான சங்கு - சக்கரம் ஏந்திய திருமால் சேவை சாதிக்கின்றார்.
அரங்கனின் தரிசனத்தை முடித்ததும், ஆலய பிரகாரத்தை வலம் வருகையில் ஆண்டாளை தரிசனம் செய்யலாம். சன்னிதிக்கு வெளியே தனிச் சன்னிதியில் அரங்கநாதரைப் பார்த்து இருகரங்களையும் கூப்பி தரிசித்த நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வார் இருக்கிறார்.
ஆலயத்தின் வடக்குப்புறம் சிறு வாசல் ஒன்று உள்ளது. அதில் சில படிகள் வழியாக கீழே இறங்கினால் சுனை வடிவில் உள்ள தல தீர்த்தத்தை காணலாம். இந்த தீர்த்தமானது, 'நாரத தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. பாறை மீது நின்றபடி கீழே உள்ள ஏரியையும், சுற்றியுள்ள இயற்கை அழகையும் கண்டு ரசிப்பது பெருமகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தரும். வானர கூட்டங்கள் இங்கு பெருமளவில் உள்ளன. இந்த அரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசலும் அமைந்துள்ளது.
இங்கு சோழர் காலக் கல்வெட்டுகள் பெருமளவில் காணப்படுகின்றன. கி.பி.1140-ல் முதலாம் குலோத்துங்கன், கி.பி. 1135-ல் சகலலோகச் சக்கரவர்த்தி ராஜநாராயண சம்புவராயர், கி.பி. 1529-ல் வீரசிங்கதேவரின் மகனான அச்சுத தேவமகாராயர் ஆகியோரால், இவ்வாலயத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட அநேக வைணவ நிகழ்வுகளும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன. இத்தல மூலவரான அரங்கநாதரையும், தாயார் அரங்கநாயகியையும் வழிபாடு செய்து வருபவர்களுக்கு திருமண பாக்கியம் , குழந்தைப்பேறு விரைவில் உண்டாகும் என்பது நம்பிக்கை. அப்படி தங்களின் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், மூலவருக்கு திருமஞ்சனம் செய்வித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இது தவிர அரசு வேலை, வேலையில் இடமாற்றம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காகவும் இந்த அரங்கநாதரை வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
செஞ்சியில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் உள்ளது வளத்தி என்ற ஊர். இங்கிருந்து தேசூர் செல்லும் சாலையில் சென்றால் அருந்தோடு என்ற கிராமம் வரும். இந்த கிராமத்தின் அருகில்தான் திருமால்பாடி திருத்தலம் உள்ளது.
-பழங்காமூர் மோ.கணேஷ்.
- இந்த கோவில் 2 ஆயிரம் ஆண்டு வரலாற்று பெருமை கொண்டது.
- சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் குடமுழுக்கு நடந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டத்தில் வெண்ணாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது மாறநேரி கிராமம். 2 ஆயிரம் ஆண்டு வரலாற்று பெருமைகளை சுமந்து நிற்கும் இந்த ஊரில் 1,200 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சிவாலயம் அமைந்து உள்ளது.
நிருபகேசரி ஈஸ்வரம் என்று முற்காலத்திலும், பசுபதீஸ்வரர் கோவில் என்று தற்காலத்திலும் இந்த சிவாலயம் அழைக்கப்பெறுகிறது. இந்த சிவாலயம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வரலாற்றில் நீங்கா இடம்
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நேரிவாயில் என்று அழைக்கப்பெற்ற இந்த ஊர் பல்லவர் ஆட்சி காலமான கி.பி. 8 மற்றும் 9-ம் நூற்றாண்டுகளில் மாறநேரி என்ற பெயர் மாற்றத்தை அடைந்தது. தமிழ் இலக்கியம் மற்றும் கல்வெட்டு குறிப்புகள் ஆகியவற்றை தொகுத்து நோக்கும்போது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலம் தொட்டு இந்த ஊர் வரலாற்றில் நீங்கா இடம் பெற்று வந்துள்ளது.
சேரன் செங்குட்டுவன், சங்கால சோழ அரசர்கள், பல்லவ அரசர்களான நந்திவர்மன், நிருபதுங்கவர்மன், முத்தரைய மன்னன் சுவன்மாறன், ராஜராஜ சோழன், முதற்குலோத்துங்கன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகிய மன்னர்களுடனும், அவர்தம் மரபு மன்னர்களுடனும் நெருங்கிய தொடர்புடைய ஊர் என்பதும், பல வரலாற்று நிகழ்வுகள் இங்கு நடந்தேறின என்பதும் அறிய முடிகிறது.
பல பெயர்கள்
நேரிவாயில் என்றும், மாறநேரி என்றும், நந்திபுரம் என்றும் தீன சிந்தாமணி சதுர்வேதிமங்கலம் என்றும் பல பெயர்கள் இவ்வூருக்கு பல்வேறு காலகட்டத்தில் திகழ்ந்தன என்றாலும், மாறநேரி என்ற பெயரே நிலைத்த பெயராக விளங்குகிறது.
நந்திவர்மபல்லவன் என்னும் மூன்றாம் நந்திவர்மனின் மகனான நிருபதுங்கபல்லவன் தன் பெயரால் நிருபகேசரி ஈஸ்வரம் என எடுத்ததே இவ்வூர் சிவாலயமாகும். இக்கோவில் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.
தற்போது இந்த கோவில் சிவகாமசுந்தரி உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவில் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு கற்கோவிலாக விளங்கியுள்ளது. பல்லவ மன்னருக்கு பின்பு வந்த பல அரச மரபினர் காலங்களிலும் இந்த கோவிலில் பல திருப்பணிகள் நடந்துள்ளது.
சிதிலமடைந்த கோவில்
காவிரி மற்றும் வெண்ணாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல முறை இந்த ஊரும், கோவிலும் பாதிப்புக்கு உள்ளாயின என்பது கல்வெட்டு சாசனங்கள் மூலம் அறியப்படும் செய்தியாகும். மேலும் வடபுலத்து கொள்ளையர்களின் படை எடுப்பு காலங்களிலும் இந்த கோவிலுக்கு பல ஊறுகள் நிகழ்வுற்றன. பல்வேறு பேரழிவுகளை சந்தித்தபோதும் பழமையின் எச்சங்கள் பலவற்றை சுமந்த வண்ணம் இந்த கோவில் விளங்குகிறது.
மூலவர் கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம் ஆகிய பகுதிகள் மட்டுமே கருங்கற் கட்டுமானமாகவும் மற்ற அனைத்து பகுதிகளும் செங்கற கட்டுமானமாகவும் இருந்தன. பரிவார தெய்வங்களாக கணபதி பெருமானும், முருகப்பெருமானும் தனித்தனி சிற்றாலயங்கள் பிரகாரத்தில் அமைந்திருந்தன. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் குடமுழுக்கு நடந்துள்ளது.
திருப்பணி
மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள கோவில் நிர்வாகம், திருப்பணி குழுவினர், மாறநேரி கிராமத்தார்கள் மற்றும் சிவபக்தர்கள் விரும்பினர். அதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் ஈடுபட்டனர். மத்திய மந்திரியாக ஜி.கே.வாசன் இருந்தபோது 13-வது நிதி ஆணையத்தின் மூலம் பசுபதீஸ்வரர் கோவில் திருப்பணிக்காக ரூ.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியுடன் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த உபயதாரர்கள் பலர் அளித்த நன்கொடையின் வாயிலாக சுமார் ரூ.1½ கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு 30-ந் தேதி திருப்பணிகள் தொடங்கப்பட்டன.பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த திருப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. பழமை மாறாமல் கருங்கற்களை கொண்டு இந்த கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. சிவகாமசுந்தரி சமேத பசுபதீஸ்வரர் கோவில், மகாலட்சுமி, ரங்கநாதசுவாமி ஆகிய சாமிகள் தனித்தனி சன்னதிகளுடன் காட்சி அளிக்கின்றன. பரிவார தெய்வங்களாகிய விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளும் தனிசன்னதியுடன் காட்சி அளிக்கின்றன. மேலும் சரஸ்வதி, விஷ்ணு துர்க்கை, சிவதுர்க்கை, ஆஞ்சநேயர், கருடாழ்வார் உள்ளிட்ட சாமிகளும் உள்ளன.
சிவகாமசுந்தரி சமேத பசுபதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது.
கோவிலுக்கு செல்வது எப்படி?
சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பூதலூர் அல்லது திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று அங்கிருந்து ஆட்டோ அல்லது வாடகை கார் மூலம் கோவிலுக்கு செல்லலாம். டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன.திருச்சியில் இருந்து திருவெறும்பூர், மாறநேரி வழியாக திருக்காட்டுப்பள்ளிக்கும், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து மாறநேரிக்கும், தஞ்சையில் இருந்து பூதலூர் வழியாக மாறநேரிக்கும், கல்லணையில் (தோகூர்) இருந்து மாறநேரிக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.